Monday, January 1, 2024

RAMAYANAM PART 154

 இராமாயணம் தொடர்...154

இராவணனின் மகிழ்ச்சி...!

🔸 அனைவரும், இராமரிடம் பெருமானே! அடைக்கலம் புகுந்தவரை காக்கும் பொருட்டு இலட்சுமணன் உயிர் தியாகம் செய்து உயிர்ப் பெற்றுள்ளார் எனக் கூறினர். இதைக் கேட்டு இராமர் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தார். இலட்சுமணனின் புகழ் ஓங்கி நிற்கும் எனக் கூறி வாழ்த்தினார். பிறகு இராமரும், இலட்சுமணரும் ஓய்வு பெற சென்றுவிட்டனர். வானரங்கள் இந்த மூலப்படையை இராமர் எவ்வாறு அழித்திருப்பார் என்பதை போர்க்களத்திற்கு சென்று பார்த்தனர். அங்கு அரக்கர்களின் பல சேனைகள் வீழ்ந்துக் கிடப்பதைக் கண்டு மகிழ்ச்சியடைந்தனர். பிறகு இராமரை நினைத்து துதித்து போற்றினர். இராவணன், நான் இலட்சுமணனை கொன்று விட்டேன். அங்கு மூலப்படைகள் இராமனை கொன்று இருப்பார்கள் என நினைத்து அளவற்ற மகிழ்ச்சியில் இருந்தான். 

🔸 அதனால் அவன் தனக்காக போர் செய்த படைத்தலைவர்களுக்கு விருந்து வைக்க ஏற்பாடு செய்ய நினைத்தான். உடனே ஏவலாட்களை அழைத்து, விருந்திற்கு ஏற்பாடு செய்யுங்கள் என கட்டளையிட்டான். இராவணனின் கட்டளைக்கிணங்க ஏவலர்கள் சுவையான பண்டங்களும், இனிப்பு வகைகளும், வகை வகையான குளிர் பானங்களும் நிரப்பி வைத்தனர். அரண்மனையில் ஆடலும், பாடலும் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. அப்போது தூதர்கள் அங்கு வந்து, அரசே! தாங்கள் அனுப்பிய மூலப்படைகளை இராமர் அழித்து விட்டார் எனக் கூறினர். இதைக்கேட்டு இராவணன் திடுக்கிட்டான். ஒரு மனிதன் மூலப்படையை தனியாக நின்று அழித்து விட்டானா? இது ஆச்சர்யமாக இருக்கிறதே! அப்படி இருப்பினும் நான் இலட்சுமணனை கொன்றுவிட்டேன். 

🔸 இராமன், இலட்சுமணன் மாண்டச் செய்தியை அறிந்து அவனும் வீழ்வான் என நினைத்து மகிழ்ந்தான். அப்போது மற்றொரு தூதர்கள்  அங்கு வந்து, அரசே! தாங்கள் வீழ்த்திவிட்டு வந்த இலட்சுமணன் உயிர் பெற்றான். அனுமன் சஞ்சீவி மலையைக் கொண்டு உயிர்ப்பித்து விட்டான் எனக் கூறினர். இதைக் கேட்டு இராவணன் அதிர்ச்சி அடைந்தான். மிகவும் கோபம் கொண்டான். உடனே அவன் கோபுரத்தின் மேல் நின்று மூலப்படையை அழிந்ததை பார்த்தான். இனி என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றான். இராவணன் மந்திர ஆலோசனை மண்டபத்திற்கு சென்றான். அங்கு இராவணனின் பாட்டன் மாலியவான் இராவணனை பார்த்து, இராவணா! இப்பொழுதாவது நான் சொல்வதைக் கேள். 

🔸 சீதையை இராமனிடம் கொண்டுச் சென்று ஒப்படைத்துவிடு. இது தான் உனக்கு நலம். உன்னால் இந்த அரக்க குலம் அழியும் படி செய்து விடாதே. இப்பொழுதாவது விபீஷணன் கூறியதை நினைத்துப் பார். அந்த பரம்பொருளே! மண்ணுலகில் இராமனாக அவதரித்துள்ளான். இனியும் அதர்ம செயலை செய்யாதே என அறிவுரைக் கூறினான். இதைக்கேட்டு இராவணன் மாலியவான் மீது கோபம் கொண்டான். பிறகு மகோதரனிடம், மகோதரா! இன்னும் எஞ்சியிருக்கும் அரக்க சேனை படைகளை தயாராக இருக்கும்படி கட்டளையிட்டான். இராவணனின் கட்டளைப்படி அரக்கப் படைகள் போருக்கு தயாராக இருந்தன. இராவணன் நீராடி சிவபூஜை செய்தான். பிறகு தன்னிடமிருந்த விலையுயர்ந்த பொருட்கள், ஆடை ஆபரணங்கள் எல்லாவற்றையும் தான தர்மம் செய்தான்.

தொடரும்...!

No comments:

Post a Comment