Showing posts with label ஆன்மிகம். Show all posts
Showing posts with label ஆன்மிகம். Show all posts

Friday, June 14, 2024

சனிக்கிழமை - ஆலய தரிசனம் - பகுதி 11 !!!

 அருள்மிகு ஶ்ரீ விஜயராகவ பெருமாள் கோவில் திருபூட்குழி, காஞ்சிபுரம் 

திருப்புட்குழி  ஶ்ரீ விஜயராகவ பெருமாள் கோயில்  108 வைணவத் திவ்ய திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் தமிழகத்தில் காஞ்சிபுரத்தில் பாலு செட்டி சத்திரம் என்ற ஊரிலிருந்து தெற்கே செல்லும் சென்னை - வேலூர் சாலையில் அமைந்துள்ளது.
நான்கு தோள்களுடன் கிழக்குநோக்கி வீற்றிருக்கும் திருக்கோலத்தில் இறைவன் விஜயராகவப் பெருமாள் என அழைக்கப்படுகிறார். இறைவி மரகதவல்லி. இத்தலத் தீர்த்தம் ஜடாயு தீர்த்தம். விமானம் விஜயகோடி விமானம் என்ற அமைப்பைச் சேர்ந்தது.
இராமாயணத்தில் சடாயு என்ற பறவைக்கு மோட்சமளித்து அதன் இறுதிச் சடங்குகளை இங்கு செய்ததால் திருப்புட்குழி ( பறவை + குழி) ஆனது என இதன் தலவரலாறு தெரிவிக்கின்றது.

ஜடாயுவுக்கு மோட்சமளித்த இராமன் இங்கு ஜடாயு தீர்த்தத்தை உண்டாக்கினார் என்று சொல்லப்படுகிறது. இங்கு கோவிலுக்கு எதிர்ப்புறத்தில் ஜடாயுவுக்கு சன்னதியுள்ளது. மூலவர் தமது தொடையின் மீது ஜடாயுவை வைத்துக்கொண்டு சடங்குகள் செய்யும் பாவனையில் அமர்ந்துள்ளார். வலப்பக்கத்தே இருக்க வேண்டிய இறைவி இடப்பக்கத்தே இருப்பது இங்கும் திருவிடவெந்தையில் மட்டுமே. இறைவன் திருவீது உலா செல்லும் போதெல்லாம் ஜடாயுவுக்கு மரியாதை செய்யப்படுகிறது. இந்த ஊரில் உள்ள ஜடாயு தீர்த்தத்தில் நீராடி பெண்கள் இரவில் மடியில் வறுத்த பயறு கட்டிக்கொண்டு படுக்க மறுநாள் விடிந்தவுடன் அப்பயறு முளைத்திருக்குமாயின் அவர்கட்கு குழந்தைப்பேறு உண்டாகும் என்பது நம்பிக்கையாகும். எனவே இந்த இறைவி 'வறுத்த பயறு முளைவிக்கும் மரகதவல்லித் தாயார்' என்ற பெயரால் அழைக்கப்படுகிறார்.

இவ்வூரில் வாழ்ந்த யாதவப் பிரகாசர் என்பவரிடமே இராமானுஜர் அத்வைத பாடங்களைப் பயின்றார். இராமானுஜர் படித்த மண்டபம் இன்றும் உள்ளது. இராமானுஜர் கல்வி கற்றதை விளக்கும் சிற்பமும் இக்கோவிலில் உள்ளது. இக்கோவிலில் அதிக அளவிற்கு கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இதன் மூலம் பாண்டிய மன்னர்களும் விஜயநகரப் பேரரசும் இத்தலத்திற்கு ஆற்றிய தொண்டினைப் பற்றி அறிந்துகொள்ள முடிகிறது. இங்குள்ள கல்வெட்டுக்கள் இக்கோவிலைப் ‘போரேற்றுப் பெருமாள் கோவில்’ என்றும் ‘சித்தன்னவேலி திருப்புட்குழி நாயனார் கோவில்’ என்றும் பலவாறு குறிப்பிடுகின்றன. இங்குள்ள குதிரை வாகனம் மிகவும் அதிசயமானதாகும். கல் குதிரை என வழங்கப்படும் இக்குதிரை உண்மையான குதிரை போலவே அசையும் உறுப்புக்களைக் கொண்டது. இதைச் செய்த தச்சன் இதுமாதிரி இனி யாருக்கும் செய்துகொடுப்பதில்லை என்று உறுதியோடு இருந்து உயிர் துறந்தானாம். இவனது உறுதியையும் பக்தியையும் போற்றும் வகையில் பெருமாள் 8ஆம் உற்சவத்தன்று அத்தச்சனது வீதிக்கு எழுந்தருளுகிறார்.







Saturday, June 8, 2024

சனிக்கிழமை - ஆலய தரிசனம் - பகுதி 10 !!!

 திரு ஆயர்பாடி, மதுரா மாவட்டம், உத்திரபிரதேசம்

ஆயர்பாடி என்றும் ஆய்ப்பாடி என்றும் கோகுலம் என்றும் அழைக்கப்படும் இத்தலம் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கையாழ்வார் ஆகிய மூவரால் பாடல்பெற்ற தலம் இதுவாகும். இந்த கோகுலம் என்னும் ஆய்ப்பாடி மதுரா ரயில் நிலையத்திலிருந்து சுமார் 8 மைல் தொலைவில் உள்ளது.

இத்தலம் பற்றியும், கோகுலம் பற்றியும் ஸ்ரீமத் பாகவதம் உட்பட எண்ணற்ற வடமொழி நூல்கள் எடுத்தியம்பியுள்ளன. துவாபரயுகத்தில் திருமாலின் அவதாரமான கண்ணன் குழந்தைப்பருவ லீலைகள் நடந்த இடமே கோகுலம். கண்ணன் சின்னஞ்சிறு சிறுவனாக இருந்து இந்த ஆயர்பாடியில் செய்த லீலைகள் எல்லாம் எண்ணற்ற நூல்களில் வருணிக்கப்பட்டுள்ளது. வீடுகளில் வெண்ணெய் உண்டது, இளங்கன்னிமார்களை ஏய்த்தது, சிற்றில் சிதைத்தது. நந்த கோபாலனாக வளர்ந்தது, மாடு மேய்க்கப் போனது என்றிவ்வாறான பலவித லீலைகளை நடத்திய இந்த கோகுலம் முழுவதையும் ஆழ்வார்கள் தம் பாக்களில் பாடியுள்ளனர்.
இத்தலத்தில் இறைவன் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் நவமோகன கிருஷ்ணன் என்ற பெயரில் காட்சி தருகிறார். இறைவி ருக்மணி தேவி, சத்திய பாமா ஆகியோர். இதன் விமானம் ஹேம கூட விமானம் என்னும் அமைப்பினைச் சேர்ந்தது.
இங்கு யமுனை நதி ஓடுகிறது. இங்கு கோகுல் என்று அழைக்கப்படும் இடத்திலிருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இடம் தான் உண்மையான கோகுலப் பகுதி என்று சொல்லப்படுகிறது.புராண்கோகுல் என்று அழைக்கப்படும் இந்தப் பழைய கோகுலத்தில் யமுனை நதிக்கரையில் ஒரு தலம் அமைந்துள்ளது. இங்கு நந்தகோபர், யசோதை, பலராமர், மற்றும் தொட்டில் கிருஷ்ணன் ஆகியோருக்கு மரத்தினால் செய்யப்பட்ட மூர்த்திகள் உள்ளன.

சிறைச்சாலையில் தேவகி மைந்தனாகப் பிறந்த கண்ணன் இந்த ஆயர்பாடியில் உள்ள நந்த கோபர் வீட்டிற்கு வந்த நாளை ஆண்டுதோறும் இங்கு விழாவாக நந்தோற்சவம் என்ற பெயரில் இன்றும் கொண்டாடுகின்றனர். இன்றும் ஜன்மாஷ்டமியின் மறுநாள் (கோகுலாஷ்டமியின் மறுதினம்) இதே பெயரில் இந்த உற்சவம் வடநாட்டிலும், பிற முக்கிய தலங்களிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள கௌடில்யா மடத்தில் இந்நிகழ்ச்சி ஆண்டுதோறும் மிக்க சிறப்புடன் தற்போதும் நடத்தப்பட்டு வருகிறது.



Friday, May 31, 2024

சனிக்கிழமை - ஆலய தரிசனம் - பகுதி 9 !!!

 அருள்மிகு உலகளந்த பெருமாள் கோவில் திருக்கோயிலூர் 

உலகளந்த பெருமாள் கோவில் தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சி மாவட்டம்திருக்கோவிலூர் மாநகரில் உள்ள ஒரு பெருமாள் கோயிலாகும். இது 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்று. இக்கோயிலின் பெருமாள் திருவுரு ஒரு காலில் நின்ற நிலையில் ஒரு காலை மட்டும் நீட்டி தூக்கியபடி நிற்கின்றார். கோபுர நுழைவாயில்கள் கோயிலை ஒட்டி இல்லாமல், கோயிலை ஒட்டிய தெருக்களின் நுழைவாயில்களாக உள்ளன. பொய்கை யாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் மூவரோடும் திருமங்கை மன்னனும் இந்தத் தலத்தை மங்களா சாசனம் செய்திருக்கிறார்.[கோயில் அமைந்துள்ள திருக்கோயிலூர் மாநகரம் தென்பெண்ணை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.

மகாபலி என்னும் அசுர அரசன் தான தர்மத்தில் சிறந்தவன் தன்னை விடப் புகழ் பெற்றவர்கள் யாரும் இருந்துவிடக்கூடாது என்பதற்காக அசுர குல குருவான சுக்கிராச்சாரியார் தலைமையில் மாபெரும் யாகம் நடத்தினான். அவனது ஆணவத்தை அடக்கும் பொருட்டு விஷ்ணு வாமன (குள்ள) அவதாரம் எடுத்து யாகம் நடக்கும் இடத்திற்கு வந்து மூன்றடி மண் தானமாக கேட்கிறார். வந்திருப்பது பெருமாள் என்பதை உணர்ந்து சுக்கிராச்சாரியார் மூன்றடி மண் தானம் தர விடாது தடுக்கிறார். குருவின் பேச்சை மீறி தானம் தர மகாபலி ஒப்புக்கொள்கிறான்.

அப்போது மகாவிஷ்ணு விசுவரூபம் எடுத்து தன் பாதத்தின் ஒரு அடியை பூமியிலும், ஒரு அடியை ஆகாயத்திலும் வைத்துவிட்டு மூன்றாவது அடியை எங்கு வைப்பது என்று கேட்கிறார். மகாபலி தன் தலையை தாழ்த்தி தன் தலையை தவிர வேறு இடம் என்னிடம் இல்லை என்கிறான். விஷ்ணுவும் விடாது மகாபலியின் தலைமீது தன் பாதத்தை அழுத்தி மூன்றாவது அடியை தாரை வார்த்து தா என்று சொல்ல மகாபலி கெண்டியை எடுத்து தானமாக தர முயல சுக்கராச்சாரியார் வண்டு உருவம் எடுத்து கெண்டியை அடைத்து தண்ணீர் வர விடாமல் தடுக்க விஷ்ணு தர்ப்பை புல்லால் குத்திவிடுகிறார். இதனால் குருடாகி சுக்கிராச்சாரியார் வெளியேறிப் போய் விடுகிறார்.

மகாபலி கெண்டியை எடுத்து மூன்றாவது அடியை தானம் செய்து மண்ணில் புதையுண்டு போனான். அவனது ஆணவத்தை இவ்வாறு அடக்கிய பின்பு மகாபலியை விஷ்ணு தன்னோடு சேர்த்து கொண்டார் என்று தலவரலாறு கூறுகிறது. அவ்வரலாற்றின்படி மாலவன் கால் தூக்கி நிற்கும் காட்சியே இக்கோயில் கருவறையில் மூலவராக, வடிக்கப்பெற்றிருக்கிறது.

விஜயநகர மன்னர்களால் கட்டப்பட்ட இராஜகோபுரம் பதினொரு நிலைகளோடு உயர்ந்திருக்கிறது. என்றாலும் கோயிலின் பிரதான வாயிலில் ஒரு சிறிய கோபுரமே உள்ளது. கோபுர வாயிலைக் கடந்து உள்ளே நுழைந்தால் மங்கை மன்னன் கட்டிய கோபுர வாயில் வரும். அதனையும் கடந்தால் பாண்டியன் மண்டபம், பின்பு தான் கருவறை உள்ளது. கருவறையில் நிற்கிறார் உலகளந்த திருவிக்கிரமன். நல்ல நெடிய திருவுருவம். மூலவர் திருவுரு, மரத்தால் ஆன வடிவம். இந்த இறைவன் பிற கோயில்களில் இருந்து மாறுபட்டு வலக்கையில் சங்கும் இடக்கையில் சக்கரமும் ஏந்தி காட்சி தருகிறார். திருவிக்கிரமன் பத்தினி (திருவிக்கிரமி) மிருகண்டு, மகாபலி எல்லோரும் காலடியிலேயே இருக்கிறார்கள்.

பொதுவாக சிவாலயங்களின் சுற்றுப்பிரகாரத்தில் தான், விஷ்ணு துர்க்கையைக் காண முடியும். ஆனால், 108 திருப்பதிகளில் இங்கு மட்டும் தான் பெருமாள் சன்னதி அருகிலேயே விஷ்ணு துர்க்கை அருள்பாலிக்கிறாள். இவர்கள் இருவரையும் ஒரே இடத்தில் நின்று தரிசனம் செய்யலாம்.

கபிஸ்தலம், திருக்கோவிலூர், திருக்கண்ணங்குடி,திருக்கண்ணபுரம், திருக்கண்ணமங்கை ஆகியவை பஞ்ச கிருஷ்ணஷேத்திரங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
















Saturday, May 18, 2024

சனிக்கிழமை - ஆலய தரிசனம்- பகுதி 7 !!!

 அருள்மிகு ஸ்ரீமூர்த்தி திருக்கோயில், திருச்சாளக்கிராமம், நேப்பாளம்  

முக்திநாத் நேபாள நாட்டின், முஸ்தாங் மாவட்டம் அமைந்த இமயமலையில், முக்திநாத் பள்ளத்தாக்கில், 3,710 மீட்டர் உயரத்தில் அமைந்த, இந்து மற்றும் பௌத்தர்களின் புனித தலமாகும்.

வைணவர்கள் போற்றும் 108 திவ்ய தேசங்களில், முக்திநாத் 105வது திவ்ய தேசமாகும். திருமங்கையாழ்வார் மற்றும் பெரியாழ்வார் ஆகியவர்கள் முக்திநாதரை போற்றிப் பாடி மங்கள்சாசனம் செய்துள்ளனர். ஆண்டின் மார்ச் மாதம் முதல் சூன் மாதம் முடிய முக்திநாத் தரிசனம் செய்ய ஏற்ற காலமாகும்.

முக்திநாத்தில் பாயும் கண்டகி ஆற்றில் கிடைக்கும் சாளக்கிராமத்தை, வைணவர்கள் நாரயாணனின் அம்சமாக கருதி வீட்டின் பூஜை அறையில் வைத்து வழிபடுகிறார்கள்.

முக்திநாத் இருப்பிடத்தை 51 சக்தி பீடங்களில் ஒன்றாக சாக்தர்கள் கருதுகின்றனர். திபெத்திய பௌத்தர்கள் முக்திநாத்தை நூறு புனித நீர் நிலைகள் எனப் போற்று வழிபடுகிறார்கள். தாந்திரீக திபெத்திய பௌத்தர்கள், முக்திநாத்தில் உள்ள டாகினி என்ற பெண் தெய்வத்தின் இருப்பிடமாக கருதுகின்றனர். 

மூலவர் – ஸ்ரீமூர்த்தி – (முக்திநாத் / முக்தி நாராயணன்) (ஸ்வயம்பூ மூர்த்தி)

கண்டவர்கள் – ப்ரம்மா, ருத்ரர், கண்டகி

தாயார் – ஸ்ரீதேவி நாச்சியார்

விமானம் – கனக விமானம்

தீர்த்தம் – ஸ்ரீசக்ர தீர்த்தம்

ஆண்டின் மார்ச் மாதம் முதல் சூன் மாதம் முடிய முக்திநாதரை தர்சனம் செய்ய ஏற்ற காலமாகும். கடும் குளிர் மற்றும் மேக மூட்டத்தால் முக்திநாத் பயணம் கடுமையானது. எனவே முதலில் காட்மாண்டிலிருந்து, பொக்காராவை அடைந்து, அங்கிருந்து வான் வழியாக ஹெலிகாப்டர் அல்லது சிற்றுந்து மூலம் முக்திநாதரை தரிசிக்கலாம். பொக்காராவிலிருந்து முக்திநாத் செல்லும் வழியில் ராணிபௌவா, ஜோர்கோட், ஜார்கோட், சோங்கூர், காக்பெனி அல்லது ஜோம்சோம் ஆகிய இடங்களில் தங்க வசதியுள்ளது. சிற்றுந்து மூலம் காத்மாண்டிலிருந்து 377 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முக்திநாத் கோயிலை அடைய 10 மணி நேரமாகும். காத்மாண்டிலிருந்து வான் வழியாக 194 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.






Thursday, May 9, 2024

அட்சய திருதியை - சிறப்புத் தொகுப்பு !!!

 அட்சய திருதியை (அல்லது அக்ஷய தீஜ்) தமிழ் மாதமான சித்திரையில் வளர்பிறை அமாவாசை நாளை அடுத்த மூன்றாம் நாளில் கொண்டாடப்படுவதாகும்.முதல் யுகமான கிருதயுகத்தில் பிரம்மனால் உலகம் தோற்றுவித்த நாள் அட்சய திருதியை ஆகும்.

"அட்சயா" எனும் சொல் சமஸ்கிருதத்தில் எப்போதும் குறையாதது எனும் பொருளில் வழங்கப்படுகிறது. மேலும் இந்த நாள் நல்ல பலன்களையும் வெற்றியையும் தரும் என்று நம்பப்படுகிறது.

சில குறிப்பிட்ட கோவில்கள் அட்சய திருதியை நாளன்று வழிபட சிறந்தவையாகக் கருதப்படுகின்றன

  • ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் உள்ள முக்கூடல் தீர்த்தத்தில் நீராடுதல்.
  • தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நவதிருப்பதிகளில் ஒன்றான திருக்கோளூர் பெருமாள் தரிசனம்.
  • கும்பகோணம் பெரிய தெருவில் பதினாறு பெருமாள்களும் ஒருசேர தரும் தரிசனம் காணுதல்.
  • திருச்சி மாவட்டத்தில் உள்ள வெள்ளூரில் உள்ள மகாலட்சுமி பிரதிஷ்டை செய்த திருக்காமீஸ்வரர் கோயிலில் வழிபாடு செய்தல்,
  • சேலம் மாவட்டம், எட்டிக்குட்டைமேடில் உள்ள பதினாறு லட்சுமி கொண்ட ஸ்ரீ ஸ்ரீ அதிர்ஷ்டலட்சுமி திருகோவிலில் சிறப்பு பூஜை, சிறப்பு அன்னதானம், திருக்கோயில் வரும் சுமங்கலி பெண்களுக்கு மங்கல பொருள் வழங்கப்படும்.

    முக்கியத்துவம்

    • அட்சஷய திருதியை நாளன்றே வேதவியாசர் மகாபாரத இதிகாசத்தை விநாயகரிடம் எழுதச் சொல்லி கட்டளையிட்டார்.
    • திருமாலின் அவதாரமான பரசுராமரின் பிறந்த நாளாகவும் கடைபிடிக்கப்படுகிறது.இன்றும் கோவாவும் கொங்கண் பகுதியும் பரசுராம சேத்திரங்கள் எனக் குறிப்பிடப்படுகின்றன.
    • வைசாக மாதத்தின் வளர்பிறையின் மூன்றாம் நாளான அட்சய திருதியை வருடத்தின் மிகப் புனிதமான நாட்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.
    • பொதுவாக இந்த நாளில் திருமாலை நெல் அரிசியுடன் வணங்கியும் உண்ணா நோன்பிருந்தும் வழிபடுவர். இந்நாளில் கங்கை நதியில் நீராடுவது மிக மங்களகரமானது எனக் கருதப்படுகிறது.
    • காசியில் அன்னபூரணித் தாயாரிடமிருந்து, சிவபெருமான் தமது பிட்சைப் பாத்திரம் நிரம்பும் அளவு உணவைப் பெற்றதும் அட்சய திருதியை அன்றுதான்.
    • பாஞ்சாலியின் மானம் காக்க, கண்ணன் ’அட்சய’ என்று கூறி பாஞ்சாலியின் ஆடையை வளரச் செய்ததும் அட்சய திருதியை நாளன்றுதான்.
    • வேதத்தில் அட்சய திருதியை நாளில் அறிவு பெறுதல் அல்லது கொடையளித்தல் நல்ல பலனளிக்கும் எனக் கூறுகின்றன. இது புதிய வணிகத்தினையோ அல்லது முயற்சியையோ துவங்க வெகு நன்னாளாகக் கருதப்படுகிறது. பலர் இந்த நாளில் தங்கம் அல்லது சொத்து வாங்குகின்றனர்.
    • மக்கள் இந்த நாளில் உண்ணாநோன்பும் பூசைகளும் கடைபிடிக்கின்றனர். விசிறி, அரிசி, உப்பு, நெய். சருக்கரை, காய்கறிகள், புளி, பழம், துணிகள் ஆகியவற்றை கொடையாக அளிக்கின்றனர். இந்த நாளில் திருமாலை வணங்குகின்றனர். தீப வழிபாடு செய்யும்போது சிலையின் மீது அல்லது அருகில் துளசி தீர்த்தம் தெளிக்கப்படுகின்றது.
    • வங்காளத்தில், அட்சய திருதியை நாளில், "அல்கதா" எனும் விழா கொண்டாடப்படுகிறது. அது விநாயகர் மற்றும் லட்சுமியை வணங்கி புதிய வணிகக் கணக்குப் புத்தகத்தை எழுதத் தொடங்கும் நாளாகும். வங்காளிகள் இந்த நாளில் பல சமயச் சடங்குகளையும் செய்கின்றனர்.
    • இந்த நாள் ஜாட் எனப்படும் விவசாய சமூகத்திற்கும் மிக மங்களகரமான நாளாகும். விடியற்காலையில் ஜாட் குடும்பத்தின் ஓர் ஆண் நிலத்திற்கு மண்வெட்டியுடன் செல்வார். நிலத்திற்குச் செல்லும் வழியில் எதிர்ப்படும் அனைத்து விலங்குகளும் பறவைகளும் மழை மற்றும் பயிர்களுக்கு நிமித்தங்களாகவும் அறிகுறிகளாகவும் கருதப்படுகின்றன.
    • அட்சய திருதியை திருமணங்களுக்கு ஏற்ற காலமாகவும் கருதப்படுவதால் அந்நாளில் பெரும் எண்ணிகையிலான திருமணங்களும் நடத்தப்படுகின்றன.
    • செல்வத்திற்கு அதிபதியான குபேரரே செல்வமிக்க கடவுள் என நம்பப்படுகிறார். இந்த நாளில் குபேரர் கூட விஷ்ணுவின் மனைவியும் செல்வத்திற்கான தெய்வமான லட்சுமியை வணங்குவார் என லட்சுமி தந்தரம் எனும் நூல் கூறுகிறது. இந்த நாளில், குபேர லட்சுமி பூசை நடத்தப்படுகிறது. அதில் லட்சுமி உருவப்படத்துடன் குபேரரின் அடையாளமான சுதர்சன குபேர எந்திரமும் ஒன்றாக வைக்கப்பட்டு வணங்கப்படுகிறது.


















______________________________________________________________________________________________________________________________________________________________________



Saturday, May 4, 2024

சனிக்கிழமை - ஆலய தரிசனம் - பகுதி 5 !!!

 

அருள்மிகு ஶ்ரீ பூவராகசுவாமி கோயில் ஶ்ரீமுஷ்ணம்


 கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பூவராக சுவாமி  கோவிலில் 10 ஆம் நூற்றாண்டின் இடைக்கால சோழர்களின் ஆட்சி காலத்தில் திருப்பணிகள் இருந்தன. பின்னர் தஞ்சை நாயக்க மன்னரான அச்சுதப்ப நாயக்கரால் விரிவாக்கபட்டது. கோயில் வளாகத்தில் உள்ள அனைத்து சிற்றாலயங்களையும் குளத்தையும் உள்ளடக்கி கருங்க்கல்லாலான பெரிய மதில் சுவர் அமைந்துள்ளது. கோயிலின் நுழைவாயில் ஏழு நிலை இராஜகோபுரம் உள்ளது.

கோயிலில் தினசரி ஆறுகால பூசைகளும், ஆண்டு விழாக்கள் மூன்றும் நடத்தப்படுகின்றன. அவற்றில் தேர் திருவிழா, தமிழ் மாதமான வைகாசியில் (ஏப்ரல்-மே) நடத்தப்படுகிறது. இது மிக முக்கியமான விழாவாகும். இந்த திருவிழாவானது பிராந்தியத்தின் சமய நல்லினக்கத்தைக் குறிக்கிறது - தேரில் கட்டப்படும் கொடி முஸ்லிம்களால் வழங்கப்படுகிறது; அவர்கள் கோவிலில் இருந்து பிரசாதம் கொண்டுவந்து மசூதிகளில் அல்லாவுக்கு வைக்கிறார்கள். இந்த கோயில் தமிழக அரசின் இந்து சமய அற நிலையத்துறையால் பராமரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது. அர்த்த மண்டபம் வரை முஸ்லிம்கள் வழிபட அனுமதிக்கப்பட்ட சில கோயில்களில் இந்த கோயிலும் ஒன்றாகும்.
இரண்யாட்சன் என்றொரு அசுரன், பூமாதேவியையே எடுத்துச் சென்று கடலுக்கு அடியில் சிறை வைத்து விடுகிறான். இந்தப் பூமகளைக் காக்க திருமாள் பன்றி உருவில் தோன்றிக் பாய்ந்து அரக்கனைக கொன்று பூமாதேவியை மீட்கிறார். அந்த அரக்கனின் வியர்வைத் துளி விழுந்து இத்தலத்தில் குளம் உருவானது என்கின்றனர். இறக்கும் தருவாயில் அரக்கன் தன் திசையை நோக்குமாறு கூறுகின்றான். இதனால் இத்தலத்தில் உள்ள வராகர் அவனது ஆசையை நிறேவேற்ற தன் முகத்தை தெற்கு நோக்கி திருப்பியபடி இருக்கிறார். அதேசமயம் அவரது உடல் பகுதி மேற்கு நோக்கியபடி உள்ளது. மேலும் பூதேவி கோரியபடி பூவராகர் தன் கைகளில் சங்கு சக்கரத்தை வைத்துக்கொண்டு காட்சியளிக்கிறார்.ஒரு நவாப் தனக்கிருந்த நோய் நீங்க யக்ஞ வராகரை வேண்டிக் கொள்ள, அப்படியே நோய் நீங்க, அதன்பின் அந்த நவாப் பூவராக சாஹேப் என்ற பெயருடன் வாழ்ந்தார் என்று ஒரு கர்ண பரம்பரை வரலாறு கூறுகிறது. அவர் ஏற்படுத்திய மானியம் இன்றும் இருக்கிறது, இந்தக் கிள்ளையிலே. சமுத்திர தீரத்திற்குச் செல்லு முன் யக்ஞ வராகர் முகமதியர் பிரார்த்தனை ஸ்தலமான மசூதி பக்கம் போய் அவர்கள் செய்யும் மரியாதைகளையும் ஏற்றுக் கொள்கிறார்.
வைணவத் தலங்களுக்குள் இத்தலம் ஒரு தனிச்சிறப்பானது. சுயம்புலிங்கம் போல, சிற்றுளி கொண்டு செய்யப்படாது தானாகவே தோன்றிய தலங்கள் எட்டு என்பர். அவை திருரங்கம், ஸ்ரீமுஷ்ணம், திருவேங்கடம், ஸாளக்கிராமம், நைமி, சாரண்யம், வானமாமலை, புஷ்கரம், நாராயணம் என்றும் கூறுவர். இவற்றையே வடமொழியில் 'ஸ்வயம் வியக்த க்ஷேத்திரம்' என்பர். அதில் ஒன்றாக இக்கோயில் உள்ளது.
இக்கோயில் பிரும்மாண்டமான கோயில். மூன்று மதில்களால் சூழப்பட்டிருக்கின்றது. இன்று இருப்பது இரண்டு மதில்களே. மூன்றாவது மதில் சிதைந்து அதன் அடையாளங்கள் மட்டுமே எஞ்சியுள்ளது. கோயில் வாயிலை 150 அடி உயரமுள்ள ஒரு ராஜகோபுரம் அழகு செய்கிறது. இக்கோபுர வாயிலிலே துழைத்த உடனே கோபுரத்தின் மேலே கிழக்கு நோக்கியவராய் வேங்கட வாணன் இருப்பதைக் காட்டுவர். இத்தலத்தில் கோபுரத்தில் உள்ள வேங்கடவனை முதலில் தரிசித்த பின்னரே பூவராகனை சேவிக்க வேண்டும் என்பது இத்தலத்தின் சம்பிரதாயம் ஆகும்.
இது கடலூரிலிருந்து 90 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த இரயில் நிலையம், 20 கிமீ தொலைவில் உள்ள விருத்தாச்சலம் ஆகும். இதன் கிழக்கில் சிதம்பரம் 36 கிமீ; மேற்கில் காட்டுமன்னார்கோயில் 25 கிமீ; வடக்கில் விருத்தாச்சலம் 20 கிமீ; தெற்கில் ஜெயங்கொண்டம் 24 கிமீ; கும்பகோணம் 53 கிமீ தொலைவில் உள்ளது.



























Friday, April 26, 2024

சனிக்கிழமை - ஆலய தரிசனம் - பகுதி 4 !!!

                                     வியக்க வைக்கும்

திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவில்


திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவில் கன்னியாகுமரி மாவட்டத்தில் திருவட்டாறு (நாகர்கோவிலில் இருந்து சுமார் 26 கிமீ) எனும் ஊரில் அமைந்துள்ள ‌ஒரு பழைமையான வைணவக் கோயிலாகும். இது 108 வைணவத் திருத்தலங்களுள் 76 ஆவதாக வைத்து எண்ணப்படுகிறது. மேலும் இது 13 மலைநாட்டுத் திருத்தலங்களுள் ஒன்றாகும்.

இந்த ஊாின் நடுவில் பள்ளி கொண்டிருக்கும் ஆதி கேசவ பெருமானின் திருவடிகளை வட்டமிட்டு பரளியாறு ஓடுவதால் இந்த ஊா் திருவட்டாறு எனும் பெயர் பெற்றது. மாராமலையில் உற்பத்தியாகி மேற்கு நோக்கி ஓடும் பறளியாறு மற்றும் வடகிழக்கு பகுதியாக ஓடும் கோதையாறும் ஒன்று சோ்ந்து மீண்டும் ஒரே ஆறாக உருவெடுக்கும் இடம் "மூவாற்று முகம்" (மூன்று + ஆறு + முகம்) எனப்படும். இவ்வாறு இறுதியில் அரபிக் கடலில் கலக்கிறது.

நம்மாழ்வார் இவ்வூர்க் கோயில் பெருமாளை ‘வாட்டாற்றான்’ என்று குறிப்பிடுவதால் இந்த ஊரின் பழங்காலப் பெயர் வாட்டாறு என்பது தெளிவாகிறது. எனவே, சங்ககால அரசன் வாட்டாற்று எழினியாதன் இந்த ஊரினன் என்பதை உணரமுடிகிறது.
நம்மாழ்வார் இவ்வூர்க் கோயில் பெருமாளை ‘வாட்டாற்றான்’ என்று குறிப்பிடுவதால் இந்த ஊரின் பழங்காலப் பெயர் வாட்டாறு என்பது தெளிவாகிறது. எனவே, சங்ககால அரசன் வாட்டாற்று எழினியாதன் 
இந்த ஊரினன் என்பதை உணரமுடிகிறது.

கருவறைக்கு முன் 18 அடி சதுரமும் 3 அடி உயரமும் உள்ள ஒற்றைக் கல்லினால் எழுப்பப்பட்டது ஆகும். கி.பி. 1604 ஆம் ஆண்டு வாக்கில் இம்மண்டபம் அமைய வீரரவி ரவிமர்மன் என்ற குலசேகரப் பெருமாள் பொருளுதவி செய்தான். பெருமாள் ஒற்றைக்கல் மண்டபத்தில் எழுந்தருளியிருக்கும் வேளையில் ஒற்றைக் கல் மண்டபத்தைத் தொடக் கூடாது என்பது தொன்மரபு.

கோவிலின் வெளிப்பிரகாரம் நெடுகிலும் கையில் திருவிளக்கேந்தி நிற்கும் தீபலட்சுமிகளின் சிலை இருபுறமும் உள்ளது. பலிபீட மண்டபத்தின் இருபுறமும் ஒற்றைக் கல்லிலான பல கலைவடிவங்கள் உள்ளன. இவற்றுள் புல்லாங்குழல் ஊதும் கண்ணனின் இசையில் மயங்கி தாய்மாறிப் பால் குடிக்கும் விலங்கினக் குட்டிகளின் சிலையும் ஒன்று.

பரந்தாமன் இங்கே தமது பாம்புப் படுக்கையில் சயனித்தவாறு காட்சியளிக்கிறார் மேலும் அவரது தரிசனம் மூன்று வாசல்கள் வழியாக பக்தர்களுக்குக் கிடைக்கப்பெறுகிறது. சன்னிதிக்குள் ஐயன் ஆதிகேசவ பெருமாள் அருகில் பரமசிவன் வீற்றிருப்பதையும் பக்தர்கள் காணலாம். பல தீபலக்ஷ்மிகள் இங்கே வீற்றிருந்தாலும், ஒவ்வொன்றும் ஒரே போல் இருக்காமல் வேறுபட்டு காணப்படும்.

இங்கிருக்கும் ஒற்றைக்கல் மண்டபம் (ஒரே கல்லாலான பெரிய கூடம்) ஒரே கல்லால் செய்யப்பட்டதாகும், அதன் சுவர்கள் மட்டுமே 3 அடிகள் தடிமம் கொண்ட பாறையாகும், பார்வையாளர்களை ஆச்சரியத்தில் மூழ்கடிப்பதாகும். மேலும் ஊர்த்துவ தாண்டவம், வேணுகோபாலர், மன்மதர் மற்றும் ரதி தம்பதியர், லக்ஷ்மணர் மற்றும் இந்த்ரஜித் போன்றவர்களின் சிலைகள் மிகவும் அற்புதமாக அழகுடன் செதுக்கப்பட்டது கண்கொள்ளாக் காட்சியாகும். கோவிலை சூழ்ந்து சுவரில் வரையப்பட்டிருக்கும் வண்ண வண்ண சித்திரங்களுக்கும் இந்தக்கோவில் பெயர் பெற்றதாகும்.

மேலும் இக்கோவில் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பத்மநாபசுவாமி கோவிலைவிட பழமையானதாகும். இந்தக் கோவிலின் அமைப்பு மற்றும் கட்டிடக்கலையை ஒரு மாதிரியாகக்கொண்டே திருவனந்தபுரத்தில் ஸ்ரீ பத்மநாபசுவாமி கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த ஆதிகேசவபெருமாள் கோவிலுக்கு நேர் எதிரிலேயே ஆற்றின் அருகாமையில் இன்னும் ஒரு சிறிய இறைவன் லக்ஷ்மி நரசிம்ஹனை வழிபடும் கோவிலும் நிலைகொண்டுள்ளது. ஆழ்வார்களில் தலை சிறந்தவரான நம்மாழ்வார் அவர்கள் ஆதிகேசவசுவாமியைப் புகழ்ந்து 11 பாசுரங்களை இயற்றியுள்ளார்.

பரந்தாமன் ஆதிகேசவபெருமாள் என்பது 'மிகவும் முக்கியமான நண்பனைக்' குறிப்பதாகும். தலபுராணங்களின் கூற்றின் படி பரந்தாமன் ஆதிகேசவபெருமாள் கேசி என்ற பெயருடைய அரக்கனை வீழ்த்தியதாக ஐதீகம். அரக்கனின் மனைவியானவள் கங்கை ஆறு மற்றும் தாமிரபரணி ஆற்றின் தேவதைகளை வணங்கி ஒரு பெரிய பிரளயத்தையே வரவழைத்து விட்டாள். ஆனால் இது ஒரு விதத்திலும் பயனளிக்கவில்லை மேலும் அவள் ஈசனிடம் சரணடைந்து விட்டாள். இப்படியாக வட்டமாக நதிகள் இந்த இடத்தை சூழ்ந்து கொண்டதால், இந்த இடத்திற்கு திருவட்டாறு என்ற பெயர் அமைந்தது.

 இந்தக்கோவிலில் வழங்கப்படும் பிரசாதங்களான பால் பாயாசம் (பால் அமுது), அவல் மற்றும் அப்பம் மிகவும் பெயர் பெற்றதாகும் மற்றும் சுவை நிறைந்ததாகும். திருவனந்தபுரத்திலுள்ள ஸ்ரீ பத்மநாபசுவாமி கோவிலில் உள்ளதைப்போலவே இங்கே பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நிறைவேற்றப்படுகின்றன.





Saturday, April 20, 2024

சனிக்கிழமை - ஆலய தரிசனம் - பகுதி 3 !!!

 

காரமடை அருள்மிகு அரங்கநாதசாமி கோயில்

காரமடை அரங்கநாதசாமி கோயில் கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகில் உள்ள காரமடை என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.இக்கோவில் ஏறக்குறைய 1000 வருடங்கள் பழமை வாய்ந்தது. கொங்கு நாட்டு பகுதிகளில் இருக்கும் வைணவ தலங்களில் புகழ்பெற்றது.
இக்கோயில் 15ம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசின் நாயக்க மன்னர்களால் கட்டப்பட்டது என்று அங்குள்ள கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது. இக்கோயிலின் தலவிருச்சமாக காரை மரம் உள்ளது.காரை மரங்கள், நீர் மடைகள் நிறைந்த பகுதியாதலால் இந்த ஊர் கரைமடை என பெயர்பெற்றது.
கருடாழ்வாரின் விருப்பத்துக்கு உட்பட்டு இத்தலத்தில் கல்யாணக் கோலத்தில் அவருக்கு காட்சியளித்தார் மகாவிஷ்ணு. பின்னர் இந்த இடத்திலேயே சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளினார். நாளடைவில் இப்பகுதி காரை மரங்கள் கொண்ட காடாக மாறியது. இந்தக் காட்டுப் பகுதியில் அருகில் உள்ள சிற்றூர்களைசே சேர்ந்த சில இடையர்கள் மாடுகளை மேய்த்துவந்தனர். அந்த மாடுகளில் ஒரு மாடு திடீரென்று பால் தருவதை நிறுத்திவிட்டது. இந்த மாட்டின் பாலை யாரோ திருடுவதாக ஐயமுற்ற இடையர் அந்த மாட்டை தீவிரமாக கண்காணித்தார்.

காட்டில் மேய்ந்து கொண்டிருந்த அந்தப் பசு ஒரு காரை மரத்தின் அடியில் நின்று அங்கிருந்த ஒரு புதர்மீது பாலை சொரிந்தது. இதனால் கோபமுற்ற இடையர் புதரை கோடாரியால் வெட்டினார். அப்போது அங்கிருந்து குருதி வெளிப்பட்டது. இதைப் பார்த்த இடையரின் கண்பார்வையும் இல்லாமல் போனது.

தகவல் அறிந்து ஊர்மக்கள் திரண்டுவந்து பார்த்தபோது, குருதி பீரிட்ட இடத்தில் பெருமாள் சுயம்புவாக இருக்கிறார் என அசரீரி ஒலித்தது. பின்னர் இடையரின் பார்வை திரும்ப வந்தது. இந்த நிகழ்வுக்குப் பிறகு அப்பகுதி மக்கள் இந்த இடத்தில் கோயில் எழுப்பினர் .
இக்கோயிலில் மூலவராக உள்ள அரங்கநாதர் சதுர வடிவில் சுயம்பு மூர்த்தியாக காட்சியளிக்கிறார். அரங்கநாத சுவாமி சன்னிதானத்துக்கு வலப்புறம் அரங்கநாயகித் தாயார் சன்னிதியும் இடப்புறம் ஆண்டாள் சன்னிதியும் முன்புறம் கருடக் கம்பமும் உள்ளன. அரங்கநாயகித் தாயார் சன்னிதிக்கு வலப்புறம் பரவாசுதேவர் சன்னிதியும் 12 ஆழ்வார்களின் திருவுருவங்களும் சன்னிதிகள் அமைந்துள்ளன. ஆண்டாள் சன்னிதிக்கு இடப்புறம் வீரஆஞ்சநேயர் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார்.

தொன்மக் கதையில் கூறப்படடதன்படி கோடாரில் வெட்டப்பட்ட சுயம்பு மூர்த்தியின் மேல் வெட்டுத் தழும்பு தற்போதும் உள்ளது என கூறுகின்றனர்.இக்கோயிலில் அரங்கநாதர், அரங்கநாயகி சன்னதிகளும், ஆஞ்சநேயர், ஆண்டாள், அரங்கநாயகிதாயார். ராமானுஜர், ஆழ்வார்கள் உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் குளம், கோயில் கோசாலை, கோயில் தேர் போன்றவை உள்ளன. இக்கோயிலில் ஏழு நிலை கொண்ட ராஜகோபுரம் உட்பட மொத்தம் இரண்டு கோபுரங்கள் உள்ளன.
விஜயநகர பேரரசின் மதுரை நாயக்க மன்னர் திருமலை நாயக்கர் கொடிய நோய் ஒன்றில் அவதிப்பட்டதாகவும் இக்கோவிலுக்கு வந்து வேண்டியதால் அந்நோய் தீர்ந்ததாகவும் தலவரலாறு கூறுகிறது. அந்நோய் தீர்ந்த காரணத்தால் நாயக்கர் சமுதாய மக்கள் வழிபட்டு வந்த சிறிய கோவிலை கோபுரங்கள் அமைத்து தற்போது உள்ள கோவிலை அமைத்தார். இக்கோவிலில் உள்ள காரை என்னும் ஒரு வகை மரம் தலவிருட்சமாக உள்ளது. இம்மரத்தில் கயிறு கட்டினால் குழந்தை பாக்கியம், திருமண யோகம் வரும் என்று நம்புகின்றனர் .





Saturday, April 13, 2024

சனிக்கிழமை - ஆலய தரிசனம் - பகுதி - 2 !!!

 நம்பியவர்களை வாழவைக்கும் திருமலைநம்பி கோவில்

திருக்குறுங்குடி வைஷ்ணவ நம்பி மற்றும் குறுங்குடிவல்லி நாச்சியார் கோவில்

திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயில் 108 திவ்யதேசங்களில் ஒன்றாகும். திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் இத்தலம் அமைந்துள்ளது. இத்தலம் ஆழ்வார்களால் மங்களாசாசனம்

 செய்யப்பட்டதாகும். இத்தலத்தினைப் பற்றி திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், பெரியாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் பாடியுள்ளார்கள். இத்தலத்தின் மூலவர் அழகிய நம்பிராயர் என்றும் தாயார் குறுங்குடிவல்லி நாச்சியார் என்றும் அழைக்கப்படுகிறார்.

இங்கு நம்பி சுவாமிகள் நின்ற நம்பி, அமர்ந்த நம்பி, பள்ளிகொண்ட நம்பி, திருமலை நம்பி, திருப்பாற்கடல் நம்பி என 5 திருக்கோலங்களில் எழுந்தருளியுள்ளார்.

மூலவர் நம்பிராயரின் வலது புறத்தில் அருகில் நின்றான் என்ற பெயரில் சிவபெருமான் சன்னதி அமைந்திருப்பது இத்தலத்தின் மிகச்சிறப்பம்சமாகும். 

வராக அவதாரம் கொண்டு திருமால் தனது நாயகியுடன் இத்தலத்தில் தங்கி, தனது அச்சந்தரும் வராக உருவத்தை குறுகச் செய்தமையால் இத்தலம் குறுங்குடி ஆனது.

நாகர்கோவில் - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் பணகுடியிலிருந்து 15 கி.மீ தொலைவிலும் வள்ளியூரிலிருந்து 12 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.

நம்பாடுவான்’ என்கிற பாணர் குலத்தைச் சேர்ந்த தீவிர விஷ்ணு பக்தர் திருக்குறுங்குடி இடத்தை அடுத்த மகேந்திரகிரி மலையிலே வாழ்ந்து வந்தார். அவர் யாழ் வாசிப்பதில் வல்லவர். அவர் கார்த்திகை மாதம் சுக்லபட்ச ஏகாதசி அன்று விரதம் இருந்து இத்தலத்துறையும் இறைவனை தரிசிக்க வருகிறார். வழியிலே பசியோடு இருந்த பிரம்ம இராட்சசன் ஒருவன் நம்பாடுவானை பிடித்துக் கொண்டு அவரை புசிக்கப் போவதாக கூறுகிறான். நம்பாடுவான் நம்பியை தரிசித்து விட்டு வந்து பிரம்ம இராட்சசனுக்கு இறையாவதாக சொல்லி அவரிடமிருந்து விடை பெற்று வந்து, கோயிலின் வாயிலில் நின்று, நம்பியை தரிசிக்க முயலுகிற போது கோயிலின் கொடிமரம் நம்பியை மறைத்தது. ஆயினும் பக்தி சிரத்தையோடு நம்பாடுவான் பாடி வேண்ட. நம்பியும் நம்பாடுவானுக்கு மறைக்காமல் இருக்க கொடிமரத்தை நகரச் சொல்லுகிறார். அதன்படியே அதுவும் நகர்ந்து நம்பியை நம்பாடுவான் தரிசிக்க வகை செய்தது. இதனால் மெய் புளகித்த நம்பாடுவான்,.

நம்பியைத் தரிசித்த நம்பாடுவான், மகிழ்ச்சியாக பிரம்ம இராட்சசனுக்குத் தான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றக் காட்டை நோக்கி நடந்தார். அ;ப்போது வயதான பிராமணர் தோற்றத்தில் அங்கே வந்த இறைவன், நம்பாடுவானை தடுத்து நிறுத்தி, அந்தக் காட்டில் ஒரு பிரம்ம இராட்சசன் வாழ்வதாகவும், அவன் அவ்வழியே செல்வோரை தின்று விடுவதாகவும் கூறினார். நம்பாடுவான் அந்த பிராமணரிடம் முன்பு பிரம்ம இராட்சசனுக்குத் தான் கொடுத்த வாக்குறுதியைக் கூறி அதை நிறைவேற்றவே தான் அந்தக் காட்டுக்குள் செல்வதாகக் கூறினார். வயதான பிராமணரின் வாதங்கள் எடுபடாமல் போயிற்று.

இராட்சசனைத் தேடி காட்டுக்குள் அலைந்த நம்பாடுவான் ஓரிடத்தில் இராட்சசனைக் கண்டு “ தான் நம்பியை தரிசித்து தனது விரதத்தை முடித்து விட்டதாகவும், இப்போது தன்னை இரையாக்கிக் கொள்ளலாம்” என்றும் கூறினார். ஆனால் பிரம்ம இராட்சசன் தன்னுடைய பசி அடங்கி விட்டதாகக் கூறி நம்பாடுவானை உண்ண மறுத்து விட்டான். அப்போது நம்பாடுவான் நம்பியைப் பாடி பரிசில் பெற்ற பாதி பழத்தை பிரம்ம இராட்சசனுக்குக் கொடுக்க, அதை உண்ட பிரம்ம இராட்சசன், சாபத்தால் தான் பெற்ற பிரம்ம இராட்சச வடிவிலிருந்து விமோசனம் பெற்றுத், தன் முற்பிறவு வடிவமான பிராமண வடிவத்தைப் பெற்றதாகக் கூறப்படுகிறது.

தனிச்சிறப்புகள் :

இத்தலத்து இறைவனே நம்மாழ்வாராக பிறந்ததாக ஒரு நம்பிக்கை நிலவுகிறது..

திருவாலித்திருநகரில் பிறந்து தலங்கள் பல சென்றுபரந்தாமனைப் பாடிப் பரவிய திருமங்கை மன்னன் இங்கு வந்து தான் திருநாட்டிற்கு எழுந்தருளியிருக்கிறார் (முக்தியடைந்தார்).

ஸ்ரீ பாஷ்யகாரராம் ராமானுஜர், இத்தலத்திற்கு வந்தபோது இத்தலத்துறை நம்பி ஒரு சிஷ்யன் போல் வந்து அவரிடம் பஞ்ச சம்ஸ்காரம் செய்து கொண்டுஉபதேசம் பெற்றார் என்பது வரலாறு. அவருக்கு ராமானுஜர் இட்டபெயரே வைஷ்ணவநம்பி என்பதாகும்

ராமானுஜர் திருவனந்தபுரம் சென்று அங்கே வைஷ்ணவ சம்பிரதாயங்களை நிலை நிறுத்த முயற்சித்த போது அச்செயலை அங்குள்ள நம்பூதிரிகள் தடுத்து நிறுத்த, இறைவனை வேண்டியதால் நம்பூதிரிகளிடமிருந்து ராமானுஜரை மீட்டு இத்தலத்திற்கு கருடாழ்வார் தூக்கி வந்ததாகவும் நம்பப்படுகிறது..

இத்தலத்திற்கு மன்னன் ஒருவன் தரிசனம் செய்ய வந்த போது “கருடன் பறக்கும் இடத்திற்கு கீழே பூமியை தோண்டினால், ஸ்ரீ தெய்வநாயகன் மற்றும் ஸ்ரீவரமங்கை ஆகியோரின் புதைந்துள்ள சிலைகள் கிடைக்கும்” என்ற அசரீரி கேட்டான், அசரீரியின்படி அந்த இடத்தை தோண்ட மேற்படி தெய்வ ரூபங்களை கிடைக்கப் பெற்றான். அவற்றை நாங்குனேரி வானமாமலை திருக்கோயிலில் அம்மன்னன் பிரதிஷ்டை செய்ததாக செய்தி உலவுகிறது.






Friday, April 5, 2024

சனிக்கிழமை - ஆலய தரிசனம் - பகுதி - 1!!!

 தென்னகத்தின் முக்திநாத் என்று அழைக்கப்படும்

ஸ்ரீ கோதண்ட ராமர் திருக்கோயில் புன்னைநல்லூர் தஞ்சாவூர்


புன்னைநல்லூர் ஶ்ரீ கோதண்டராமர் கோயில், நஞ்சையும், புஞ்சையும் கொஞ்சி விளையாடும் தஞ்சை மாவட்டம், புன்னைநல்லூர் கிராமத்தில் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ளது.
தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும்.
கி.பி.1739-1763 இல் இக்கோயில் கட்டப்பட்டது. நேபாள மன்னர் ஒருவரால் தஞ்சாவூர் மன்னருக்கு அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்ட சாளக்கிராமக் கல்லினால் ஆன சிலைகள் கருவறையை அலங்கரிக்கின்றன. கோதண்டராமர், சீதா, லட்சுமணர், சுக்ரீவனரரோடு நின்ற கோலத்தில் எழுந்தருளியுள்ளார்.
ராஜகோபுரம், பலி பீடம், கொடி மரம், திருச்சுற்று, முன்மண்டபம், கருவறை, விமானம் போன்ற அமைப்புகளுடன் அமைந்துள்ளது. திருச்சுற்றில் சக்கரத்தாழ்வார் சன்னதி, ஆழ்வார் சன்னதி, தல மரமான புன்னை மரம், ஜயவீர ஆஞ்சநேயர் சன்னதி ஆகியவை உள்ளன.இக்கோயிலின் பிரகார சுற்றுச்சுவரில் இராமாயணக் காட்சிகள் ஓவியமாகத் தீட்டப்பட்டுள்ளன.
இத்தல கோதண்டராமரை துளசி மாலை சூட்டி வழிபட்டால் கேட்ட வரம் கிடைக்கும் என்கிறார்கள். பித்ரு தோஷம் நிவர்த்தியாகும், குடும்ப பிரச்சினைகள் தீரும், குழந்தை பாக்கியம் கிடைக்கும், நவக்கிரக ரீதியான கஷ்டங்கள் தீரும் என்றும் சொல்லப்படுகிறது. தஞ்சாவூர் மாநகரத்திலிருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் இவ்வாலயம் அமைந்துள்ளது.


“நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே

தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே

சென்மமும் மரணமும் இன்றித் தீருமே

இம்மையே
 இராமவென்றிரண்டெழுத்தினால்”

(கம்பராமாயணம் – சிறப்புப் பாயிரம் 14)
























Tuesday, March 12, 2024

ஆன்மீகம் - சிறுவாச்சூர் ஶ்ரீ மதுரகாளியம்மன் கோவில் - தல வரலாறு!!!

 சிறுவாச்சூர் ஶ்ரீ மதுரகாளியம்மன் கோவில் பெரம்பலூர் மாவட்டத்தில் அமைந்த சிறுவாச்சூர் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது. இது பெரம்பலூரிலிருந்து தெற்கில் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு அம்மன் கோயிலாகும். இக்கோயிலில் ஶ்ரீ மதுரகாளியம்மன் வடக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். மதுரகாளியம்மன் கோயிலுக்கு நேர் வடக்காகச் சோலை முத்தையா கோயில் அமைந்துள்ளது. இவரே செல்லியம்மன் மற்றும் மதுரகாளியம்மனின் காவல் தெய்வமாக விளங்குபவர். இவர் அருகிலேயே அகோர வீரபத்திரர் நிற்கிறார்.

தல புராணம்:

தன் கணவனை ஆராயாமல் கொன்ற பாண்டியனிடம் நீதிகேட்டு, கோபத்துடன் மதுரையை எரித்தாள் கண்ணகி. பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றபோது வழியில் இருந்த செல்லியம்மன் கோயிலில் அன்றிரவு தங்கத் தீர்மானித்தாள். அங்கு தங்கியிருந்தபோது, அன்றிரவு செல்லியம்மன் தன் கருவறையிலிருந்து வெளிப்பட்டு, கண்ணகியிடம் வந்து, “பெண்ணே நீ இங்கு தங்கக் கூடாது” என்றார். காரணம் கேட்ட கண்ணகியிடம், தான் ஒரு மந்திரவாதியின் பிடியில் சிக்கி இருப்பதாகவும், தனது பக்தியால் தன்னிடம் பல வரங்களைப் பெற்ற அவன், ஒரு கட்டத்தில் மந்திரங்கள் மூலம் தன்னையே அவனுக்கு அடிமையாக்கி விட்டதாக கூறினார். மேலும் தனது அழிவுச் செயல்களுக்கு அவன் தன்னைப் பயன்படுத்தத் துடிப்பதாகவும். இந்த நிலையில் நீ இங்கு இருப்பதை பார்த்தால் அது உனக்கு ஆபத்து என்றார்.

செல்லியம்மனின் நிலையைக் கண்டு கண்ணகி மனம் வருந்தினாள். சற்று நேரத்தில் கோயிலுக்கு வந்த மந்திரவாதி, செல்லியம்மனை வெளியே வருமாறு அழைத்தான். திடீரென அவன் எதிரில் வாளோடு வந்த கண்ணகி, அவன் கழுத்தைத் துண்டித்தாள். வந்தது கண்ணகியல்ல, அவள் உருவத்தில் குடியேறிய காளியம்மன்தான் என்பதை உணர்ந்த மந்திரவாதி அவளிடம் இறுதியாக ஒரு வரம் வேண்டினான். அதன்படி இந்த ஆலயத்தில் தனக்கு ஒரு சமாதி அமைக்கப்பட வேண்டும் என்றும். பக்தர்கள் எல்லாம் அதன்மீது கால் வைத்துவிட்டு அம்மனை தரிசிக்க வர வேண்டும் என்றும். அதுவே தான் செய்த பாவங்களுக்கு பரிகாரம் என்றான்.

கண்ணகி உருவில் இருந்த காளியம்மனும் இதற்கு ஒத்துக்கொண்டாள். மனம் நெகிழ்ந்த செல்லியம்மன், கண்ணகியின் உதவியைப் போற்றும் வண்ணம், “இனி இந்த சிறுவாச்சூர் உனக்கானது. மதுரகாளியம்மனாக நீயே இங்கு எழுந்தருள்வாயாக. பில்லி சூனியம், காற்று, கருப்பு போன்ற தீயசக்திகள் எதற்கும் இங்கு இனி இடம் கிடையாது. சூனியங்கள் இங்கு நடைபெறாது. நான் காட்டுக்கு நடுவே அமைந்துள்ள பெரியசாமிக் குன்றுக்குச் செல்கிறேன். நீ எப்போது வேண்டுமானாலும் என்னை வந்து சந்திக்கலாம்’’ என்று கூறி மறைந்தாள்.

கண்ணகியும் இதற்கு ஒத்துக்கொண்டாள் எனினும் வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே தான் சிறுவாச்சூரில் இருப்பதாக வாக்களித்தாள். அதனால்தான் வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும் இங்கு பூசை நடக்கிறது. மேலும் பூசையின்போது மதுரகாளியம்மனுக்குத் தீபாராதனை காட்டுவதற்கு முன்பாக பூசாரி அதை செல்லியம்மன் குடியிருக்கும் பெரியசாமிக் குன்றின் திசையை நோக்கிக் காட்டிவிட்டு பிறகே மதுரகாளியம்மனின் திருவுருவத்துக்குக் காட்டுகிறார்.

வழிபாட்டு நாட்கள் மற்றும் நேரம் : 

ஶ்ரீ மதுரகாளியம்மன் திருக்கோயில் வாரத்தில் திங்கள் மற்றும் வெள்ளி கிழமைகளிலும் மட்டும் காலை 6.30 மணி முதல் இரவு 9.00 மணி வரை கோயில் நடை திறந்திருக்கும்.

சிறப்பு வழிபாட்டு நாட்கள் :

அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களிலும் மற்றும் நவராத்திரி, மகா சிவராத்திரி போன்ற சிறப்பு நாட்களிலும், தமிழ்ப் புத்தாண்டு, ஆங்கிலப் புத்தாண்டு நாட்களிலும், ஆடி பதினெட்டாம் பெருக்கு, தீபாவளித் திருநாள், கார்த்திகை தீபம், மார்கழி மாதப்பிறப்பு, வைகுண்ட ஏகாதசி, தைப்பொங்கல், தைப்பூசம் ஆகிய நாட்களில் திருக்கோயில் நடை திறக்கப்படுகிறது.