Sunday, November 12, 2023

RAMAYANAM PART 115

 இராமாயணம் தொடர்...115

கும்பகர்ணனின் அறிவுரை!...

👉 மறுபடியும் கிங்கரர்கள் இராவணனிடம் சென்று, கும்பகர்ணன் எழவில்லை என்றனர். இராவணன் குதிரை படைகளை கும்பகர்ணன் மீது ஓடவிட்டு எழுப்புங்கள் எனக் கட்டளையிட்டான். அவ்வாறே கிங்கரர்களும் செய்தனர். ஆனால் இதுவும் பயனற்று போனது. குதிரை படைகள் கும்பகர்ணன் மீது சென்றது அவனுக்கு தாலாட்டுவது போல் இருந்தது. இதனால் அவன் ஆழ்ந்த தூக்கத்திற்குச் சென்றான். இவ்வளவு முயற்சி செய்தும் கும்பகர்ணன் எழுந்தபாடில்லை என இராவணனிடம் சென்று கூறினர். இதற்கு மேல் என்ன செய்வதென்று ஆலோசனைக் கேட்டனர். இராவணன் அவர்களிடம், வாள், சூலம், உலக்கை இவற்றைக் கொண்டு தாக்கியாவது கும்பகர்ணனை எழுப்புங்கள் என்றான். பிறகு ஆயிரம் வீரர்கள் கும்பகர்ணனின் கன்னங்களில் வாள், சூலம், உலக்கை கொண்டு தாக்கினர். அப்பொழுது கும்பகர்ணன் ஓர் பூதம் போல் எழுந்து அமர்ந்தான்.

👉 தூக்கத்தில் இருந்து எழுந்த கும்பகர்ணனால் பசியை தாங்க முடியவில்லை. உடனே அவன் உணவு எங்கே? என்றான். உடனே சமைக்கப்பட்ட உணவுகள் வண்டி வண்டியாக கொண்டு வரப்பட்டது. பிறகு நூற்றுக்கணக்கான குடங்களில் கொண்டு வரப்பட்ட கள் அனைத்தையும் குடித்தான். இவ்வளவு சாப்பிட்ட பிறகும் கும்பகர்ணனுக்கு பசி இன்னும் அதிகமானது. பசி அடங்காததால் ஆயிரத்து இருநூறு எருமை கடாக்களை தின்ற பிறகு அவன் சிறிது பசியாறினான். பிறகு அவன் உறங்கச் சென்றான். அப்போது கிங்கரர்கள் பயந்து சென்று உன் அண்ணன் இராவணன் அழைத்ததாக அவன் காதில் சென்று கூறினார்கள். பிறகு அவன் ஒரு நெடுமலையை போல் எழுந்துச் சென்றான். கும்பகர்ணன் அரசவை சென்றடைந்ததும், இராவணனின் கால்களில் வீழ்ந்து வணங்கினான். இராவணன், கும்பகர்ணனை தன் தோளோடு தழுவிக் கொண்டான்.

👉 அங்கு கும்பகர்ணன் தனக்கு விசாலமாக இருக்கும் ஓர் அரியணையில் அமர்ந்தான். பிறகு இராவணன், கும்பகர்ணனுக்கு நல்ல உடைகளையும், விசேஷமான ஆபரணங்களையும் கொடுத்து அணிந்து கொள்ளச் செய்தான். சந்தனக் குழம்பைக் கொண்டு வரச் செய்து, அதையும் அவன் உடலெங்கும் பூசிக்கொள்ளச் செய்தான். அவன் மார்பில் கவசத்தை அணிவித்து, நெற்றியில் வீர பட்டத்தைக் கட்டி போருக்குத் தயார் செய்தான். இதையெல்லாம் பார்த்த கும்பகர்ணன் இராவணனிடம், 'எனக்குச் சிறப்பு செய்வதெல்லாம் எதற்காக" என்றான். அதற்கு இராவணன், இரண்டு மானிடர்கள், எழுபது வெள்ளம் வானர சேனையோடு இங்கு வந்துள்ளனர். அவர்கள் இலங்கையை சூழ்ந்து போரிட்டு, என்னையும் வென்று விட்டார்கள். ஆதலால் நீ சென்று அவர்களை உன் பசிக்கு இரையாக்கிக் கொள் என்றான். இதைக் கேட்டதும் கும்பகர்ணன் திடுக்கிட்டான்.

👉 அண்ணா! போர் வந்துவிட்டதா! கற்புடைய சீதையின் துயரம் இன்னமும் தீரவில்லையோ? தேவலோகத்திலும், மண்ணுலகத்திலும் வளர்ந்த நமது புகழ் அழிந்து போனதோ? நாம் அனைவருமே அழியப் போகும் காலம் வந்து விட்டதோ? ஒருவனுக்கு நிலம் காரணமாகவும், பதவி காரணமாகவும் போர் வரும். ஆனால் உனக்கு ஒரு பெண்ணின் காரணமாக போர் வந்துவிட்டது. ஆனால் இன்று உனக்கு சீதையினால் அழிவு நேர்ந்து விட்டதே! அன்று அரசவை ஆலோசனையின் போது நானும், விபீஷணனும், பாட்டன் மாலியவானும் சீதையை விடுவிக்குமாறு சொன்ன அறிவுரைகளை நீ கேட்கவில்லை. விதியின் செயலை நாம் என்ன செய்வது? நம் குலத்தின் பண்பு அழிந்துவிட்டது. நம் உறவினர்களும், சேனைகளும், நம் குலமும் அழிய வழிவகுத்து விட்டாய். உன் நிலைமையை நினைத்தால் என் உள்ளம் பதறுகிறது. இனி நம் அசுர குலம் வாழுமோ! வாழாதோ! என்பது தெரியவில்லை என்றான்.

தொடரும்...

No comments:

Post a Comment