Showing posts with label ஆன்மிகம். Show all posts
Showing posts with label ஆன்மிகம். Show all posts

Friday, March 8, 2024

108 பிரபல சிவன் கோயில்கள் தரிசன பலன்கள் !!!

*1 திருகுடந்தை* ஊழ்வினை பாவம் விலக


 *2 திருச்சிராப்பள்ளி* வினை அகல


 *3 திருநள்ளாறு* கஷ்டங்கள் விலக


 *4 திருவிடைமருதூர்* மனநோய் விலக


 *5 திருவாவடுதுறை* ஞானம் பெற


 *6 திருவாஞ்சியம்* 

 தீரா துயர் நீங்க


 *7 திருமறைக்காடு* கல்வி மேன்மை உண்டாக


 *8 திருத்தில்லை* 

முக்தி வேண்ட


 *9 திருநாவலூர்* 

மரண பயம் விலக


 *10 திருவாரூர்* 

குல சாபம் விலக


 *11 திருநாகை* ( *நாகப்பட்டினம்* ) 

சர்ப்ப தோஷம் விலக


 *12 திருக்காஞ்சி* ( *காஞ்சிபுரம்* ) 

முக்தி வேண்ட


 *13 திருவண்ணாமலை* நினைத்த காரியம் நடக்க


 *14 திருநெல்லிக்கா* முன்வினை விலக


 *15 திருச்செங்கோடு* *அர்த்தநாரீஸ்வரர்* *கோவில்* மணவாழ்க்கை சிறப்புடைய


 *16 திருகருக்காவூர்* கர்ப்ப சிதைவு தோஷம் விலக


 *17 திரு* *வைத்தீஸ்வரன்* கோவில் நோய் விலக


 *18 திருகோடிக்கரை* பிரம்ம தோஷம் விலக


 *19 திருக்களம்பூர்* சுபிட்சம் ஏற்பட


 *20 திருக்குடவாயில்* ( *குடவாசல்* ) இறந்தவர் ஆன்மா சாந்தி அடைய


 *21 திருசிக்கல்* ( *சிக்கல்* ) 

துணிவு கிடைக்க


 *22* *திருச்செங்காட்டங்குடி*

 கோர்ட் வம்பு , வழக்கு உள்ளவர்கள் தோஷம் விலக


 *23 திருக்கண்டீச்சுரம்* நோய் விலக , தீராத புண் ஆற


 *24 திருக்கருக்குடி* ( *மருதாநல்லூர்* ) குடும்ப கவலை விலக


 *25 திருக்கருவேலி* ( *கருவேலி )* 

குழந்தை பாக்கியம் பெற , வறுமை நீங்க


 *26 திருவழுந்தூர்* ( *தேரெழுத்தூர்* ) 

முன் ஜென்ம பாவம் விலக


 *_27 திருச்சத்திமுற்றம்_* மண வாழ்க்கை கிடைக்க


 *28 திருப்பராய்துறை* ( *திருச்சி* ) 

கர்வத்தால் வீணானவர்கள் சுகம் பெற


 *29 திருநெடுங்களம்* ( *திருச்சி )* 

தீரா துயரம் தீர

 ( இடர் களைய )


 *30 திருவெறும்பூர்* ( *திருச்சி* ) அதிகாரத்தால் வீழ்ந்தவர்கள் சுகம் பெற


 *31 திருப்பைஞ்ஞீலி* ( *திருச்சி )* 

யம பயம் விலக


 *32 திருவையாறு* அக்னி தோஷம் உள்ளவர்கள் தோஷம் விலக


 *33 திருவைகாவூர்* வில்வ அர்ச்சனை செய்து பாவத்தை போக்க


 *34 திருக்கஞ்சனூர்* திருமண தோஷம் விலக


 *35 திருமங்கலக்குடி* ( *சூரியனார் கோவில்* ) 

குழந்தை பாக்கியம் பெற


 *36 திருமணஞ்சேரி* திருமண தோஷம் விலக


 *37 திருமுல்லைவாயில்* சந்திர திசை நடப்பவர்கள் சந்திர தோஷம் விலக


 *38 திருவெண்காடு* ஊழ்வினை தோஷம் உள்ளவர்கள் கல்வி மேன்மை


 *39 திருநெல்வேலி* பிராமண குற்றம் விலக


 *40 திருக்குற்றாலம்* *குற்றாலநாதர்* *கோவில்* 

முக்தி வேண்ட


 *41 திருவாலவாய்* ( *மதுரை )* 

 தென்திசையில் குடியிருப்பவர்கள் நட்சத்திர தோஷம் உள்ளவர்கள் வழிபட


 *42 திருப்பரங்குன்றம்* ( *மதுரை* ) 

வாழ வழி தெரியாது தவிப்பவர்கள் வழிபட


 *43 திருவாடானை* *ஆதிரத்தினேசுவரர்* *கோவில்* 

 தீரா பாவம் விலக


 *44 திருமுருகன் பூண்டி* *திருமுருகநாத* *சுவாமி கோவில்* 

மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் தோஷம் விலக


 *45* *திருப்பாதிரிப்புலியூர்* ( *புட்லூர்* ) 

தாயை விட்டு பிரிந்து இருக்கும் குழந்தை தோஷம் விலக


 *46 திருவக்கரை* செய்வினை தோஷம் விலக


 *47 திருவேற்காடு* வாணிப பாவம் விலக


 *48 திருமயிலாப்பூர்* மூன்று தலைமுறை தோஷம் விலக


 *49 திருஅரசிலி* ( *ஒழுந்தியாம்பட்டு)*  காமத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தோஷம் விலக


 *50 திருவாலங்காடு* வீண் வம்பில் மாட்டிக் கொண்டவர்கள் தோஷம் விலக


 *51 திருவேட்டிபுரம்* ( *செய்யாறு )* 

ஞானம் கிடைக்க


 *52 திருப்பனங்காடு* பந்த பாசத்தில் இருந்து விலக


 *53 திருவூறால்* ( *தக்கோலம்* ) உயிர்வதை செய்த பாவம் விலக


 *54 திருப்பாச்சூர்* குடும்ப கவலைகள் நீங்க


 *55* *திருவெண்ணைநல்லூர்* 

பித்ரு தோஷம் விலக


 *56 திருவதிகை* 

நல் மனைவி அமைய


 *57 திருவாண்டார்* *கோவில்* 

 முக்தி வேண்ட


 *58 திருமுது குன்றம்* ( *விருத்தாசலம்* ) 

தீரா பாவம் விலக


 *59 திருக்கருவூர்* ( *கரூர்* ) 

பசுவதை செய்வதன் வழிபட


 *60 திருப்பாண்டிக்* ( *கொடுமுடி* ) 

பித்ரு தோஷம் , பிரேத சாபம் விலக

 

 *61* *திருக்கொடுங்குன்றம்* ( *பிரான்மலை* ) மறுபிறவி வேண்டாதவர்கள் வழிபட


 *62 திருகோகர்ணம்* ( *கர்நாடகம்* ) 

தேவ தோஷம் விலக


 *63 திருப்புகலூர்* பெரியோரை அவமதித்த குற்றம் நீங்க


 *64 திருத்தோணிபுரம்* ( *சீர்காழி )* 

குல சாபம் நீங்க


 *65 திருவைத்தீஸ்வரன் கோவில்* 

பிணிகள் விலக , அங்கார தோஷம் விலக


 *66* *திருக்கருப்பறியலூர்* ( *தலைஞாயிறு*)

 கர்வத்தால் குரு துரோகம்


 *67 திருப்பனந்தாள்* பிறன்மனை நாடியவர்கள் தோஷம் விலக


 *68 திருப்புறம்பயம்* மரண பயம் விலக


 *69 திருநெய்த்தானம்* மோட்ஷம் வேண்ட


 *70* *திருவானைக்கா*  கர்மவினை அகல


 *71 திருவேதிக்குடி* தான் எனும் அகம்பாவத்தால் சீரழிந்தவர்கள் தோஷம் விலக


 *72 திருவலஞ்சுழி* வறுமை அகல


 *73 திருநாகேஸ்வரம்* ஸர்ப்ப ஸாபம் விலக


 *74 திருநாகேஸ்வர* *சுவாமி* ( *கும்பகோணம்* ) நவகிரஹ தோஷம் விலக


 *75 திருநல்லம்* *(கோனேரிராஜபுரம்)*  வேதத்தை பரிகசித்து அவலத்துக்கு உள்ளானவர்கள் தோஷம் விலக


 *76 திருத்தெளிச்சேரி* ( *காரைக்கால் )* 

சூரிய தோஷம் உள்ளவர்கள் குறை தீர


 *77* *திருசெம்பொன்பள்ளி*

 வீரபத்ரன் குல வம்சத்தினர் வணங்க


 *78 திருத்தலச்சங்காடு* ( *தலைச்செங்காடு)* 

அடிமையாட்கள் சாபம் பெற்றவர்கள் தோஷம் விலக


 *79 திருவன்னியூர்* ( *அன்னூர்* ) சோமாஸ்கந்தரை குலதெய்வமாக கொண்டவர்கள் வழிபட


 *80 திருநன்னலம்* ( *நன்னிலம் )* 

 ஞானம் வேண்டுபவர்கள் வேண்ட


 *81 திருராமனாதீச்சுரம்* ( *திருக்கண்ணாபுரம்* ) 

கணவனின் சந்தேகப் பார்வைக்கு உட்பட்ட பெண்களது தோஷம் விலக


 *82 திருமருகல்* கணவன் மனைவி அன்புடன் வாழ


 *83 திருச்சிக்கல்* பங்காளி பகை உள்ளவர்கள் வழிபட


 *84 திருச்சேறை* இல்லறம் மேலும் சிறக்க


 *85 திருக்கோளிலி* ( *திருக்குவளை* ) நவகோள்களால் பாதிக்கப்பட்டவர்கள் வழிபட


 *86 திருவாய்மூர்* செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் தோஷம் விலக


 *87 திருநெல்லிக்கா* கல்வி மேன்மை அடைய


 *88 திருவெண்டுறை* ( *வண்டுறை* ) வறுமையிலிருந்து விலக


 *89 திருக்கடிக்குளம்* ( கற்பகநாதர்குளம் ) வினைகள் விலக


 *90 திருஆலங்குடி* புத்திர தோஷம் விலக , செல்வம் சேர்க்கை பெற


 *91 கொட்டாரம்* 

அமைதி பெற


 *92 திட்டை* 

சந்திர தோஷம் விலக


 *93 பசுபதி கோவில்* இராகு தோஷம் உள்ளவர்கள் வழிபட


 *94 கொட்டையூர்* 

செய்த பாவங்கள் வேயொரு வீழ


 *95 ஓமாம்புலியூர்* 

சனி தோஷம் விலக


 *96 தருமபுரம்* சிவனடியாரை அவமதித்த குற்றம் விலக


 *97 மயிலாடுதுறை* அனைத்து பாவங்களும் விட்டோட


 *98 உத்தரகோச மங்கை* கர்மவினைகள் அல்ல


 *99 இராமேஸ்வரம்* பித்ரு தோஷம் விலக


 *100 காளையர்கோவில்* பிறவி பயன் கிடைக்க


 *101 பெண்ணாடம்* ஊழ்வினை தோஷம் அகல


 *102* *இராஜேந்திரப்பட்டினம்*

 கர்மவினை அகல


 *103 அவினாசியப்பர்*

 ஏழு தலைமுறை பாவங்கள் விலக


 *104 குரங்கினில்* *முட்டம்* 

 நினைத்த காரியம் நடக்க


 *105 பவானி* 

 பித்ரு தோஷம் போக்க


 *106 ஆச்சாள்புரம்* 

 மண வாழ்க்கை சிறக்க

 

 *107 ஆடுதுறை* திருஷ்டி தோஷம் விலக

 

 *108 சங்கரன்கோவில்* ஸர்ப்ப தோஷம் விலக.



Friday, February 23, 2024

ஆன்மீகம் - ஸ்ரீ தேவி மஹாத்மியம் - சிறப்புகள் !!!

 ஸ்ரீதேவி மஹாத்மியம் மார்க்கண்டேய புராணத்தின் நடு நாயகமாக உள்ளது. துரோகிகளின் சூழ்ச்சிகளால் அரசனாகிய சுரதனும், சமாதி என்னும் வியாபாரி ஒருவனும் வஞ்சிக்கப்பட்டனர். அவர்கள் தங்கள் நாட்டையும் வீட்டையும் துறந்து நிம்மதி தேடி அலைந்தனர். ஒரு காட்டில் சந்தித்துக் கொண்ட இருவரும் அங்கு வசித்த ஒரு முனிவரிடம் அடைக்கலம் புகுந்தனர்.

உலகியலில் சிக்கி அதிலிருந்து விடுபட நினைக்கும் முடுச்சுகளுக்கு சாது சங்கமே சிறந்த மருந்து என்பதை போதிக்கும் விதமாக ஸ்ரீ தேவி மஹாத்மியம் விளங்குகிறது.

உலகியலில் பற்றுடைய மனிதனுக்கும் விலங்குகளுக்கும் எந்த வேறுபாடு இல்லை என்று கூறும் அந்த முனிவர் வைராக்கியத்தை போதிக்கிறார்.

பின்னர் தேவியை நியமத்துடன் வழிபடுவதன் மூலமும் தேவியின் வரலாறுகளை பக்தியுடன் படிப்பதன் மூலமும் அவளுடைய அருளை பெற்று இக பர சுகங்களை பெறலாம் என்று போதிக்கின்றார்.

தேவியின் வரலாற்றை அறிய அந்த இருவரும் விரும்புகின்றனர். அவர்களுக்கு அந்த முனிவர் கூறியது ஸ்ரீதேவி மஹாத்மியம்.

மகிஷாசுரன், தும்பரன்,லோசனன், ரத்த பீஜன், சன்டன், முண்டன் சும்பன் நிசும்பன் முதலிய அரக்கர்களால் பிடிக்கப்பட்ட தேவர்கள் தேவியை துதித்து தங்களை காக்கும் படி வேண்டினர்.

எனவே தேவி அவ்அரக்கர்களை அழித்து தேவர்களை காக்கின்றாள். அரக்கர்களை நமது மனதில் தோன்றும் காமம் குரோதம் முதலிய தீய எண்ணங்களாகக் கொன்டால் அவற்றை தேவியின் அருளால் மட்டுமே அளிக்க முடியும் என்பதை இது உணர்த்துகிறது.

மூன்று வருடங்கள் சுரதனும்,சமாதியும் முனிவர் போதித்தபடி நியமங்களுடன் ஸ்ரீதேவி மகாத்மாயத்தை ஜெபித்து வழிபட்டனர் அதனால் மகிழ்ந்த தேவி அவர்களது விருப்பத்திற்கு ஏற்ற வரங்களை வழங்கினார்.

 ஸ்ரீ தேவி மஹாத்மியத்தை நியமத்துடன் படிப்பவர்கள் அனைவருக்கும் தேவியின் அருள் நிச்சயமாக இருக்கும். எந்த பழமையும் எதிர்பார்க்காமல் படிப்பவர்களுக்கு சித்த சுத்தியும் தேவியின் திருவடிகளில் பக்தியும் ஏற்படும். தேவியின் அருளால் மோட்சமும் சித்திக்கும். 

ஸர்வ மங்கள மாங்கல்யே சிவே ஸர்வார்த்த ஸாதிகே ! 

ஸரண்யே த்ர்யம்பகே கௌரி நாராயணி நமோஸ்துதே !!

 - ஶ்ரீதேவி மஹாத்மியம் 11.10

முழு புத்தகம் - Click Here



Thursday, February 1, 2024

தை அமாவாசையும் அபிராமி பட்டரும் !!!

அபிராமி பட்டர் (இயற்பெயர்: சுப்ரமணிய ஐயர்) ஸ்ரீவித்யா நெறி நின்று, யோகமுறைப்படி பராசக்தியை வழிபட்ட ஒரு அந்தணர். இவர் அபிராமி அந்தாதியை இயற்றியவர். இவர் வாழ்ந்த காலம் பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதி முதல் பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதி வரை என கருதப்படுகிறது.

அபிராமி காட்சி 

சோழவள நாட்டின் காவிரிக்கரையில் உள்ள சிவாலயங்களில் ஒன்று திருக்கடையூர். அபிராமிவல்லி அமிர்த கடேஸ்வரர் ஆலயமும் ஒன்றாகும். அபிராமி பட்டர் அன்றைய சோழநாட்டுப்பகுதியான திருக்கடையூரில் வாழ்ந்து வந்தார்.இசைத்துறையிலும் பாடல் புனைவதிலும் வல்லவராக இருந்தார். அம்பிகையை வழிபடும் சாக்த நெறியில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டார். ஒளி வடிவில் அம்பிகையைத் தரிசித்து பேரின்பம் கண்டார். ஆனால், இவரின் தெய்வீகநிலையை மற்றவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. பித்தன் என்று வசைபாடினர். அவர்களின் ஏச்சையும் பேச்சையும் அபிராமி பட்டர் ஒரு பொருட்டாக எண்ணவில்லை.

பௌர்ணமி திதி


அக்காலத்தில் தஞ்சையைத் தலைநகராகக் கொண்டு மகாராஷ்டிர வம்சத்தைச் சேர்ந்த முதலாம் சரபோஜி மன்னர் (Serfoji I) ஆண்டு வந்தார் (பொ.ஊ. 1675–1728). தெய்வ பக்தியும் மதப்பற்றும் மிகுந்தவர். அவர் ஒரு தை அமாவாசை தினத்தன்று காவிரி சங்கமத்தில் நீராட எண்ணித் தம் பரிவாரங்களுடன் காவிரிப்பூம்பட்டினம் சென்று தம் நேர்த்திக்கடனை நிறைவு செய்தபின், ஸ்ரீ அமிர்தகடேசுவரர், ஸ்ரீ அபிராமி அம்பிகையையும் தரிசனம் செய்துகொள்ளவேண்டும் என்ற ஆவல் மிகுதியால் திருக்கடவூரை அடைந்தார்.

அரசர் திருக்கோயிலுக்கு உள்ளே சென்றபொழுது கோயிலில் அபிராமி பட்டர் அம்பிகையின் முன் இவ்வுலக நினைவு ஏதுமின்றி தியான நிலையில் அமர்ந்திருந்தார். மன்னரின் வருகையைக் கூட கவனிக்காமல் பட்டர் இருப்பதைக் கண்ட மன்னர் வியப்பில் அருகில் இருந்தோரை நோக்கி, “இவர் யார்?” என்று கேட்டார். அருகில் இருந்தவர்கள், “இவர் ஒரு பித்தர்; தம் குல ஆசாரங்களை எல்லாம் கைவிட்டுவிட்டு ஏதோ ஒரு துர்தேவதையை வழிபடுகின்றவர்” என்று கூறினார்கள்.ஆனால், சரபோஜி மன்னர் அவர்கள் சொன்னதை நம்பவில்லை.ஆகையால் திரும்பி வரும்போது பட்டரின் உள்ளுணர்வை அறிய விரும்பிய மன்னர், பட்டரே! இன்று என்ன திதி? என்று கேட்டார். அம்பிகையின் அருள்மிகு தோற்றத்தை ஆனந்தமாய்க் கண்டு பரவசமுற்றிருந்த நிலையில் இருந்த அபிராமி பட்டர் வாய் குழறி, “இன்று பௌர்ணமி” என்றார்.

அரசரும் அவருடைய பரிவாரமும் சென்ற பின்னர், தியானம் கலைந்தெழுந்த அபிராமி பட்டர் நிகழ்ந்ததை உணர்ந்து பெரிதும் வருந்தினார். ஏற்கெனவே ஊரும், உலகமும் தம்மைப் பித்தன் என்று சொல்லி எள்ளி நகையாடுவதை மெய்ப்பிப்பது போலவே நடந்த இந்த நிகழ்ச்சியால் மனம் வருந்தி, அரசர் வரும் வேளையில் கவனக்குறைவால் ஏற்பட்ட தவறிலிருந்து அம்பிகையே தன்னைக் காத்தருளவேண்டும் என்று வேண்டிக்கொண்டு அபிராமி சந்நிதி முன் ஒரு ஆழமான ஒரு குழியை வெட்டி, அதில் விறகை அடுக்கி தீமூட்டினார். அதற்கு மேல் ஒரு விட்டமும், நூறு கயிறுகளாலான உறியையும் கட்டி, அதில் ஏறி அமர்ந்து கொண்டார். அம்பிகை எனக்குக் காட்சி கொடுத்து இந்தப் பழியை நீக்காவிட்டால் என் உயிரை விடுவேன்” என்று சபதம் செய்து விட்டு, அபிராமி அந்தாதியைப் பாட ஆரம்பித்தார்.

"உதிக்கின்ற செங்கதிர்" என்று ஆரம்பிக்கும் இந்த அந்தாதிப் பாடல்களில் ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் உறியின் ஒவ்வொரு கயிறையும் அறுத்துக் கொண்டே வந்தார்.அப்போது எழுபத்தொன்பதாவது பாடலாகிய,


                “விழிக்கே அருளுண்டு அபிராம வல்லிக்கு வேதம்சொன்ன

                 வழிக்கே வழிபட நெஞ்சுண்டு எமக்கவ் வழிகிடக்கப்

                 பழிக்கே சுழன்றுவெம் பாவங்க ளேசெய்து பாழ்நரகக்

                 குழிக்கே அழுந்தும் கயவர்தம் மோடென்ன கூட்டினியே”

என்ற பாடலை பாடிய உடன், ஸ்ரீ அபிராமியம்பிகை பட்டருக்கு வெளிப்பட்டுத் தோன்றிக் காட்சி கொடுத்தருளினாள். தன் தாடங்கம் என்னும் தோடினை எடுத்து வானவீதியில் தவழ விட்டாள். அந்த தாடங்கம் வானில் மிதந்து பலகோடி நிலாக்கள் ஒன்றுகூடினாற் போல் ஒளியைப் பொழிந்து பெளர்ணமியைப் போல பிரகாசித்து ஜொலித்து. அவள் பட்டரிடம், நீ வாய் தவறி மன்னனிடம் கூறிய சொல்லையும் மெய்யே என நிரூபித்தேன். நீ தொடங்கிய அந்தாதியை தொடர்ந்து பாடு, என்றாள். அம்பிகை அருள்பெற்ற அபிராமிப்பட்டர் பரவசமுற்றார். அதோடு, தம் அனுபூதிநிலையை வெளிப்படுத்தும் அந்தாதிப் பாடல்களைப் பாடி நிறைவு செய்தார்.

மன்னர் அபிராமி பட்டரிடம் மன்னிப்பு கோரினார்.அரசர் பட்டருக்கு ஏராளமான மானியம் கொடுத்துத் தலைமுறைத் தலைமுறையாக அனுபவித்துக் கொள்ளும்படி வேண்டினார்.

இந்தப்பாடல்கள் தமிழ் இலக்கியத்தில் "அபிராமி அந்தாதி" என்றப்பெயரில் வந்தன, அந்தாதி என்றால் (அந்தம்-முடிவு, ஆதி-துவக்கம்) முதல் பாடல் எந்த வார்த்தையில் முடிந்ததோ அதே வார்த்தையில் அடுத்தப்பாடல் தொடங்க வேண்டும். அபிராமி அந்தாதியில் மொத்தம் நூறு பாடல்கள் உள்ளன. இவையனைத்தும் ஒரே இரவில் பாடப்பெற்றது. அபிராமி அந்தாதியில் இன்னொரு சிறப்பம்சம் என்னவென்றால் முதல் வரி 'உதிக்கின்ற'என்ற வார்ததையுடன் ஆரம்பிக்கும் முதல் பாடல் அதே வார்த்தையை கடைசி வார்த்தையாகக் கொண்டு நூறாவது பாடல் முடிவடைகிறது.
















Friday, January 19, 2024

ஸ்ரீரங்கம் ஆலயமும் இராமாயணத் தொடர்பும்

ஸ்ரீரங்கம் கோயில் சிலை பிரம்மாவின் தவத்தால் திருப்பாற்கடலிருந்து வெளிப்பட்டு தோன்றியதாகும் .இதை சுயம்பு என்று கூறுவர். பிரம்மா நித்திய பூசை செய்ய சூரியனை நியமித்தார். பிறகு சூரிய குலத்தில் பிறந்த அரசன் இட்சுவாகு இந்த சிலையை தனது தலைநகரமாகிய அயோத்திக்கு வழிபடக் கொண்டு சென்றான். இராமர் அச்சிலையை இலங்கையிலிருந்து தனது பட்டாபிசேகத்துக்கு வந்த விபீடணனுக்கு பரிசாகக் கொடுத்தார்.

 இதனை விபீடணன் தனது தலையின் மீது சுமந்து இலங்கைக்கு எடுத்துச் செல்கையில் வழியில் காவிரியாற்றின் கரையை அடைந்தான். அங்கு சிலையை கீழே இறக்கி வைக்க கூடாது என்று என்னினான். அப்போது ஒரு சிறுவன் அங்கு ஆட்டு மந்தையை மேய்த்து கொண்டிருந்தான், அச்சிறுவனிடம் அச்சிலையை கொடுத்து விட்டு கீழே வைக்க கூடாது என்று சொல்லி விட்டு இளைப்பாறினான். அச்சமயம் சிறுவன் சிலையை கீழே வைத்து விட்டான், பின்னர் விபீடணன் அவன் மீண்டும் புறப்பட வந்தான், சிறுவன் சிலையை கீழே வைத்ததை கண்டு, சிறுவன் என்ன காரியம் செய்தாய் என்று கூறி சிலையை எடுத்தான். எடுக்க முடியவில்லை. எவ்வளவோ முயன்று பார்த்தான். கலங்கினான். பின் சிறுவனாக வந்தது விநாயக பெருமான் சிலையை கீழே வைத்தது நான் தான் என்று கூறி மறைந்தார். அவ்விநாயகற்கு காவிரி ஆற்றின் மற்றொரு கரையில் கோவில் உள்ளது, அதுவே மலை மீது இருக்கும் மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயில் ஆகும், திருவரங்கம் கோவிலுக்கு எதிரில் அமைந்துள்ளது. பின் வைகுண்டபெருமாள் அரங்கநாதராக காட்சியளித்து காவிரிக்கரையிலேய தங்கி இருக்க விருப்பம் என்று தெரிவித்தார். 

அங்கு சோழ நாட்டை ஆண்டுவந்த தர்மவர்ம சோழன் ஆறுதல் கூறினார். விபீடணனுக்காக, தான் "தென்திசை இலங்கை நோக்கி" பள்ளிகொண்டருள்வதாக உறுதியளித்தார். பின்னர் தர்மவர்ம சோழன் அச்சிலையைச் சுற்றி கோயில் எழுப்பி வழிபாடு செய்தார். பின் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கோவில் மணலால் மூடப்பட்டது. பின் வந்த சோழ மன்னர் ஒருவர் மணலால் மூடிய கோவிலை ஒரு கிளியின் உதவியுடன் கோவிலை கண்டுபிடித்ததால் கிளி சோழன் என்றும் சோழன் கிள்ளிவளவன் என்றும் அழைக்கப் பெற்றார், அக்கோவிலை புரணமைத்து, பின்பு அரங்கநாதருக்கு பிரம்மாண்டமான பெரிய கோவிலை கட்டினார் சோழன் கிள்ளிவளவன்

குடதிசைமுடியைவைத்துக் குணதிசைபாதம் நீட்டி
வட திசைபின்பு காட்டித் தென்திசையிலங்கை நோக்கி
கடல்நிறக் கடவுளெந்தை அரவணைத்துயிலிமாகண்டு
உடலொனக்குருகுமாலோ என்செய்கேனுலகத்தீரே.

 தொண்டரடிப் பொடி ஆழ்வார் முதலாயிரம் திருமாலை 19 வது பாசுரம்


ஸ்ரீரங்கம் கோவில் பல ஆன்மீக சான்றோர்களையும் ஈர்த்துள்ளது. ஆழ்வார்கள் கால கடைசியில் வந்தவர் கம்பர். அவர் ராமாயணத்தை சாலிவாகன வருடம் அதாவது பொ.ஊ. 14 இல் ராமாயணத்தை திருவரங்கத்தில் கவியரங்கு ஏற்றினார். அம்மண்டபம் இன்றும் ஸ்ரீரங்கநாச்சியார் சன்னதி முன்பு காணலாம்.

தொகுப்பு
வா ஶ்ரீராம்
மாநில ஊடக இணைச் செயலர்
தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு 

செல் 9786795104

Wednesday, January 17, 2024

மனம் கவரும் அழகிய திருச்சி சுற்றுலா தலங்கள் - சிறப்புத் தொகுப்பு !!!

 திருச்சி மலைக்கோட்டையில் காணப்படும் குகையில் 'சிரா' என்னும் பெயருடைய சமணத் துறவி தங்கியிருந்து தவமிருந்ததாக அக்குகையில் உள்ள பதினோராம் நூற்றாண்டுக் கல்வெட்டு கூறுகிறது. "சிரா" துறவியின் பள்ளி, சிராப்பள்ளி என்றாகி அதுவே இவ்வூருக்குப் பெயராகி உள்ளது என்றும் கருதப்படுகிறது. 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்றில் திருச்சிராப்பள்ளி, திரு-சிலா-பள்ளி (பொருள்: "புனித-பாறை-ஊர்)" எனக் குறிப்பிடப்பட்டுள்ளதால் அதிலிருந்து இப்பெயர் வந்திருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது. வேறு சில அறிஞர்கள் "திரு-சின்ன-பள்ளி" (புனித-சிறிய-ஊர்) என்பதிலிருந்தும் உருவாகியிருக்கலாம் என்ற கருத்தினைக் கொண்டுள்ளனர்.

1. திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவில்

 திருச்சி மாநகரின் அடையாளச் சின்னமாகத் திகழ்வது இந்த மலைக்கோட்டையாகும். இது அமைந்துள்ள மலைப்பாறை 273 அடி உயரம் கொண்டது. நிலவியல் அடிப்படையில், இப்பாறை ஒரு பில்லியன்  ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமையானது. இம்மலைக் கோட்டையுள் அமைந்துள்ள கோயில்கள் உச்சிப் பிள்ளையார் கோயில், சிவன் கோயில்கள் ஆகும். இக்கோட்டை பல வரலாற்று நிகழ்வுகளின் களமாக இருந்துள்ளது. இதற்குள் பல்லவர் காலக் குடைவரைக் கோயில் ஒன்றும், நாயக்கர் காலக் கோட்டை ஒன்றும் உள்ளன. இக்கோட்டை, நாயக்கர்களுக்கும் பிஜாப்பூர், கர்நாடகம், மராத்திய ஆகிய அரசுகளுக்கும் இடையே இடம்பெற்ற பல போர்களைக் கண்டுள்ளது. இந்தியாவில் பிரித்தானியப் பேரரசு காலூன்றுவதற்கு அடிப்படையாக அமைந்த கர்நாடகப் போர்களில் இக்கோட்டை முக்கிய பங்கு வகித்துள்ளது.

2. அருள்மிகு அரங்கநாதர் கோவில் ,ஸ்ரீரங்கம்

திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்  108 வைணவத் திருத்தலங்களுள் முதல் திருத்தலம். சோழ நாட்டு திருப்பதிகளில் முதன்மை தலமாகவும், திருவரங்கம் பூலோக வைகுண்டம் என அழைக்கப்படுகிறது. காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளால் சூழப்பட்ட தீவில், சிறப்புமிக்க 108 வைணவத் திருத்தலங்களுள் முதன்மையான மிகப் பெரிய அரங்கநாதசுவாமி கோயிலின் ஏழு சுற்று மதில்களுக்குள் அமைந்துள்ளதுமான திருவரங்கம் (ஸ்ரீரங்கம்) என்னும் ஊர், 600 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு தீவு நகரம் ஆகும். இச்சுற்று மதில்களில் வாயில்களாக 21 கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் மிகப் பெரிதான இராசகோபுரம், 72 மீட்டர் (236 அடி) உயரத்துடன், தென்னிந்தியாவிலேயே பெரிய கோபுரமாக விளங்குகின்றது. இது 17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாயினும், 1987-ஆம் ஆண்டு முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டது. சோழ நாட்டு காவிரி ஆற்று கரையில் அமைந்துள்ள முதல் திவ்விய தேச தலம்.

திருவரங்கம் கோவிலைப் பாதுகாத்து, திருப்பணிகள் புரிய 1966-இல் ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் (UNESCO) இக்கோயிலுக்குத் தொழிநுட்ப உதவி அளிக்க முடிவு செய்தது. 

3. அருள்மிகு கமலவல்லி  நாச்சியார் சமேத அழகிய மணவாளர் கோவில், உறையூர்

உறையூர் அழகிய மணவாளர் கோயில் 108 வைணவத் திருத்தலங்களுள் சோழ நாட்டு இரண்டாவது திருத்தலம் ஆகும். இது திருச்சி மாவட்டத்தில் உள்ள உறையூரில் அமைந்துள்ளது. இத்தலம் திருஉறையூர் (திருக்கோழி) என்ற பெயரில் புராண காலத்தில் அழைக்கப்பட்டுள்ளது. திருப்பாணாழ்வார் அவதரித்த திருத்தலம்.சோழ நாட்டு அரண்மனை யானை இங்கு வந்தபோது கோழி ஒன்று யானையைத் தாக்கி ஓடச் செய்ததால் கோழியூர் என்ற பெயர் ஏற்பட்டு அது பின்னர் திருக்கோழி என அழைக்கப்பட்டது.

4.அருள்மிகு ஜம்புகேசுவரர் கோவில்,திருவானைக்காவல்

புராண காலத்தில் வெண் நாவல் மரங்கள் நிறைந்த காடாக இத்தலம் இருந்தது. அங்கே ஒரு வெண் நாவல் மரத்தடியில் ஒரு சிவலிங்கம் இருந்தது. சிவகணங்களில் இருவர் தாங்கள் பெற்ற சாபம் காரணமாக இக்காட்டில் ஒரு யானையாகவும், சிலந்தியாகவும் பிறந்தனர்.

சிவலிங்கம் கூரையில்லாமல் வெயில், மழையில் கிடந்தது. சிலந்தி சிவலிங்கத்தின் மேல் வலை பின்னி வெய்யில், மழை மற்றும் மரத்தின் சருகுகள் லிங்கத்தின் மேல் விழாமல் காத்தது. யானை காவிரியில் இருந்து தன் துதிக்கை மூலம் நீரும் பூவும் கொண்டுவந்து வழிபட்டது. யானை சிலந்தி பின்னிய வலையைத் தேவையற்றதாகக் கருதி அதை அழித்துவிட்டுச் செல்லும். சிலந்தி மறுபடியும் வலைபின்னி தன் வழிபாட்டைத் தொடரும். தினந்தோறும் இது தொடர, யானையைத் தண்டிக்க எண்ணிய சிலந்தி யானையின் துதிக்கையில் புக, யானையும், சிலந்தியும் போராட கடைசியில் இரண்டும் மடிந்தன. இவைகளின் சிவபக்திக்கு மெச்சி சிவபெருமான் யானையைச் சிவகணங்களுக்குத் தலைவனாக ஆக்கினார்.

சிலந்தி மறு பிறவியில் கோச்செங்கட் சோழன் என்ற அரசனாகப் பிறந்தது. பூர்வஜென்ம வாசனையால் கோச்செங்கட் சோழன் யானை ஏற முடியாதபடி குறுகலான படிகளைக் கொண்ட கட்டுமலைமீது சிவலிங்கம் ஸ்தாபித்து 70 கோவில்கள் கட்டினான். அவை யாவும் மாடக்கோவில் என்று அழைக்கப்படுகின்றன. கோச்செங்கட் சோழன் கட்டிய முதல் மாடக்கோவில் திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் ஆலயமாகும்.இச்சிவாலயம் சிவனின் பஞ்சபூத தலங்களில் ஒன்றான நீருக்கு உரியது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துளள 60-ஆவது சிவத்தலமாகும்.

5.அருள்மிகு மாரியம்மன் கோவில்,சமயபுரம்

மூலவரான மாரியம்மன் எட்டு கைகளுடன், தலை மாலை கழுத்தில், சர்ப்பக் கொடையுடன், ஐந்து அசுரர்களின் தலைகளைத் தன் காலால் மிதித்து தனது சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் படி இருக்கிறார். பெருவளை வாய்க்கால் மற்றும் மேற்கே உள்ள மாரி தீர்த்தம் (தெப்பக்குளம்) இக்கோயிலின் தீர்த்தங்களாகும். இக்கோயிலின் தல மரம் வேப்ப மரமாகும்.அம்மனை வழிபட தமிழகம் மட்டுமன்றி வெளி மாநிலத்தவரும், பிற நாட்டு சுற்றுலாப் பயணிகளும் வருகின்றனர். செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் சித்திரைத் தேர்த்திருவிழா, ஆடி வெள்ளி, பூச்சொரிதல் விழா போன்ற விழாக்காலங்களிலும் கூட்டம் அதிகமாகிறது. ஆடி மாதத்தில் எல்லா வெள்ளிக் கிழமைகளிலும் கூட்டம் கட்டுக்கடங்காத அளவில் இருக்கும். குறிப்பாக ஆடி கடைசி வெள்ளிக்கிழமை மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
இது ஒரு சோழ மன்னர் தன் தங்கைக்கு சீதனமாக ஒரு நகரையும் கோட்டையையும் உண்டாக்கிக் கொடுத்த இடமாகக் கருதப்படுகிறது. பிற்காலத்தில், பாண்டிய மன்னர்களின் படையெடுப்பால் அவை அழிந்து வேம்புக்காடாக மாறியதாகவும், தொடர்ந்து அங்கு அம்மன் கோயில் உருவானதாகவும் கூறப்படுகிறது. வைணவி என்ற மாரியம்மன் சிலை ஸ்ரீரங்கத்தில் இருந்தது. அதன் உக்கிரம் தாங்க முடியாமல் போனதால், அங்கிருந்த ஜீயர் சுவாமிகள், அச்சிலையை அங்கிருந்து அப்புறப்படுத்த ஆணையிட்டார். அவருடைய ஆணைப்படி வைணவியின் சிலையை அப்புறப்படுத்த வந்தவர்கள் வடக்கு நோக்கிச் சென்று சற்று தூரத்தில் தற்போதுள்ள இனாம் சமயபுரம் என்னுமிடத்தில் இளைப்பாறினார்கள். பிறகு அதனை எடுத்துக்கொண்டு தென்மேற்காக வந்து தற்போதுள்ள மாரியம்மன் கோயில் அமைந்துள்ள கண்ணனூர் அரண்மனை மேட்டில் வைத்துவிட்டுச் சென்றனர். அப்போது, காட்டு வழியாகச் சென்ற வழிப்போக்கர்கள், அச்சிலையைப் பார்த்து அதிசயப்பட்டு அக்கம்பக்கத்தில் இருந்த கிராம மக்களைக் கூட்டிவந்து அதற்கு ”கண்ணனூர் மாரியம்மன்” என்று பெயரிட்டு வழிபடத் தொடங்கினர். அக்காலகட்டத்தில் விஜயநகர மன்னர் தென்னாட்டின் மீது படையெடுத்து வந்து, கண்ணனூரில் முகாமிட்டார்கள். அப்போது மாரியம்மனை வழிபட்டு, தாங்கள் தென்னாட்டில் வெற்றி பெற்றால் அம்மனுக்கு கோயில் கட்டி வழிபடுவதாக சபதம் செய்தார்கள். அதன்படியே வெற்றி பெறவே, கோயிலைக் கட்டினார்கள். விஜயரெங்க சொக்கநாத நாயக்கர் காலத்தில் பொ.ஊ. 1706-ல் அம்மனுக்குத் தனியாக கோயில் அமைத்தார்கள் என்று வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன. சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் தோற்றுவிக்கப்பட்ட கண்ணனூர் மாரியம்மன் கோயில் இன்று, ”சமயபுரம் மாரியம்மன்” கோயிலாக மாறி புகழ்பெற்று விளங்குகிறது.

6. அருள்மிகு பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில், குணசீலம்

குணசீலம் என்பதின் பெயர் கௌனம் (பொருள் குணமாகும்) மற்றும் "சீலம்" என்பதிலிருந்து பெறப்படுகிறது, அதாவது நோய் குணப்படுத்தப்படும் இடம். "குணம்" என்பது குணங்கள் மற்றும் "சீலம்" என்பதன் அர்த்தம் "குறைந்த நிலைப்பாட்டைக் கொண்டது" என்பதாகும். எனவே குணசேலம் என்பது விஷ்ணு கீழே வந்து, தனது பரலோக நிலைப்பாட்டிலிருந்து பக்தர்களின் பிரச்சினைகளைக் குறிப்பிடுகிறார்.பவிஷிய புராணத்தில், குணசீல மகாத்மியத்தில் இந்த கோயிலின் முக்கியத்துவத்தை ஒருவர் குறிப்பிடுகிறார். தாலிபியா மகரிஷி மற்றும் அவரது சீடரான குணசீல ரிஷி ஆகியோர் இமயமலைக்குச் சென்றனர். குணசீல ரிஷி திருப்பதியில் தங்கியிருந்தார். இது வெங்கடாசலபதியை மிகவும் கவர்ந்தது. குணசீலத்தில் இறைவன் தோன்றி, பக்தர்களை ஆசீர்வதிப்பார். காவிரியில் குளித்துவிட்டு குணசீலத்தில் தனது ஆசிரமத்தில் கடுமையான தவம் செய்தார். அவரது நேர்மை இறைவனை ஈர்த்ததால், தேவியுடன் சேர்ந்து அவருக்கு முன்பாக தோன்றினார். காளி யுகம் முடிவடையும்வரை இங்கு தங்குவதாக வாக்குறுதி அளித்தார். பிரசன்ன வெங்கடாசலபதி தரிசன மகிழ்ச்சியுடன், குணசீல மகரிஷி தனது ஆசிரமத்தில் இருந்து தனது அன்றாட பூசைகளை இங்கு பக்தர்களுக்கு வழங்கினார். திவாதார யுகத்தின் முடிவில் குணசீல ரிஷி தினசரி பூஜைகளைத் தொடர தனது இளம் சீடரை நியமித்தார். எனினும், காவேரியில் பெருவெள்ளம் ஏற்பட்டதால் சீடர் அந்த இடத்தை விட்டு வெளியேறினார், இதனால் பூஜைகள் திடீரென முடிவுக்கு வந்தது. இறைவன் குழிக்குள் மறைய முடிவு செய்தார். பல ஆண்டுகளுக்குப் பிறகு, சோழ மன்னன் நயன் வர்மன், இந்த இடத்தை தலைநகராக உரையூருடன் ஆட்சி செய்தவர், குணசீலத்திற்கு வழக்கமாக வருகை தருவார். ஒவ்வொரு நாளும், மாடுகளை பன்றியின் அருகே இருந்து பசுக்களைப் பாலாக்கிவிட்டு, பால் முழுவதும் அவரது கோட்டிற்கு மீண்டும் கொண்டு செல்வார்.குணசீலம் ஆலயத்தின் முழுமையான புனரமைப்புடன் கூடுதலாக, தமிழ்நாடு அரசு உரிமத்தின் உத்தியோகபூர்வ முத்திரை கொண்ட மனநல சுகாதார மறுவாழ்வு மையத்தை அறக்கட்டளை அமைத்துள்ளது. இம்மையம் தனிப்பட்ட அறைகள் மற்றும் கழிப்பறை வசதிகள் கொண்டது. ஒவ்வொரு வாரமும் ஒரு மனநல மருத்துவர் மையத்திற்கு வருகிறார். தினசரி அடிப்படையில் இந்த மனநிலை சவாலான மக்களை கவனித்துக்கொள்ளும் தொண்டர்கள் உள்ளனர். 48 நாட்களுக்கு உச்சிகாலம்(நண்பகல்) மற்றும் அர்த்தசாமத்தின்(இரவு) போது ஒவ்வொரு நாளும் இந்த மனச்சோர்வுடைய மக்கள் மீது புனித நீர் தெளீக்கபடுகிறது. அவர்கள் உண்மையாகவே தங்கள் வேண்டுகோள்களை இறைவனிடம் பிரார்த்தித்து, இந்த வழிமுறையை பின்பற்றினால், குணமடைவார்கள் என்று நம்புகிறார்கள். இன்று இது நம்பிக்கை மற்றும் நவீன சிகிச்சையின் கலவையாகும்.

7. கல்லணை

கல்லணை (Grand Anicut) இந்தியாவின் உள்ள உலக பழமை வாய்ந்த அணையாகும். இந்த அணை கரிகால் சோழனால் பொ.ஊ. முதலாம் நூற்றாண்டில் காவிரி மீது கட்டப்பட்டுள்ளது. இது திருச்சிக்கு மிக அருகில் உள்ளது. இந்த அணை தஞ்சாவூர் மாவட்டத்தில், பூதலூர் வட்டத்தில் உள்ள கல்லணை - தோகூர் கிராமத்தில் அமைந்துள்ளது. திருச்சியில் அகண்ட காவேரி என அறியப்படும் காவிரி ஆறு முக்கொம்பில் வடபுறமாக கொள்ளிடம், தென்புறமாக காவிரி என இரண்டாகப் பிரிகிறது. இவ்விடத்தில் ஆங்கிலேயர் ஆட்சியில் மேலணை கட்டப்பட்டுள்ளது. காவிரிக்கும், கொள்ளிடத்துக்கும் இடையில் திருவரங்கம் ஆற்றுத்தீவு உள்ளது. அங்கிருந்து காவிரி ஆறு கிளை கல்லணையை வந்தடைகிறது. அங்கு காவிரி ஆறானது உள்ளாறு (கொள்ளிடம்), காவிரி, வெண்ணாறு, புது ஆறு என 4 ஆகப் பிரிகிறது. உள்ளாறு (கொள்ளிடம்) மீண்டும் கொள்ளிடத்தில் இணைகிறது. காவிரி இவ்வாறு பிரியுமிடத்தில்தான் கல்லணை கட்டப்பட்டுள்ளது.

பாசன காலங்களில் காவிரி, வெண்ணாறு, புது ஆறு ஆகியவற்றிலும், வெள்ளக் காலங்களில் கொள்ளிடத்திலும் தண்ணீர் கல்லணையில் இருந்து திறந்துவிடப்படும். அதாவது வெள்ள காலங்களில் கல்லணைக்கு வரும் நீர் காவிரிக்கு இடது புறம் ஓடும் கொள்ளிடம் ஆற்றில் (முக்கொம்பில் காவிரியில் இருந்து பிரிந்த கிளை ஆறு) திருப்பி விடப்படும். எனவே தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டத்தின் பல இலட்சம் ஏக்கர் நிலம் வெள்ளத்தில் இருந்து காப்பற்றப்படுகிறது.

இந்த அணை கரிகாலன் என்ற சோழ மன்னனால் பொ.ஊ. முதலாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. தற்போதுள்ள அணைகளில் கல்லணையே மிக பழமையானது எனவும், தற்போதும் புழக்கத்தில் உள்ளது எனவும் அறியப்படுகிறது. இதுவே உலகின் மிகப்பழமையான நீர்ப்பாசனத் திட்டம் என்றும் கூறப்படுகிறது. மணலில் அடித்தளம் அமைத்து கல்லணையைக் கட்டிய பழந்தமிழர் தொழில்நுட்பம் இன்று வரை வியத்தகு சாதனையாகப் புகழப்படுகிறது.

கல்லணையின் நீளம் 1080 அடி, அகலம் 66 அடி, மற்றும் உயரம் 18 அடியாகும். இது நெளிந்து வளைந்த அமைப்புடன் காணப்படுகிறது. கல்லும் களிமண்ணும் மட்டுமே சேர்ந்த ஓர் அமைப்பு 1900 ஆண்டுகளுக்கு மேலாக காவிரி வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தி வருவது அதிசயமே ஆகும். 1839 இல் அணையின் மீது பாலம் ஒன்று கட்டப்பட்டது. பல இடங்களிலிருந்து தினந்தோறும் ஏராளமானோர் இவ்வணையைக் காண வருவதால், இது ஒரு சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட கரிகால் சோழன் காவிரியில் அடிக்கடி பெருவெள்ளம் வந்து மக்கள் துயரப்பட்டதைக் கண்டு அதைத் தடுக்க காவிரியில் ஒரு பெரிய அணையைக் கட்ட முடிவெடுத்தான். ஒரு நொடிக்கு இரண்டு லட்சம் கனநீர் பாயும் காவிரியின் தண்ணீர் மேல் அணைக்கட்டுவதற்கும் ஒரு வழியைக் கண்டுபிடித்தார்கள் தமிழர்கள். காவிரி ஆற்றின் மீது பெரிய பாறைகளைக் கொண்டுவந்து போட்டனர். அந்தப் பாறைகளும் நீர் அரிப்பின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் சென்றன. அதன் மேல் வேறொரு பாறையை வைத்து நடுவே தண்ணீரில் கரையாத ஒருவித ஒட்டும் களி மண்ணைப் புதிய பாறைகளில் பூசி இரண்டையும் ஒட்டிக்கொள்ளும் விதமாகச் செய்தனர். இதுவே இவ்வணையினைக் கட்டப் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பமாகும்.

8. முக்கொம்பு

கர்நாடகாவின் தலைக்காவிரியாக உருவெடுத்து ஒற்றைக் காவிரியாக வரும் ஆறானது‌ இவ்விடத்தில் (முக்) மூன்று (கொம்பு) முனை இவ்விடத்தில் மூன்று முனையிலும் ஆறாக பிரிவதால் முக்கொம்பு எனப் பெயர் பெற்றது.

9.ஸ்ரீரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்கா

தமிழ்நாடு அரசு வனத்துறையின் கண்காணிப்பு மற்றும் பராமரிப்பில் உள்ள இந்த வண்ணத்துப்பூச்சி பூங்கா வெப்ப மண்டல வண்ணத்துப் பூச்சிகளுக்கான காப்பகமாகும். வண்ணத்துப்பூச்சி இனங்களை பாதுகாக்கவும் அவற்றின் எண்ணிக்கையை பெருக்கும் நோக்கிலும் இயற்கை சூழலில் இப்பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. . இங்கு நட்சத்திர வனமும் அமைக்கப்பட்டுள்ளது. .இது ஆசியாவின் மிகப்பெரிய வண்ணத்தப்பூச்சி பூங்காவாகும்.இந்த வண்ணத்துப்பூச்சி பூங்கா 25 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. ஸ்ரீரங்கத்திலிருந்து மேற்கே 6.கி.மீ தொலைவிலும், காவிரி ஆற்றிலிருந்து கொள்ளிடம் ஆறு பிரியும் இடமான முக்கொம்பிலிருந்து கிழக்கே 7 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. வண்ணத்துப்பூச்சி பூங்காவின் வடக்குப்புறத்தில் கொள்ளிடம் ஆறு தெற்குப்புறத்தில் காவிரி ஆறுகள் ஓடுகின்றன.

இந்த வண்ணத்துப்பூச்சி பூங்காவில் 27 நட்சத்திரங்களுக்கு உரிய 27 வகை மரங்களை கொண்ட நட்சத்திர வனம் அமைக்கப்பட்டுள்ளது. ஆந்திரமாநிலம் ராஜமுந்திரியில் இருந்து சுமார் 30 அடி உயரம் வளரக்கூடிய 9 அடி உயரம் கொண்ட 5000 மரச் செடிகள் வரவழைக்கப்பட்டு நடப்பட்டுள்ளது.

10. அருள்மிகு எறும்பீசவரர் கோவில்,திருவெறும்பூர்

தாரகாசுரன் என்னும் கொடிய அரக்கன் இழைத்த கொடுமைகளினால் தாங்கொணாத் துயருற்ற தேவர்களும் முனிவர்களும், நாரத முனிவரின் அறிவுரையின்படி திருச்சியை அடுத்துள்ள இம்மலையில் எழுந்தருளிய ஈசனைத் தொழச் செல்கையில், அவ்வரக்கன் அறியாத வண்ணம் எறும்பின் வடிவினை மேற்கொண்டு வழிபட்டனராம். மலைமீது அமைந்துள்ள இக்கோயிலை அடைந்து அதில் சிவ லிங்கத்தைத் தொழ எறும்புகள் மிகவும் சிரமப்பட்டதால், ஈசன் தனது உறைவிடத்தையே ஒரு எறும்புப் புற்றாக மாற்றிக் கொண்டார். இதன் காரணமாகவே எறும்பீஸ்வரர் என இத்தல நாதர் அழைக்கப்படலானார்.

எறும்புகளுக்கும் அருள் ஈந்த ஈஸ்வரன் எழுந்தருளிய இடமாதலால், இத்தலம் எறும்பியூர் எனப்பட்டது.63 நாயன்மார்களில் ஒருவரான திருநாவுக்கரசர் ஐந்தாம் திருமுறையில் ஒரு பதிகமும் ஆறாம் திருமுறையில் ஒரு பதிகமும் இக்கோயில் பெருமானை பற்றி பாடல்கள் பாடியுள்ளார்.

11. அருள்மிகு புண்டரீகாட்ச பெருமாள் கோயில் , திருவெள்ளரை 

இத்தலம் மிகவும் தொன்மையான தலங்களில் ஒன்றாகும். திருவரங்கத்திற்கும் பழமையானது என்பதாலேயே ஆதிவெள்ளறை என்றும் அழைக்கபடுகிறது. வெண்மையானா பாறையினால் ஆன மலை எனப்பொருள்பட வெள்ளறை எனப்படுகிறது. திரு என்பது உயர்வை குறிக்குமாதலால் ‘திருவெள்ளறை’ என அழைக்கப்படுகிறது.இது 108 திவ்யதேசங்களில் ஒன்றாகும்.சோழ நாட்டு நான்காவது திருத்தலம். இத்திருக்கோவில் திருச்சிராப்பள்ளிக்கு அருகிலே துறையூர் போகும் வழியில் அமைந்துள்ளது.

12. அருள்மிகு ஞீலிவனேஸ்வரர் கோயில்,திருப்பைஞ்சீலி (திருமண பரிகார கோவில்)

திருப்பைஞ்சீலி ஞீலிவனேஸ்வரர் கோயில் என்பது சம்பந்தர், சுந்தரர், அப்பர் ஆகியோரால் தேவாரம் பாடல்பெற்ற சிவத்தலமாகும். மூலவர் ஞீலிவனேஸ்வரர் என்றும், தாயார் விசாலாட்சி, நீல்நெடுங்கண்நாயகி என்றும் அழைக்கப்பெறுகிறார். இத்தலத்தில் 7 தீர்த்தங்கள் உள்ளது. 61வது சிவத்தலமாகிய இக்கோவிலில் கல்வாழை தலவிருட்சமாக உள்ளது. இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் ஒன்றாகும்.

ஞீலி என்பது மனிதர்கள் உண்ண இயலாத இறைவனுக்கு மட்டுமே படைப்பாகிற ஒரு வகைக் கல்வாழை. இதுவே இக்கோவிலில் தலமரமாக அமைந்ததால், இது ஞீலிவனம் எனப் பெயர் பெற்றது.

நீலகண்டனார் சிதம்பரத்தில் தாம் கொண்டிருந்த ஆடலரசன் கோலத்தை வசிட்ட மாமுனிக்கு இத்தலத்திலேயே காட்டியமையால், இது மேலச் சிதம்பரம் எனலானது.

ஏழு கன்னிமார்களான பிராம்மி, மாகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வாராகி, இந்திராணி, சாமுண்டி ஆகியோர் திருமண வரம் வேண்டி இவ்விடத்தில் தவம் இயற்றுகையில், பார்வதி அன்னை அவ்ர்கள் முன் தோன்றி, அவர்களுக்கு வரம் அளித்ததுடன், வாழை மர வடிவில் அத்தலத்திலேயே குடி கொண்டு என்றென்றும் தனது காட்சியினைக் கண்டு களித்தேயிருக்கலாம் எனப் பெரும் பேறளித்தாள். பின்னர், அவ்வாழை வனத்தின் மத்தியில் சிவனாரும் லிங்க வடிவில் சுயம்புவாக எழுந்தருளினார்.

13. அருள்மிகு உத்தமர் கோயில், திருக்கரம்பனூர் ( மும்மூர்த்திகள் ஸ்தலம்)

இத்தலத்திற்குப் பல வரலாறுகள் உள்ளன. ஆதிபிரம்ம புராணத்திலேயே இக்கோயில் பற்றிய குறிப்பு காணப்படுகிறது.


தம்மிடம் மிக்க பக்தி செலுத்தி வரும் பிரம்மாவைச் சோதிக்க விஷ்ணு கடம்ப மரமாக உருவெடுத்து இங்கு வந்ததாகவும், அவ்வுருவிலும் பிரம்மா அவரை அறிந்து கொண்டு தொடர்ந்து வழிபட்டமையால், மனம் மகிழ்ந்த விஷ்ணு அவருக்கு இங்கு தனி வழிபாட்டு சந்நிதி கொள்ளுமாறு செய்ததாகவும் கூறுவர். இந்தியாவில் மிகச் சில இடங்களிலேயே பிரம்மா மற்றும் சரஸ்வதி ஆகியோருக்கு தனிக் கோயில்களோ, சந்நதிகளோ உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


இக்கோயிலில், சிவன் பிச்சாடனாராக உருக்கொண்டமைக்கும் ஒரு வரலாறு உள்ளது. தன்னைப் போல் பிரம்மாவிற்கும் ஐந்து தலைகள் உள்ளதைச் சகிக்காத சிவபெருமான் பிரம்மனுடைய ஒரு தலையைக் கிள்ளி எறிந்ததாகவும், பிரம்ம ஹத்தி தோஷம் வந்ததால், சிவனின் கையிலிருந்த கபாலம் அவரது கையோடு ஒட்டிக் கொண்டதாகவும், சிவன் கையில் ஒட்டிக் கொண்ட கபாலத்தில் மகாலட்சுமியைக் கொண்டு பிச்சையிடச் செய்ததால் அச்சாபம் நீங்கியதாகவும் கூறுவதுண்டு.

14.தூய லூர்து அன்னை தேவாலயம் , திருச்சி

லூர்து அன்னை தேவாலயம்  திருச்சிராப்பள்ளி நகரின் மையத்தில் அமைந்துள்ளது காலோ-கத்தோலிக்க வடிவமைப்பில் கட்டப்பட்ட இந்த தேவாலயம் லூர்து அன்னைக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது  இந்த தேவாலயம் நகரத்தில் உள்ள 22 தேவாலயங்களில் 100 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான ஒன்றாக கருதப்படுகிறது.  திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தேவாலயம் அமைந்துள்ளது. இந்த தேவாலயம் நகரத்தின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாகும்.

1895 ஆம் ஆண்டில் அடித்தளம் அமைக்கப்பட்டது மற்றும் 1903 ஆம் ஆண்டில் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த பின்னர் அது பொதுமக்களுக்கு திறக்கப்பட்டது. கோபுரத்தின் நடுவில் உள்ள புனித இக்னேஷியஸ், புனித பிரான்சிஸ் சேவியர் , இயேசுவின் புனித இதயம், புனித பீட்டர் மற்றும் புனித ஜான் டி பிரிட்டோ ஆகியோரின் உருவங்கள் தேவாலயத்தின் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சமாகும். புதுப்பிக்கப்பட்ட தேவாலயம் 10 பிப்ரவரி 1898 அன்று அர்ப்பணிக்கப்பட்டது மற்றும் 1899 ஆம் ஆண்டில் சிலுவை வழி ஆசீர்வதிக்கப்பட்டு அமைக்கப்பட்டது. கோதிக் பாணி தேவாலயத்தின் ஒரு வழக்கு ஆய்வை தேவாலயம் வழங்குகிறது.

எங்கள் லேடி ஆஃப் ஏஞ்சல்ஸ் தேவாலயம் மணிநேர பிரார்த்தனை மற்றும் தினசரி சேவைகளுடன் செயல்படும் தேவாலயமாகும், மேலும் இது ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவப் பிரிவைப் பின்பற்றுகிறது தேவாலயத்தில் காலை 5:15 மணி முதல் இரவு 8 மணி வரை பல்வேறு மத நடைமுறைகள் உள்ளன. தேவாலயத்தில் நான்கு வருடாந்த விருந்துகள் உள்ளன, ஆண்டுதோறும் பிப்ரவரி 11 அன்று நடைபெறும் லூர்து மாதாவின் விழா அவற்றில் மிகவும் முக்கியமானது. இந்த தேவாலயம் திருச்சிராப்பள்ளியின் ரோமன் கத்தோலிக்க மறைமாவட்டத்துடன் தொடர்புடையது , அதே சமயம் இது இயேசுவின் பிதாக்கள் (ஜேசுயிட்ஸ்) மூலம் பராமரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது.

15. அருள்மிகு தாருகாவனேஸ்வரர் கோயில்,திருப்பராய்த்துறை

திருப்பராய்த்துறை தாருகாவனேஸ்வரர் கோயில் அப்பர்சம்பந்தர் பாடல் பெற்ற சிவாலயமாகும். இறைவன் பிட்சாடனராய் சென்று தாருகாவனத்து முனிவர்களின் செருக்கை அகற்றி அவர்கட்கு அருள்புரிந்த தலமென்பது தொன்நம்பிக்கை . தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள மூன்றாவது சிவத்தலமாகும்.பராய் மரக்காட்டில் இறைவன் எழுந்தருளியிருப்பதால் இத்தலம் 'பராய்த்துறை' எனப்படுகிறது

16. அருள்மிகு மாற்றுரைவரதர்  கோயில், திருவாசி

சுந்தரர் தன்னுடன் சிவதல யாத்திரைக்கு வருகின்ற சிவனடியார்களுக்கு உணவு படைப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். அவ்வாறு உணவு படைக்க சிவபெருமானிடம் பொன்னையும் பொருளையும் பெற்றுக் கொள்வார். ஆனால் இத்தலத்தில் சுந்தரர் பொற் பதிகம் பாடியும் சிவபெருமான் பொன்னைத் தரவில்லை. சுந்தரர் கோபம் கொண்டு பாடல்களைப் பாடினார். அதன்பின்பு சிவபெருமான் பொன்னை தந்தார். பிறகு அந்தப் பொன் சுத்தமானதா என்ற சந்தேகம் சுந்தரருக்கு வந்தது. அப்போது அங்கு வந்த இருவர் அந்தப் பொன்னை சோதித்து அதன் தரத்தினை உரைத்தனர். சிவபெருமான் தன்னை இகழ்ந்து பாடினாலும் பொன் தருவார் என்பதை சுந்தரர் அறிந்தார். பொன்னை உரைத்து தரத்தை உரைத்த இருவரும் மறைந்தனர். அவர்கள் சிவபெருமானும் திருமாலும் என சுந்தரர் அறிந்தார்.மாற்றுரைவரதர் எனும் பெயர் இதன் காரணமாகவே வந்தது. இத்தலம் தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகவும், காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 62வது சிவதலமாகவும் உள்ளது. இச்சிவாலய மூலவரை உமாதேவி, பிரம்மதேவன், இலக்குமி, அகத்திய முனிவர், கமலன் எனும் வைசியன், கொல்லிமழவன் ஆகியோர் வழிபட்டுள்ளனர்.

17. நத்தர்ஷா பள்ளிவாசல், திருச்சி

சுமார் 1100 வருடங்களுக்கு முன்பு நத்தர்ஷா வலி எனும் இசுலாமிய சூபி மகான் தனது சுல்தான் பதவியை தனது சகோதரருக்கு கொடுத்து விட்டு தமிழ்நாட்டில் திருச்சிக்கு வந்து மக்களுக்கு போதனைகள் செய்தார். அவரது போதனை மூலம் பலர் இசுலாம் மதத்தை ஏற்றனர்.அவர் இறந்த பின் அவரை திருச்சியிலே அடக்கம் செய்தனர்.அவரது அடக்கத்தலம் அருகிலேயே பள்ளிவாசல் கட்டப்பட்டது.அப்பள்ளிவாசல் நத்தர்ஷா வலி பள்ளிவாசல் என அழைக்கப்படுகிறது.

18. ஸ்ரீ குருவாயூரப்பன் கோவில், முத்தரசநல்லூர்

திருச்சி கரூர் சாலையில் திருச்சியை அடுத்துள்ள முத்தரசநல்லூரில் உள்ளது இந்த கோயில். முற்றிலும் கேரள பாணியில் கட்டப்பட்ட இக்கோயில் கேரளத்தின் குருவாயூர் கோயிலை தரிசிக்கும் உணர்வை தருகிறது. திருச்சியில் இருந்து கரூர் செல்லும் சாலையில் முத்தரசநல்லூரை அடைந்து இடதுபுறமாக உள்ள ரயில் பாதையை கடந்து ஊருக்குள் செல்லும் சாலையில் சிறிது தூரம் சென்று அங்கிருந்து இடது புறமாக செல்லும் குறுகிய சாலையில் சென்று கோயிலை அடையலாம்.

தொகுப்பு

வா ஸ்ரீராம்

மாநில ஊடக இணைச் செயலர்

தேசிய ஆசிரியர் சங்கம் - தமிழ்நாடு

7305518764





Wednesday, December 20, 2023

ஆன்மிகம் - திருநறையூர் கல் கருட சேவை !!!

பெரும்பாலான வைணவ ஆலயங்களில் மார்கழி மாதத்தில், முப்பது நாளும் திருப்பாவை உற்சவம் மிகச் சிறப்பாக நடைபெறும். 


திரு அத்யயன உற்சவம், வைகுண்ட ஏகாதசி, கூடாரவல்லி போன்ற உற்சவங்கள் மார்கழி மாதத்தின் சிறப்பான உற்சவங்கள். 

ஆனால், சோழநாட்டு திவ்ய தேசங்களில் ஒன்றான திருநறையூரில் மார்கழி பிரம்மோற்சவம் விசேஷமானது. 

அதில் நடைபெறும் நான்காம் நாள் கல் கருட சேவையும் அற்புதமானது.

திருநறையூர் சோழநாட்டு திவ்ய தேசங்களில் ஒன்று. 

ஆனால், இப்பொழுது திருநறையூர் என்றால் யாருக்கும் புரியாது. 

நாச்சியார்கோவில் என்றால் தான் புரியும். கும்பகோணத்தில் இருந்து திருவாரூர் போகும் பாதையில் 8 கி.மீ. தூரத்தில் உள்ளது. 

நிறைய பேருந்து வசதிகள் உண்டு . 

இந்த பகுதி கிருஷ்ணாரண்யம்  

என்று அழைக்கப்படுகிறது. 

அதன் துவக்கம் தான் திருநறையூர் நாச்சியார் கோவில்.

மூலவரர திருநறையூர் நம்பி, ஸ்ரீநிவாச பெருமாள், வியூக வாசுதேவன் என்ற பல திருநாமங்களுடன் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார். 

பெருமாளுக்கு வியூக நிலையில் ஐந்து திருநாமங்கள் உண்டு. 


சங்கர்ஷணன், பிரத்யும்னன், அநிருத்தன், புருஷோத்தமன், வாசுதேவன் என இந்த ஐந்து உருவங்களிலும் தாயார் பெருமாளை மணந்து கொள்வது இங்கே சிறப்பு.

பெருமாள் தாயாரை திருமணம் செய்துகொள்ளும் நிலையில் இருப்பதால், திருமணத்தடை உள்ளவர்களுக்கு பிரார்த்தனை செய்து கொள்ளும் தலமாகவும் இது இருக்கிறது. 

தினசரி திருமணக்கோலத்தில் உள்ள இந்தப் பெருமாளை பிரம்மா பூஜிக்கிறார். 

முக்தி தரும் 12 தலங்களில் இத்தலம் உயர்வானது.

தாயாருக்கு வஞ்சுளவல்லி என்று பெயர். 

அழகான தமிழில் நம்பிக்கை நாச்சியார் என்று அழைப்பார்கள். 

பெருமாள் அருள் கிடைக்க சற்றுத் தாமதித்தாலும் பக்தர்களின் நம்பிக்கைக்கு இந்த நாச்சியார் தான் துணை என்பதால் இவருக்கு நம்பிக்கை நாச்சியார் என்று பெயர்.

பெருமாள் எங்கே வரம் தராமல் போய் விடுவாரோ என்று பெருமாள் பக்கத்திலேயே திருமணக் கோலத்தில் நிற்கிறார்.

இங்கு ஐந்து தீர்த்தங்கள் உண்டு. 

கோயிலுக்குப் பக்கத்திலேயே மணிமுத்தாறு புஷ்கரணி என்று ஒரு அழகான தீர்த்தம் உண்டு. 

இது தவிர சங்கர்ஷண தீர்த்தம், பிரத்யும்ன தீர்த்தம், அநிருத்த தீர்த்தம், சாம்ப தீர்த்தம் என்ற தீர்த்தங்களும் உள்ளன. 

நாச்சியார் கோயில் என்ற பிரசித்தி பெற்றது என்றால் வைணவ மரபில் பெருமாளுக்கு முன்னொட்டாக தாயார்தான் இருப்பாள். 

தாயாரை முன்னிட்டே பெருமாளை நாம் வணங்க வேண்டும். 

திருமால் என்கின்ற பெருமாள் பெயரிலேயே திரு என்கிற மகாலட்சுமி பெயர் முன்னொட்டு இருக்கிறதல்லவா.


தாயாரின் அதுவும் நீளா தேவியின் பிரதான்யம் உள்ள கோயில். 

நாச்சியாருக்கு பிரதானம் கொடுத்த சில கோயில்களில் திருநறையூர் என்ற நாச்சியார் கோயில் ஒன்று. 

மற்றொன்று உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவில். அதையும் நாச்சியார் கோயில் என்று தான் அழைப்பார்கள். 

மூன்றாவதாக திருச்சிக்கு அருகே திருவெள்ளறை. அங்கேயும் நாச்சியாருக்கு சிறப்பு. 

எல்லாவற்றுக்கும் மேலாக ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாளுக்கு பிரதானம். 

அதனை நாச்சியார் திருமாளிகை என்று அழைப்பார்கள். 

திரு நறையூர்க் கோயிலில் தாயாருக்குதான் முதலில் அபிஷேகம், நைவேத்தியம், 

புறப்பாடு எல்லாம்.

பிறகுதான் பெருமாளுக்கே! 

இந்த நாச்சியார் கோயிலில் மேதாவி முனிவரின் வளர்ப்பு மகளாகப் பிறந்தவள் மகாலட்சுமி. 

மேதாவி முனிவர்  திருமகளே தனக்கு மகளாக வாய்க்க வேண்டும் என்று மணிமுத்தாறு நதிக்கரையில் தவமிருந்தார். 

இவர் தவத்தை மெச்சிய மகாலட்சுமி தாயார் பங்குனி மாதம் வெள்ளிக்கிழமை 

உத்திர நாளில் இந்த ஆற்றங்கரையின் இருந்த வஞ்சுள மரத்திற்கு அருகில் குழந்தையாக அவதரித்தாள்.  

அந்தக் குழந்தையை தம்முடைய குடிலுக்கு எடுத்துச் சென்று மேதாவி முனிவர் வஞ்சுளவல்லி என்று பெயரிட்டு வளர்த்தார்.

இந்த பெருமாள், திருமங்கை ஆழ்வாருக்கு பஞ்ச சம்ஸ்காரம் செய்த ஆச்சாரியர் என்று கருதப்படுகிறார். 

அதனால்தான் திருமங்கையாழ்வார் 

மற்ற எந்த திவ்ய தேசங்களுக்கும் இல்லாமல் திருநறையூர் என்கின்ற நாச்சியார் கோவிலுக்கு 110 பாசுரங்களை அருளிச் செய்திருக்கிறார். 

தை அமாவாசை கருட சேவை உற்சவத்தின் பொழுது முதன் முதலில் இவர் திருநறையூர் நம்பி மங்களாசாசனம் என்று இந்த பெருமாளுக்கு தான் மங்களாசாசனம் செய்வார்.

இந்தப் பெருமாளைப் போல அழகான திருமேனியை வேறு எந்த திவ்ய தேசத்திலும் சேவிக்க முடியாது. 

இந்த அழகு திருமேனியில் தான் மங்கை மன்னன் ஆழங்கால் பட்டு இவரிடம் தனக்கு ஆச்சாரியராக இருக்கும்படி பிரார்த்தித்தார். 

அந்த பிரார்த்தனையும் நிறைவேறியது. 

இத்தலத்தின் மீது பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் நம்பி மேகவிடு தூது என்னும் நூலும், வித்வான் நரசிம்மாச்சாரியார் திருநறையூர் இரட்டை மணி மாலை என்னும் தமிழ் நூலும்  செய்திருக்கிறார்கள்.


சோழநாட்டு திவ்ய தேசங்களில் பெரும்பாலும் சைவ வைணவத் தலங்கள் மாடக்கோயில் அமைப்பில் இருக்கும். 

இத்தலமும் மாடக் கோயில் அமைப்பில் அமைந்துள்ளது. 

அதனால் ஒரு சிறு குன்றின் மீது பெருமாள் கருவறை இருப்பது போல காட்சி தருவார். 

வீதியில் இருந்து பார்த்தால் மிக உயரத்தில் பெருமாள் காட்சி தருவார். 

இத்தலத்தில் சிறிதும் பெரியதுமான 16 கோபுரங்கள் உண்டு. 

ராஜகோபுரம் ஐந்து அடுக்குகளில் எழுபத்தி ஆறு ஆடி உயரம் கொண்டது. 

பெரும்பாலான கருவறை விமானங்கள் வட்டவடிவில் கூம்பு போல் இருக்கும்.

ஆனால் இத்திருக்கோயிலின் கருவறை மேல் உள்ள விமானம் சிறு கோபுரம் போலவே காட்சி தரும். 

இது ஹேம விமானம், 

சீனிவாச விமானம் என்று போற்றப்படுகிறது. 

இதேபோல கருவறை விமான அமைப்பு உள்ள வேறொரு தலம் திருவல்லிக்கேணி.

சிவபெருமானுக்கு எழுபது கோயில்களை கட்டிய கோச்செங்கட் சோழ மன்னன் பெருமாளிடம் மிகுந்த அன்பு கொண்டு இத்திருக்கோயிலை கட்டினான். 

அறுபத்தி மூன்று நாயன்மார்களில் சோழ நாயனார் என்னும் பெயருடைய கொச்செங்கணான் தன்னுடைய பகையை அழிப்பதற்காக மணிமுத்தாறு நதியில் நீராடி பெருமாளை வணங்கி வாளைப் பெற்றான். 

அவன் இக்கோயிலுக்குச்  செய்த திருப்பணிகள் அதிகம். 

பெருமாளுக்கு தங்கத்தால் விமானம் அமைத்துக் கொடுத்தான்.

செம்பியன் கோச்செங்கணான் சேர்ந்த கோயில்

திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே

 என்றும் தெய்வ வாள் வளம் கொண்ட சோழன் சேர்ந்த திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே

என்றும் திருமங்கை ஆழ்வார், இந்நிகழ்வுகளைப் பாடி இருக்கிறார்.

திருமங்கை ஆழ்வார் 

பல திருப்பணிகளைச் செய்தார். 

திருவரங்கத்திற்கு கற்களால் மதில் கட்டிய திருமங்கையாழ்வார், இப்பெருமான் மீது சொற்களால் மடல் கட்டினார் .

சிறிய திருமடல் இப்பெருமான் மீது இயற்றப்பட்டது. 

பெருமாள் பெயர்களிலேயே நம்பி என்ற  சிறப்பு திருநாம இணைப்போடு அமைந்த பெருமாள் இரண்டு மூன்று திவ்யதேசங்களில் உள்ளனர். 

அதில் இவருக்கு திருநறையூர் நம்பி என்று பெயர்.  

நம்பி என்றால் பூரணமான குணங்களை உடையவன். நற்குணங்களால் நிறைந்து இருப்பவன் என்று பொருள். 

நம்பி என்ற சொல்லில் திருமங்கை ஆழ்வாருக்கு ஈடுபாடு அதிகம்.

கிடந்த நம்பி குடந்தை மேவிக் கேழலாய் யுலகை

இடந்த நம்பி எங்கள் நம்பி எறிஞர் அரண் அழியக்

கடந்த நம்பி கடியார் இலங்கை யுலகை ஈரடியால்

நடந்த நம்பி நாமம் சொல்லில் நமோ நாராயணமே

- என்று திரும்பத் திரும்ப “நம்பி’ என்ற சொல்லை பயன்படுத்திய பாசுரம் இது. 

அவரை முழுதுமாக நம்பியவரல்லவா...

நம்மையும் அவரை நம்பிக்கையோடு தரிசனம் செய்யச் சொல்கிறார்.

நம்பி நாமத்தை மேவிச்   சொல்ல

வல்லார் பாவம் நில்லா வீயுமே

என்று வழி காட்டுகின்றார்.

திருநறையூர் என்றால் கருடசேவை மிகவும் விசேஷம். 

மற்ற திவ்யதேசங்களில் கருடசேவை விசேஷம் இல்லையா? என்று கேட்கலாம். 

ஆனால், கருடனுக்கு பிரதானம் கொடுத்து அவரையே ஒரு வரம் தரும் வள்ளலாக நம்பி  பக்தர்கள் எல்லாரும் வந்து சேவித்து பலன் பெரும் சிறப்புத்தலம் இது. 

இந்த திவ்ய தேசத்தில் மார்கழி,பங்குனி என இரண்டு முறை கல்கருட சேவை புறப்பாடு உண்டு.

முதலில் கருடன் புறப்பட்டு தரிசனம் தருவார். 

அதற்குப் பிறகு அதன் மேல் பெருமாள் ஆரோகணித்து வருவது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். 

இப்படிப்பட்ட கருட சேவையை தான் திருநாறையூரில் கண்டேன் என்பதை மிக அற்புதமாக பாடுகின்றார் திருமங்கையாழ்வார்.

தூவாய புள்ளூர்ந்துவந்து துறை வேழம்

மூவாமை நல்கிமுதலை துணித்தானை

தேவாதி தேவனைச்செங்கமலக் கண்ணானை

நாவாய் உளானைநறையூரில் கண்டேனே

- என்பது அவர் கண்ட கல் கருட சேவை பாசுரம்.

ஒருகாலத்தில் கஜேந்திரன் என்ற யானை முதலையிடம்  அகப்பட்டுக் கொண்டு கதறியது கண்டு,தன்னுடைய பக்தன் கதறுகிறான் என்று நொடியும் தாமதிக்காது, மிக வேகமாக கருடன் மீது வந்து காட்சி தந்தாயே, தேவாதி தேவனே, அதே காட்சியை இப்பொழுது (கல் கருட சேவையில்) நான் திருநறையூரில் கண்டேன் என்று உணர்ச்சி வெள்ளமிடப் பாடுகின்றார் திருமங்கை ஆழ்வார்.

பட்சிராஜன் என்ற பெயரோடு இத்தலத்தில் உள்ள   கல்கருடன் ஐந்தடி உயரத்தில் கம்பீரமாக ஒன்பது நாமங்களுடன் காட்சி கொடுக்கிறார். 

இவர் பெரிய வரப்ரசாதி. ஏழு வாரங்கள் தொடர்ந்து இவரை வேண்டிக் கொண்டு அர்ச்சனை செய்து வந்தால் நினைத்த காரியம் நடக்கும். 

கல்கருடன் உடலில் ஒன்பது இடங்களில் நாகர் உருவம் அமைந்துள்ளது.

இந்த கருடனுக்கு கஸ்தூரி, குங்குமப்பூ, புணுகு சட்டம், முதலியவற்றை வாழைச்சாற்றில் கலந்து இவரது திருமேனியில் சாற்றி இவருக்கு பூஜை செய்தால் நாகதோஷம் நீங்கும். 

திருமணத்தடை விலகும். நல்வாழ்வு கிடைக்கும். 

வியாழக்கிழமை தோறும்  பயத்தம் பருப்புடன் வெல்லம், ஏலக்காய் கலந்து செய்யப்படும் அமுதக் கலசம் என்ற பிரத்யேக நைவேத்யம் செய்யப்படுகிறது.

கல்கருடன் சந்நதியிலிருந்து கருடனை 4 பேர் பாதம் தாங்கி தூக்கி வருவார்கள். 

படிக்கட்டுகளிலிருந்து தூக்கி வரப்படும் கருடாழ்வாரை நீண்ட உருட்டு மரங்களில் கம்பி வளையத்திற்குள் செருகப்பட்டு பதினாறுபேர் சுமந்து வருவார்கள். 

இப்படி 32, பிறகு 64 பேர் கருடனைச் சுமந்து வருவார்கள். 

கோயிலுக்குத் திரும்பும் பொழுது இதே வரிசையில் சுமப்பவர்கள் குறைந்து கடைசியாக நான்குபேர் சுமந்து சந்நதியை அடைவார்கள்.

இக்கோவில் நந்தவனத்தில் இரண்டு கருடப்  பறவைகள்  வசித்து வந்தன. 

தினமும் கோவில் பூஜை நேரத்தில் இக்கருடன்கள்  வந்து விடும். 

பெருமாள், தாயார், கருடன் பூஜை முடியும் வரை கோவிலிலேயே பிராகாரத்தின் சுவர்கள் மீது அமர்ந்திருக்கும். 

பூஜை முடிந்தவுடன் சென்றுவிடும். 

1999 ஜனவரி 18ஆம் தேதி காலை பூஜைக்கு இவ்விரு பட்சிகள் வரவில்லை.

அர்ச்சகர்கள் பக்தர்கள் கருட பட்சிகளை தேடிச் சென்ற பொழுது கோவில் தல விருட்சமான மகிழ மரத்திற்கு கீழே இவ்விரு கருட பட்சிகளும் ஒன்றை ஒன்று அணைத்தவாறு பகவானுக்கு உகந்த தினமான சிரவண தினத்தன்று மோட்சம் அடைந்தன. 

இதனைச் சிறப்பிக்க தனி சந்நதி வைத்து வழிபட்டு வருகின்றனர். 




Friday, September 1, 2023

குரு ராகவேந்திரர் : கடைசி உரை மற்றும் பிருந்தாவன பிரவேசம்

 1671 ஆம் ஆண்டு ராகவேதிர சுவாமிகள் பிருந்தாவனப் பிரவேசத்திற்கு முன் தன் பக்தர்களுக்காக மனம் நெகிழவைக்கும் ஒரு உரையை தந்தார். 

அதிலிருந்து சில பகுதிகள்: 

இனிமேல் நான் உன் பார்வையில் இருந்து மறைந்து விடுவேன். என்னை உங்களிடம் அனுப்பிய ஆண்டவர் இன்று என்னிடம் திரும்பி வரும்படி கட்டளையிட்டார். அவருடைய பணியை முடித்துவிட்டேன். ஒவ்வொருவரும் அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும் - இங்கு வந்து அவர் நம்மைத் திரும்ப அழைக்கும்போது திரும்பிச் செல்ல வேண்டும். நான் உன்னை விட்டு செல்கிறேன் என்று நீ வருத்தப்பட வேண்டியதில்லை. மூல கிரந்தங்கள், சர்வ மூலங்கள் மற்றும் அவற்றின் வர்ணனைகள் உங்களுக்கு வழிகாட்டும் ஒளியாக இருக்கும். தகுதியான எஜமானரின் கீழ் தங்கள் படிப்பை ஒருபோதும் கைவிடாதீர்கள். அவற்றைப் படிப்பதற்காகவே இந்த விலைமதிப்பற்ற வாழ்க்கையை இறைவன் நமக்கு அருளினான். சாஸ்திரங்களில் நம் எல்லாப் பிரச்சனைகளுக்கும் விடை இருக்கிறது. சாஸ்திரங்களைப் பின்பற்றி, ஞானிகளின் வார்த்தைகளைக் கேளுங்கள். நீங்கள் கற்றுக்கொண்டதை உங்களால் முடிந்தவரை நடைமுறைப்படுத்துங்கள். சாஸ்திர வாழ்க்கை முறை அமைதி, செழிப்பு மற்றும் மகிழ்ச்சிக்கான அரச பாதையாகும்.

அறிவைத் தேடுவது எளிதல்ல. உபநிடதங்கள் சொல்வது போல் ரேசர் விளிம்பில் நடப்பது போன்றது. ஆனால், உறுதியான நம்பிக்கை உள்ளவர்களுக்கும், தொடர்ந்து முயற்சி செய்பவர்களுக்கும், ஸ்ரீ ஹரி மற்றும் ஸ்ரீ மத்வாச்சாரியாரின் ஆசீர்வாதத்தைப் பெற்றவர்களுக்கும் இது கடினமானதல்ல. சாஸ்திரங்களைப் பின்பற்றாமல் வெறும் அற்புதங்களைச் செய்துவிட்டு, தங்களைக் கடவுள் அல்லது குரு என்று அழைத்துக் கொள்பவர்களிடமிருந்து எப்போதும் விலகி இருங்கள். நான் அற்புதங்களைச் செய்திருக்கிறேன், ஸ்ரீமதாச்சார்யா போன்ற பெரியவர்களும் உண்டு. இவை யோக சித்தி மற்றும் சாஸ்திரங்களை அடிப்படையாகக் கொண்டவை. இதில் எந்தவித மோசடியோ, சூழ்ச்சியோ இல்லை. இந்த அற்புதங்கள் இறைவனின் மகத்துவத்தையும், அவரது அருளால் ஒருவர் அடையக்கூடிய அற்புதமான சக்திகளையும் காட்டுவதற்காக மட்டுமே நிகழ்த்தப்பட்டது. எந்த அற்புதத்தையும் விட சரியான அறிவு (ஞானம்) பெரியது. இது இல்லாமல் உண்மையான அதிசயம் எதுவும் நடக்காது. இந்த சரியான அறிவு இல்லாமல் செய்யப்படும் எந்த அற்புதமும் சூனியம் மட்டுமே. அத்தகைய அற்புதங்களைச் செய்பவர்களுக்கும், அவற்றை நம்புபவர்களுக்கும் எந்த நன்மையும் ஏற்படாது.

இறைவன் மங்களகரமான குணங்கள் நிறைந்தவர் மற்றும் முற்றிலும் குறையற்றவர். அவனிடம் இல்லாத அறம் இல்லை. அவர் ராமர், பிரம்மா மற்றும் மற்ற எல்லா தெய்வங்களுக்கும் எல்லா நேரங்களிலும் எல்லா வழிகளிலும் இறைவன். அவருடைய வடிவம் பிரகிருதிக்கு அப்பாற்பட்டது. அவரது உடல் ஞானம் மற்றும் ஆனந்தத்தால் ஆனது. அவர் எங்கும் நிறைந்தவர் மற்றும் அனைத்தையும் அறிந்தவர். அனைத்து ஜீவராசிகளும் அவருக்கு அடிபணிந்தவை. எப்பொழுதும் முக்தி பெற்ற மஹாலக்ஷ்மி அவனது துணைவி. அனைத்து ஜீவாத்மாக்களும் (ஆன்மாக்கள்) சமமானவை அல்ல. அவற்றுள் தரம் உள்ளது மற்றும் அவை மூன்று வகைகளாகும். அவர்கள் இறுதியாக எந்த நிலையை அடைகிறார்களோ அது அவர்களின் உள்ளார்ந்த இயல்புக்கு ஏற்றது. சாத்வீக ஆத்மாக்கள் மோட்சத்தை அடைகின்றன, இது நித்திய ஆனந்த நிலை. தாமஸ ஆத்மாக்கள் நித்திய நரகத்தை அடைகின்றன, அங்கு எங்கும் நிறைந்திருக்கும் இருள் இருக்கிறது. இது நித்திய துக்க நிலை. ராட்சஸ ஆத்மாக்கள் எப்போதும் சம்சாரத்தில் சுழன்று சுகம் மற்றும் துக்கம் இரண்டையும் அனுபவித்துக் கொண்டே இருக்கின்றன. சாஸ்திரங்கள் ஆன்மாக்களின் மூன்று மடங்கு வகைப்பாடு மற்றும் தரம் ஆகியவற்றை அறிவிக்கின்றன. இதை உலகில் எங்கும் காணலாம். இந்தக் கோட்பாடுகளுக்கு எதிராகச் சென்று, கடவுள் இல்லை, தர்மம் இல்லை, இந்த உலகம் பொய்யானது என்று அறிவிக்கும் பல தத்துவப் பள்ளிகள் உள்ளன; வெற்றிடத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை; ஜீவாத்மாவும் பிரம்மாவும் ஒன்றே; மூன்று மடங்கு வகைப்பாடு அல்லது தரம் எதுவும் இல்லை, அனைத்து ஜீவாக்களும் பிரம்மத்திற்கு சமம், வேதங்கள் உண்மையல்ல, பிரம்மன் நிர்குணன் (குறைவான பண்பு), நிராகார (உருவமற்றது). இந்த தத்துவங்கள் எதுவும் சரியானவை அல்ல. நாம் காணும் உலகம் உண்மையானது; இந்த உலகத்திற்கு ஒரு எஜமானர் இருக்கிறார்; அவர் நிர்குண நார்நிராகாரரும் இல்லை. (நம்மைப் போல் அல்லாமல்) சத்வ, ரஜஸ், தமஸ் ஆகிய மூன்று குணங்களும் இல்லாதவர் என்பதால் சாஸ்திரங்கள் அவரை நிர்குணனாகவும் நிராகாரனாகவும் அறிவிக்கின்றன. துன்புறும் ஆன்மாவிற்கு அவன் அருள் ஒன்றே நித்திய பேரின்பமாகிய முக்தியை அடையும். அவரைக் கைவிடுபவர்கள் உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்க மாட்டார்கள். சரியான வாழ்க்கை இல்லாமல், சரியான சிந்தனை ஒருபோதும் வராது. சரியான வாழ்வு என்பது ஒருவரின் செயல்களின் பலனைப் பற்றி ஆசைப்படாமல், மறுபுறம் தனது செயல்கள் அனைத்தையும் இறைவனுக்குச் சமர்ப்பிப்பதன் மூலம் வாழ்க்கையில் ஒருவரின் நிலைப்பாட்டின் படி ஒருவருக்கு விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்வதாகும். இது உண்மையான சடாச்சாரம் (சரியான வாழ்க்கை). இதுவே உண்மையான கர்ம யோகம். சரியான வாழ்க்கையின் மற்றொரு அம்சம் சரியான சடங்குகள் மற்றும் விரதங்களைக் கடைப்பிடிப்பது. ஏகாதசி மற்றும் கிருஷ்ணாஷ்டமி அன்று விரதம் இருப்பது அனைவருக்கும் கட்டாயம். இதை அனைத்து தரப்பு ஆண்களும் பெண்களும் கடைபிடிக்க வேண்டும். இதை துறந்தவர்கள் இறைவனின் இல்லக் கதவுகளை எப்போதும் மூடியிருப்பார்கள். இதைத்தான் சாஸ்திரங்கள் அறிவிக்கின்றன. சாதுர்மாஸ்ய விரதத்தைக் கடைப்பிடிப்பது மற்றொரு கட்டாய வழிபாட்டு முறையாகும். இதனுடன், விஷ்ணுபஞ்சக மற்றும் பிற வைணவ விரதங்களையும் ஒருவரது திறனுக்கு ஏற்ப செய்யலாம். அத்தகைய அனைத்து விரதங்களின் முக்கிய குறிக்கோள் அவருடைய அருளையும் அன்பையும் பெறுவதாகும்.


ஒருவர் மற்றவருக்கு தீங்கு செய்யவோ அல்லது புண்படுத்தவோ கூடாது என்பதில் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். ஆன்மாவின் வளர்ச்சிக்கு தத்துவ சிந்தனை மிகவும் அவசியம். தத்துவ சிந்தனை இல்லாமல் நாம் சரியான முடிவுகளை எடுக்க முடியாது. ஆனால் தனிப்பட்ட விரோதம் வேண்டாம். தகுதியுடையவர்களின் நலனுக்காகச் செய்யப்படும் சமூகப் பணிகளையும் இறைவனின் வழிபாடாகக் கொள்ள வேண்டும். சுருக்கமாகச் சொன்னால் நம் வாழ்க்கையே ஒரு வழிபாடு.ஒவ்வொரு செயலும் ஒரு பூஜை. இந்த வாழ்க்கை விலைமதிப்பற்றது. நம் வாழ்வின் ஒவ்வொரு நொடியும் விலைமதிப்பற்றது. போன ஒரு நொடி கூட திரும்ப வராது. சரியான சாஸ்திரங்களைக் கேட்பதும், எப்போதும் அவரை நினைவு செய்வதும் உயர்ந்த கடமையாகும். இது இல்லாமல் வாழ்க்கை அர்த்தமற்றதாகிவிடும். இறைவன் மீது பக்தி வேண்டும். இந்த பக்தி குருட்டு நம்பிக்கையாக இருக்கக்கூடாது. இறைவனின் மேன்மையை முழு மனதுடன் ஏற்றுக்கொள்வது உண்மையான பக்தி. குருட்டு நம்பிக்கை பக்தி அல்ல. இது முட்டாள்தனம் மட்டுமே. இறைவன் மீது மட்டுமன்றி, மற்ற எல்லா தெய்வங்களுக்கும், ஆசான்களுக்கும் அவரவர் நிலைக்கேற்ப பக்தி இருக்க வேண்டும். சுருக்கமாகச் சொல்வதானால், நமக்கு மேலே உள்ளவர்களிடம் பக்தி, நமக்குச் சமமானவர்களிடையே நல்லெண்ணம், நமக்குக் கீழே இருப்பவர்களிடம் பாசம் ஆகியவை வாழ்க்கையின் சிறந்த விழுமியங்கள். உங்களை அணுகும் எவரும் இதயத்தில் பாரமாகவோ அல்லது வெறுங்கையோடும் செல்ல வேண்டாம். சமூக அருள் இல்லாமல் ஆன்மீகம் இருக்க முடியாது. மேலும் ஆன்மீகம் இல்லாத சமூக வாழ்வு வாழ்க்கையே இல்லை. ஆன்மீகம் எந்த அறத்தையும் மறுப்பதில்லை. ஆனால் இறைவன் எல்லா விழுமியங்களுக்கும் வீடு என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். இந்த உலகம் நமது இன்பத்திற்காகவும் மகிழ்ச்சிக்காகவும் இல்லை. உலக நன்மைக்காக நாம் இங்கு இருக்கிறோம் என்ற எண்ணமே உண்மையான ஆன்மீகம். நம் வாழ்வில் சரியான சிந்தனை மற்றும் சரியான மதிப்புகளை இணைக்கும் அதே வேளையில், தவறான மதிப்புகள் மற்றும் தவறான சிந்தனைகளை கைவிடுவதையும் ஒரு பழக்கமாக மாற்ற வேண்டும். நாம் அவர்களுக்கு எதிராக போராடவில்லை என்றால், அது அவர்களை அங்கீகரிப்பதாகிவிடும். ஆனால் அத்தகைய மறுப்பு ஒருபோதும் கொடூரமாக மாறக்கூடாது. அது நீதியின் எல்லைக்குள் இருக்க வேண்டும். இதன் முக்கிய அம்சம் உண்மையின் மீதான அன்பாக இருக்க வேண்டும், தனிப்பட்ட வெறுப்பு அல்ல. இதுதான் நமது தத்துவம். இது ஸ்ரீமதாச்சாரியாரின் தத்துவம். இதுவே அனைத்து சாஸ்திரங்களும் கூறும் தத்துவம். ஜனகர், சனகர் போன்ற அரசர்களும் முனிவர்களும் நம்பி பின்பற்றிய தத்துவம் இது. துருவன், பிரஹலாதன் போன்ற இறைவனின் பக்தர்கள் இந்தத் தத்துவத்தை தங்கள் வாழ்வில் இணைத்துக் கொண்டனர். இந்த தத்துவத்தை நம்பி வாழ்பவர்களுக்கு எந்த பாதிப்பும் வராது என்பது இறைவனின் உறுதி.கடவுளின் பக்தர்களாகிய நீங்கள் அவருடைய பக்தர்களை மதிக்க வேண்டும், மதிக்க வேண்டும். உங்கள் உதவியை நாடுபவர்களுக்கு உங்களால் முடிந்த உதவி செய்யுங்கள். ஆனால் உங்கள் கடமைகளை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். உங்கள் எல்லா செயல்களையும் இறைவனுக்கு அர்ப்பணிக்கவும், தற்காலிக ஆதாயங்களுக்கு ஆசைப்பட வேண்டாம். சுயநல நோக்கத்துடன் செய்யப்படும் அனைத்து செயல்களும் பால் புளிப்பு போன்றது. கடவுளைப் பிரியப்படுத்தும் நோக்கத்தையும், ஞானத்தை (சரியான அறிவு) சம்பாதிக்கும் நோக்கத்தையும் விட உயர்ந்த நோக்கம் எதுவும் இருக்க முடியாது. ஆனால் எல்லா செயல்களையும் விட்டுவிட்டு, தகுதியற்ற வழிமுறைகளைப் பின்பற்றுவது நம்மை முற்றிலும் அழிக்கும் விஷத்தை உட்கொள்வது போன்றது. இந்த அற்புதமான தத்துவத்தை உபதேசித்தவர் ஸ்ரீமதாச்சாரியார். ஸ்ரீராமனுக்கு சேவை செய்ய ஹனுமந்தனாகவும், ஸ்ரீ கிருஷ்ணரை சேவிக்க பீமசேனனாகவும் தோன்றிய அதே வாயுவே ஸ்ரீமதாச்சாரியாராகவும் தோன்றி இந்த தத்துவத்தை உபதேசித்தார். இதுவே ஸ்ரீ வேதவியாசருக்கு அவர் செய்த சேவையாகும். அவரது படைப்புகளைப் போலவே அவரது வாழ்க்கையும் தத்துவமாகவே இருந்தது. இப்போது நான் உங்களிடம் விடைபெறுகிறேன். நான் நேரில் உங்களுடன் இருக்க மாட்டேன் என்றாலும் என் படைப்புகளிலும் பிருந்தாவனத்திலும் என் இருப்பு இருக்கும். எனது படைப்புகளைப் பரப்புவதன் மூலமும், படிப்பதன் மூலமும், பாதுகாப்பதன் மூலமும், கேட்பதன் மூலமும் நீங்கள் எனக்குச் சிறந்த சேவை செய்ய முடியும். உங்களுக்கு என் ஆசிகள்."

எஜமானரின் செய்தி அங்கு கூடியிருந்த மக்கள் அனைவருக்கும் புதிய ஒளியைக் கொடுத்தது. தான் நம்பிய தன் தத்துவத்தின் ரகசியத்தையும், தான் போதித்த தத்துவத்தையும், தன் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்த தத்துவத்தையும் அவர்களுக்கு வெளிப்படுத்தியிருந்தார். ஆனால் பிரிவின் வலி அவர்களுக்கு அவரது செய்தி கொடுத்த மகிழ்ச்சியை மறக்கச் செய்தது. அவருடைய உபதேசத்தைக் கேட்டபோது, அவர் ஒரு உண்மையான ஞானி, யோகி, பண்டிதர் மற்றும் மென்மையான மற்றும் இரக்கமுள்ள இதயம் கொண்ட ஒரு பிரகாசமான துறவி என்பதை அவர்கள் உணர்ந்தனர்


  • சரியான வாழ்க்கை நடத்தையின்றி சரியான சிந்தனை வராது.
  • நல்ல மற்றும் தகுதிக்குரிய மக்களுக்கு செய்யப்படும் உதவி/தர்மம் கடவுளின் பூஜைக்கு நிகராகும்
  • சாஸ்த்திரத்தை பின்பற்றாமல் தங்களை கடவுள் என்று கூறிக்கொண்டு அதிசயங்களை செய்பவர்களிடமிருந்து விலகி இருங்கள். நானும் ஸ்ரீமத் ஆசாரியாரும் நிறைய அதிசயங்களை நிகழ்த்தியிருக்கிறோம். அவையெல்லாம் யோக சித்தியினாலும் கடவுளின் அருளினாலும் எங்களால் செய்ய முடிந்தது. அவற்றில் எந்த பொய்யோ பித்தலாட்டமோ இல்லை. அவ்வதிசயங்கள் கடவுளின் மகிமையையும் அவர் அருளால் ஒருவர் எப்பேற்பட்ட சக்திகளை அடைய முடியும் என்று பறை சாற்றவுமே செய்யப்பட்டது. சரியான ஞானத்தை மிஞ்சிய எந்த அதிசயமோ அற்புதங்களோ கிடையாது சரியான ஞானம் இல்லாமல் செய்யப்படும் அற்புதங்கள் வெறும் சூனிய வித்தையே ஆகும். அவ்வித்தைகளை செய்பவருக்கோ அதை நம்புகிறவருக்கோ எந்த ஒரு நன்மையும் நேராது.
  • கடவுளின் மேல் நல்ல பக்தி இருத்தல் வேண்டும். இப்பக்தி குருட்டு நம்பிக்கையாக இருக்கக்கூடாது'. கடவுளின் மேலான்மையை முழு மனதோடு ஏற்றுக்கொள்ளுதல் பக்தி ஆகும். குருட்டு நம்பிக்கை உண்மையான பக்தி ஆகாது. அது வெறும் முட்டாள்தனமே ஆகும். நமக்கு கடவுள் மேல் மற்றுமின்றி மற்ற இதர தேவதைகளிடமும் அவர்களின் தகுதிக்கேற்ப பக்தி இருத்தல் வேண்டும்.

இவ்வாறு உரையாற்றிய பிறகு ராகவேந்திரர் பிரணவ மந்திரத்தை ஜபித்துக்கொண்டு ஆழ்ந்த தியானத்தில் இறங்கினார். ஒரு தருவாயில் அவர் கையில் இருந்த ஜபமாலை நின்றது. அந்த அறிகுறியைப் புரிந்துகொண்ட அவர் சீடர்கள் அவரை சுற்றி பிருந்தாவன சுவர் எழுப்பத் தொடங்கினார்கள்.