Monday, November 27, 2023

RAMAYANAM PART 128

 இராமாயணம் தொடர் - 128

மயிடனின் தூது !!!

✾ இராமர் மயிடனை பார்த்து, இங்கு எதற்காக வந்தாய்? எனக் கேட்டார். அதற்கு அவன், நான் இராவணனின் மகனான அதிகாயன் அனுப்பிய தூதுவன். அதிகாயன், தங்கள் தம்பி இலட்சுமணனிடம் போர் புரிய அழைப்பு விடுத்திருக்கிறார் என கூறினான். இராமர், தூதுவனே! என் தம்பியை வெல்ல இந்த உலகில் எவரும் இல்லை. போர்க்களத்தில் அவனின் வலிமையை காண்பீர்கள் எனக் கூறி அனுப்பினார். பிறகு இராமர், இலட்சுமணன் ஒருவனே அதிகாயனை தனித்து நின்று போரிட்டு அழிப்பான். இலட்சுமணனை சாதரணமாக எண்ணி விடாதீர்கள். என்னைக் காட்டிலும் இலட்சுமணன் சிறந்த வீரன் என அங்கிருந்தவர்களிடம் கூறினார். அப்பொழுது விபீஷணன், இராமா, அதிகாயன் பிரம்ம தேவனிடம் தவம் செய்து எவராலும் அழிக்க முடியாத வரத்தினை பெற்றுள்ளான்.

✾ அதனால் இலட்சுமணனுடன் நாம் அனைவரும் செல்வது நலம் என்றான். இராமர், விபீஷணா! நீ இலட்சுமணனுடன் சென்று, அவனின் போர் வேகத்தையும், கர வேகத்தையும் காண்பாயாக எனக் கூறி இராமர் அனுப்பி வைத்தார். பிறகு இலட்சுமணனும், விபீஷணனும், இராமரை தொழுது அங்கிருந்து போர்க்களத்திற்கு சென்றனர். அங்கு அரக்க படைகளும், வானர படைகளும் பெரும் ஆரவாரத்துடன் மோதிக் கொண்டனர். அரக்கப் படைகளின் தாக்குதலை தாக்கு பிடிக்காமல் வானர படைகள் நிலை தடுமாறின. இலட்சுமணன் தன்னை நோக்கி வந்த அரக்கர்களை, தன் அம்பிற்கு இரையாக்கினார். இதைப் பார்த்த தாருகன் என்னும் அரக்கன், தேர் மீது நின்றுக் கொண்டு இலட்சுமணன் மீது அம்புகளை ஏவினான். இலட்சுமணன் அந்த அம்புகளை தகர்த்தெறிந்தார். 

✾ பிறகு இலட்சுமணன் அம்பினை ஏவி தாருகனின் தலையினை துண்டாக்கினார். தாருகன் இறந்ததை கண்ட மற்ற அரக்கர்கள், இலட்சுமணனை தாக்க ஓடி வந்தனர். இலட்சுமணன் அவர்கள் அனைவரையும் நொடியில் வீழ்த்தினார். அப்பொழுது இராவணன், அதிகாயனுக்கு துணையாக யானைப்படைகளை அனுப்பி வைத்தான். அங்கு வந்த யானைப்படைகளை இலட்சுமணன் தன் அம்பினால் வீழ்த்தினார். இலட்சுமணனின் கரவேகத்தை எவராலும் பார்க்க முடியவில்லை. மற்றொரு புறம் அனுமன் யானைப்படைகளை வீழ்த்திக் கொண்டு இருந்தான். அனுமன், யானைகளை கைகளால் அடித்தும், காலால் மிதித்தும், கடலில் ஏறிந்தும், தரையில் தேய்த்தும் கொன்றான்.

✾ இதனைப் பார்த்து கோபங்கொண்ட தேவாந்தகன் எனும் அரக்கன் அனுமனைத் தாக்க வந்தான். அனுமனின் தாக்குதலை தாக்கு பிடிக்காமல் அவன் மாண்டான். இதைப் பார்த்து மிகவும் கோபங்கொண்ட அதிகாயன், உன்னை கொல்லாமல் விடமாட்டேன் என்றான். அப்பொழுது அனுமன் உன்னுடன் திரிசரனையும் அழைத்து வா என்று கூறிக் கொண்டிருக்கும் போது அரக்கன் ஒருவன் தேரில் வந்து அனுமன் மீது பாய்ந்தான். அனுமன், அந்த அரக்கனை தேரில் இருந்து தள்ளி, தேரை அவன் மீது ஏற்றிக் கொன்றான். அனுமனின் போர் திறமையை கண்டு அதிகாயன் அதிசயித்தான்.

தொடரும்...

No comments:

Post a Comment