Monday, November 27, 2023

RAMAYANAM PART 129

 இராமாயணம் தொடர் ..129

இலட்சுமணன் - அதிகாயன்!...

✧ அனுமனின் போர் திறமையை கண்டு அதிகாயன் அதிசயித்தான். பிறகு அவன் நான் அனுமனுடனா போர் புரிய வந்தேன் என நினைத்துக் கொண்டு இலட்சுமணன் இருக்கும் இடத்திற்கு தேரை செலுத்தினான். இலட்சுமணனும், அதிகாயனும் போர் புரிய தொடங்கினர். அதிகாயன் தேரில் நின்று போர் புரிந்ததால், அங்கதன் இலட்சுமணனை தன் தோளின் மீது ஏறி போர் புரியுமாறு கேட்டுக் கொண்டான். அதிகாயன், இலட்சுமணன் இருவருக்கும் கடும்போர் நடந்தது. இலட்சுமணன் அம்புகளை ஏவி அதிகாயனின் தேரையும், தேர் பாகனையும் வீழ்த்தினார். பிறகு அதிகாயன் மேல் பல அம்புகளை ஏவினார். இலட்சுமணனின் அம்புகளை எதிர்த்து நின்று எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் நிற்கும் அதிகாயனைக் கண்டு வானர வீரர்கள் திகைத்து நின்றனர். தேவர்களும், யட்சர்களும், ரிஷி முனிவர்களும் இந்த அதிசயச் சண்டையைக் காண விண்ணில் கூடி நின்றனர்.

✧ இலட்சுமணன் அதிகாயனை வீழ்த்தும் வழி தேடித் திகைத்து நின்றார். அப்போது வாயுதேவன் இலட்சுமணன் அருகில் வந்து, அதிகாயனை பிரம்மாஸ்திரத்தால் மட்டுமே வீழ்த்த முடியும். வேறு எந்த ஆயுதங்களாலும் வீழ்த்த முடியாது எனக் கூறிவிட்டு சென்று விட்டார். உடனே இலட்சுமணன் பிரம்மாஸ்திரத்தை வரவழைத்து, பூமி அதிரும்படி அதனை அதிகாயன் மேல் செலுத்தினார். அதிகாயன் பிரம்மாஸ்திரத்தை வீழ்த்த ஏவிய அஸ்திரங்கள் பலனற்றுப் போயின. அந்த அஸ்திரம் அதிகாயனின் தலையை துண்டித்து வானவழியாகச் சென்றது. இதனை பார்த்த வானர வீரர்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர். தேவர்களும் இதனைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர். பிறகு இலட்சுமணன் அங்கதனின் தோளில் இருந்து கீழே இறங்கினார். இலட்சுமணின் இத்தகைய ஆற்றலைக் கண்ட விபீஷணன், இந்திரஜித் அழிவது உறுதி என நினைத்துக் கொண்டான். அதிகாயன் மாண்டதை கண்ட நராந்தகன், இலட்சுமணனுடன் போரிட விரைந்து வந்தான்.

✧ அங்கதன் அவனை தடுத்தி நிறுத்தி, தான் வைத்திருந்த வாளால் வெட்டிக் கொன்றான். போர்மத்தன் எனும் அரக்கன் நீலனோடு கடுமையாக வெகுநேரம் போரிட்டு மாண்டான். வயமந்தன் எனும் அரக்கனுடன், இடபன் எனும் வானர வீரன் போரிட்டு மாண்டான். கும்பனையும், அவனின் படைகளையும் சுக்ரீவன் தனித்து நின்று போரிட்டுக் கொன்றான். நிகும்பன் என்னும் அரக்கன் அனுமனிடம் போர் புரிந்துக் கொண்டிருந்தான். அப்போது அங்கதன் சூலாயுதம் ஒன்றை எடுத்து அனுமனை நோக்கி தூக்கி எறிந்தான். அனுமன் அதை தன் கையில் பிடித்து, நிகும்பன் மீது செலுத்தினான். நிகும்பன் அந்த இடத்திலேயே மாண்டான். அதிகாயன் மாண்டச் செய்தி இராவணனுக்கு தெரிவிக்கப்பட்டது. அங்கு நடந்தவற்றை தூதர்கள் இராவணனிடம் கூறினர். இராவணன் இதைக் கேட்டு மிக கோபம் கொண்டான். இருப்பினும் தன் மகன் அதிகாயன் இறந்துவிட்டான் என்னும் செய்தியை அறிந்து வருந்தினான்.

✧ இராவணனின் மனைவியும், அதிகாயனின் தாயுமான தான்யமாலினி தன் மகன் இறந்து விட்டான் என்னும் செய்தியை அறிந்து, ஓடி வந்து இராவணின் காலில் விழுந்து கதறி அழுதாள். என் மகன் எங்கே? என் மகன் மாண்ட பிறகு நான் உயிர் வாழ்வதில் என்ன பயன்? இனி நான் எப்பொழுது அவன் முகத்தை காண்பேன்? என் மகன் மாண்டதற்கு நீ தான் காரணம்? நீ பிறர் மனைவியின் மேல் ஆசைப்பட்டதால் இன்று என் மகனுக்கு இந்த நிலைமை. நீ மாற்றான் மனைவியை விரும்பி உன் அறிவை இழந்துவிட்டாய். உன் தம்பி விபீஷணன், கும்பகர்ணன் சொன்ன அறிவுரை நீ கேட்கவில்லை. உன் பாட்டனாகிய மாலியவான் சொன்ன அறிவுரையும் கேட்கவில்லை. உன் பெண்ணாசையால் இந்த அரக்க குலமே அழியப் போகிறது எனக் கூறி புலம்பி அழுதாள். பிறகு தான்யமாலினியை தேவலோக பெண்களான ரம்பை, ஊர்வசி, மேனகை போன்றோர் தேற்றி அழைத்துச் சென்றனர்.

தொடரும்...

No comments:

Post a Comment