Tuesday, December 5, 2023

RAMAYANAM PART 133

 இராமாயணம் தொடர் ...133

வானரங்கள் இந்திரஜித்துடன் போரிடுதல்!...

❆ அனுமன் இந்திரஜித்தை பார்த்து, போர் புரிபவர்கள் தங்களை பெருமையாக கூற மாட்டார்கள். வீரத்தில் நீ மட்டும் தான் சிறந்தவன் என பெருமை கொள்ளாதே. எங்களிடமும் வலிமை வாய்ந்த வீரர்கள் உள்ளார்கள் என்பதை மறந்து விடாதே. அவர்களுடன் உன்னை ஒப்பிட்டால் அவர்களை காட்டிலும் நீ சிறியவன் ஆவாய். எங்களிடமும் வில்லில் சிறந்த வீரர்கள் உள்ளனர். நீ வேண்டுமென்றால் இந்திரனை வென்றவனாக இருக்கலாம். ஆனால் நாங்கள் உன்னிடம் தோல்வி பெற வரவில்லை, வெற்றி பெறவே வந்துள்ளோம். வீரர்கள் வாயால் பேசுவது சிறப்பல்ல, கையால் பேசுங்க என்றான். பிறகு அனுமன் இந்திரஜித்தை பார்த்து, நீ யாருடன் போர் புரிய வந்தாய்? எங்களுடனா? இல்லை இலட்சுமணனுடனா? இல்லை இராவணனை அழிக்க வந்திருக்கும் இராமனுடனா? என்றான்.

❆ இந்திரஜித், என் தம்பி அதிகாயனை கொன்ற இலட்சுமணனின் உயிரை எடுக்க தான் வந்துள்ளேன். நான் விண்ணுலகத்தவரையும், மண்ணுலகத்தவரையும் தனியாக நின்று அழிக்கும் ஆற்றல் படைத்தவன் என்றான். பிறகு அனுமன் இந்திரஜித்தை நோக்கி ஒரு பாறையை தூக்கி எறிந்தான். ஆனால் அந்த பாறை இந்திரஜித் மேல் பட்டு துள்தூளானது. நீலனும் இந்திரஜித்தை நோக்கி மலைகளை எறிந்து கொண்டு இருந்தான். ஆனால் இந்திரஜித் அதை தன் அம்புகளால் தூள்தூளாக்கினான். பிறகு அங்கதன் வந்து போர் புரிய தொடங்கினான். ஆனால் அவனை இந்திரஜித்தின் பாணங்கள் வீழ்த்தியது. வானரங்கள் இந்திரஜித்தின் மீது பாறைகளை தூக்கி போட்டு களைத்து போயினர். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த இலட்சுமணன், விபீஷணா! நீ சொன்னது சரி தான். நம் படைகள் அழிந்துக் கொண்டிருக்கிறது.

❆ அங்கே பார்! நம் படைகள் வீழ்ந்துக் கொண்டு இருக்கிறார்கள். நான் முதலில் படைகளை அனுப்பியது தவறு. நானே சென்று அவனிடம் போர் புரிந்திருக்க வேண்டும் என்றான். விபீஷணன், இலட்சுமணா! முன்பு தேவர்களும் இப்படித்தான் இவனிடம் தோற்றனர். இவனிடம் கவனமாக போர் புரிய வேண்டும். ஏனென்றால் இவன் மாய வேலை செய்வதில் வல்லவன் என்றான். பிறகு இலட்சுமணன், இந்திரஜித்தை எதிர்த்து போரிட அவன் முன் சென்று நின்றான். அப்பொழுது இந்திரஜித், சாரன் என்னும் ஒற்றனை பார்த்து இவன் யார் எனக் கேட்டான். சாரன், இவன் தான் இராமனின் தம்பி இலட்சுமணன். தங்கள் தம்பிகளை கொன்றவன் என்றான். இதைப் கேட்ட அங்கிருந்த அரக்கர்கள் இலட்சுமணனை தாக்க ஓடி வந்தனர்.

❆ இலட்சுமணன், அவர்கள் அனைவரையும் தன் அம்புகளுக்கு இரையாக்கினார். இலட்சுமணனின் வில் வேகத்தையும், கரவேகத்தையும் கண்டு இந்திரஜித் வியப்படைந்தான். இலட்சுமணனை பார்த்து, இவன் சிறந்த வில் வீரன் எனப் புகழ்ந்தான். அங்கு யானைப்படைகள், குதிரைப்படைகள் என அனைத்தையும் இலட்சுமணன் அம்பை ஏவி அழித்துக் கொண்டிருந்தான். இலட்சுமணனின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் அரக்கர்கள் மாண்டனர். இதைப் பார்த்த இந்திரஜித் தன் படைகள் அழிவதைக் கண்டு கோபங்கொண்டான். உடனே அவன் தேரில் நின்று இட்சுமணனுடன் போர் புரிய தொடங்கினான். இதைப் பார்த்த அனுமன், இலட்சுமணனை தன் தோளில் ஏறிக் கொண்டு போர் புரியுமாறு வேண்டினான். இலட்சுமணன் அனுமனின் தோளில் இருந்துக் கொண்டே அரக்க சேனைகளை அழித்தார்.

No comments:

Post a Comment