Thursday, January 18, 2024

RAMAYANAM PART 165

 இராமாயணம் தொடர்....165

இராமர் தந்தையிடம் கேட்கும் வரம்!

தசரதர் இராமரை, மகனே! உனக்கு என்ன வரம் வேண்டுமென்று கேள். முன்பு கைகேயிக்கு கொடுத்த வரத்தினால் தான் இத்தனை துன்பங்களும் ஏற்பட்டிருக்கின்றன. இராமர், தந்தையே! தங்களை தரிசித்ததே எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கின்றது. அதனால் எனக்கு எந்த வரமும் வேண்டாம் என்றார். தசரதர், இராமா! நான் உனக்கு வரம் கொடுக்க விரும்புகின்றேன். அதனால் நீ ஏதேனும் ஒரு வரத்தைக் கேள் என்றார். இராமர், தந்தை தசரதர் கொடுக்கும் வரம் தனக்கு பயன்படாமல் பிறருக்கு பயன்படும் வகையில் இருக்க வேண்டும். தந்தை கொடுக்கும் வரம் அவர் ஒருவரே கொடுப்பதாக இருக்க வேண்டும் என நினைத்தார். அப்பொழுது இராமருக்கு நினைவு வந்தது அன்னை கைகேயும், தம்பி பரதனும் தான். தான் கானகத்திற்கு செல்லுமாறு அன்னை சொல்லியதும், தந்தை, கைகேயி இனி எனக்கு மனைவி இல்லை, பரதன் எனக்கு மகனும் இல்லை என்று சொன்னது இராமரின் நினைவுக்கு வந்தது.

இராமர் தசரதரிடம், தந்தையே! தாங்கள் அன்னை கைகேயியையும், தம்பி பரதனையும் மன்னித்தருள வேண்டும் என்றார். மகனே! கைகேயி என்னிடம் கேட்ட வரம் கூர்மையான கத்தி போல் என் மார்பில் குத்தியது. அந்த வலி என் மார்பை விட்டு அகலாமல் இருந்தது. இப்பொழுது நான் உன்னை தழுவிக் கொண்டதால் அவ்வலி மறைந்துவிட்டது. இராமா! நான் பரதனை மகனாக ஏற்றுக் கொள்கிறேன். உன்னை கானகத்திற்கு அனுப்ப காரணமாய் இருந்த கைகேயியை நான் மன்னிக்க மாட்டேன் என்றார். இதைக்கேட்ட இராமர், தந்தையே! நான் அயோத்தியில் பிறந்தது கோசலை நாட்டை ஆள்வதற்கு அல்ல. தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் துன்பத்தை தரும் இராவணாதி அரக்கர்களை கொல்லும் பொருட்டே நான் இராமனாக அவதாரம் எடுத்தேன். இப்படி இருக்கையில் நான் அயோத்தியின் அரசனாக முடிசூட வேண்டும் என்று நினைத்தது என் தவறு.

இதில் அன்னையின் தவறு என்ன உள்ளது. அதனால் தாங்கள் அன்னையை மன்னித்தருள வேண்டும் என கேட்டுக் கொண்டார். இதைக்கேட்ட தசரதர், இராவணாதி அரக்கர்களின் அழிவுக்கு காரணமாக இருந்தது கைகேயியின் செயல் தான் என்பதை புரிந்து கைகேயியை மன்னிதருளினார். பிறகு தசரதர், இராமருக்கும், இலட்சுமணனுக்கும் விடைக் கொடுத்து வானுலகம் சென்றார். அதன் பின் தேவர்கள் இராமரை பார்த்து, பெருமானே! தங்களுக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டனர். இராமர் தேவர்களிடம், போர்களத்தில் மாண்ட வானரங்கள் அனைவரும் புத்துயிர் பெற்று எழ வேண்டும். வானரங்கள் வாழும் கானகத்தில், நீர் வளமும், நில வளமும், பழங்கள், காய்கனிகள் வற்றாது இருக்க அருள் செய்ய வேண்டும் என்று கேட்டார். தேவர்களும் இராமர் கேட்டபடியே வரத்தை அருளினர்.

போர்களத்தில் மாண்ட வானரங்கள் அனைவரும் புத்துயிர் பெற்று எழுந்தனர். இதைப் பார்த்த மற்ற வானரங்கள் மகிழ்ச்சியில் ஆடிபாடினர். அப்பொழுது சிவபெருமானும், பிரம்ம தேவனும் தோன்றி, இராமருடைய பதினான்கு ஆண்டு வனவாசம் இன்றுடன் முடிவடைகிறது. ஆதலால் தாங்கள் அயோத்திக்கு விரைந்துச் செல்லுங்கள். தங்கள் வரவை நோக்கி பரதன் எதிர்நோக்கி காத்து கொண்டிருக்கிறான். தாங்கள் குறிப்பிட்ட நேரத்தில் போகவில்லையென்றால் பரதன் அக்னியில் வீழ்ந்து உயிரை மாய்த்துக் கொள்வான். ஆதலால் காலம் தாழ்த்தாமல் அயோத்திக்குச் செல்லுங்கள் என்று கூறி இராமரை வாழ்த்திவிட்டு சென்றனர்.

No comments:

Post a Comment