Wednesday, May 27, 2026

மாணவர்கள் - ஆசிரியர்கள் நலன் சார்ந்த சந்திப்பு!!!

 தேசிய ஆசிரியர் சங்க நிர்வாகிகள் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் பள்ளிக்கல்வி இயக்கக அதிகாரிகளுடன் சந்திப்பு!!!

நாள் 27-5-26

தேசிய ஆசிரியர் சங்கம்- தமிழ்நாடு சார்பில் இன்று (27-5-26) மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் திரு கே.ஏ.செங்கோட்டையன், மாண்புமிகு பள்ளிக்கல்வி மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் திரு ராஜ் மோகன், மாண்புமிகு பிற்பட்டோர் மிகவும் பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு.சம்பத்குமார், மாண்புமிகு மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு CTR நிர்மல் குமார் ஆகியோரையும் பள்ளிக் கல்வி இயக்குனர் திரு கண்ணப்பன் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குனர் திரு நரேஷ் ஆகியோரையும் சந்தித்து ஆசிரியர் அரசு ஊழியர் மாணவர் நலம் சார்ந்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசி வந்தோம்.

மாண்புமிகு பள்ளிக்கல்வி மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் திரு ராஜமோகன் அவர்களுடனான சந்திப்பின்போது போதைப்பொருள் ஒழிப்பு குறித்து மாண்புமிகு தமிழக முதல்வர் தனது பதவி ஏற்பு விழாவில் அறிவித்தமைக்கு நன்றி தெரிவித்தோம் மாணவர் நலன் சார்ந்து காலை உணவில் சிறு தானியங்களை சேர்த்து வழங்குதல், பள்ளி திறப்பின் போதிருந்தே தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்தல், TET தகுதித்தேர்வில் ஏற்கனவே அரசுப்பணியில் உரிய ஒதுக்கீட்டு முறையில் பணி நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு தேர்ச்சி மதிப்பெண் அனைவருக்கும் சமமாக வைத்தல் அல்லது OC பிரிவினர் தேர்ச்சி மதிப்பெண் குறைப்பு , மிக விரைவில் போட்டித்தேர்வு மூலம் அல்லது சென்ற போட்டித்தேர்வில் தேர்ச்சி பெற்றோரைக்கொண்டு, நிரந்தரப்பணி இடத்தில் ஆசிரியர்கள் நியமனம் செய்தல், கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி மாணவர் தேர்ச்சி அடைய 75% வருகையை கட்டாயமாக்குதல், DATA சேகரிக்கும் பணியில் இருந்து ஆசிரியர்களை விடுவித்து கற்பித்தல் பணி மட்டும் வழங்குதல், பணி மாறுதல் கலந்தாய்வு நடத்துதல் குறித்து பேசினோம். அதிகாரிகளுடன் கலந்து பேசி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

மாண்புமிகு மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சருடனான சந்திப்பின் போது, பள்ளிகளின் கான்கிரீட் மேல் தளங்களில், நம் பள்ளியிலேயே, சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்க ஏற்பாடு செய்ய வேண்டினோம்.

மாண்புமிகு பிற்பட்டோர் மற்றும் மிகவும் பிற்பட்டோர் நலத்துறை அமைச்சருடனான சந்திப்பின் போது கள்ளர் பள்ளிகளில் பணி மாறுதல் கலந்தாய்வு உடன் நடத்துதல், அலகு விட்டு அலகு மாற தடைஇன்மை சான்று வழங்கவேண்டுதல், முதுகலை ஆசிரியர் பணியிடங்களை ஒன்பதாக உயர்த்துதல், அனைத்து ஆசிரியர் பணி நியமனங்களும் துறை வாரியாக இல்லாமல் ஒரே நாளில் ஒரே தளத்தில் கலந்தாய்வு நடத்துதல் ஆகிய கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. 

 பள்ளிக்கல்வி துறை அரசு துணைச்செயலாளருடனான சந்திப்பின் போது கோபிசெட்டிபாளையம் கல்வி மாவட்டம் தாளவாடி ஒன்றியம் உள்ளிட்ட ஏழு கல்வி மாவட்டங்களில் கன்னட மொழியில் பயின்று பணியாற்றி வரும் ஆசிரியர்களின் சான்றிதழ் மதிப்பீடு சார்ந்து ஏற்கனவே முன் நிகழ்வுகள் இருந்தும் விதித்தளர்வாணை வழங்காமல் தொடர் தாமதம் செய்வது ஆசிரியர்களை அலைக்கழிப்பது ஆகியவை துறையின் நற்பெயருக்கு ஏற்புடையதாக இல்லை என்பதை பதிவு செய்தோம் 

அமைச்சர் பெருமக்களுடனான சந்திப்பு விபரங்களை மதிப்பு மிகு பள்ளிக்கல்வி இயக்குனர் மற்றும் மதிப்பு மிகு தொடக்கக் கல்வி இயக்குனர் ஆகியோருடன் பகிர்ந்து கொண்டோம் 

தொடக்கக்கல்வி இயக்குநருடனான சந்திப்பின் போது, 

SMC மூலம் ஜூன் மாதத்திலேயே காலிப்பணியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியர் நியமனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்ட தகவலையும் பணி மாறுதல் கலந்தாய்வு நடத்திட முயற்சிகள் நடைபெற்று வருவதையும் அறிந்தோம். 

 TET தகுதித் தேர்வு தேர்ச்சி மதிப்பெண் குறித்து பீகார் மாநில அதிகாரிகளுடன் கலந்து பேசவும், அரசுப் பணியில் உள்ள ஆசிரியர்கள் ஏற்கனவே இட ஒதுக்கீடு முறைப் படி நியமனம் பெற்றுள்ளதால் OC பிரிவினர் உள்ளிட்ட அனைவருக்கும் சமமான தேர்ச்சி மதிப்பெண் வைத்தல், பணிக்காலத்திற்கு என சிறப்பு மதிப்பெண் அளித்தல்,OC பிரிவினருக்கு தேர்ச்சி மதிப்பெண் குறைத்தல் குறித்த கருத்துகளை முன் வைத்தோம் சாத்தியமான அனைத்து வழிகள் குறித்தும் மாண்புமிகு அமைச்சருடன் கலந்து பேசுவதாக உறுதி அளித்தார். 

தாளவாடி உள்ளிட்ட கன்னட மொழி சான்றிதழ் மதிப்பீடு குறித்து விதித்தளர்வு அரசாணை நீண்ட கால நிலுவையில் இருப்பதும் தொடர்ந்து தாமதம் செய்யப்படுவதும் கர்நாடக அரசிடம் அரசாணை விபரங்களை அரசே எழுதிப்பெற வேண்டும் என வலியுறுத்தினோம்.    

ஊதியக்கட்டு நிறைவடைந்த இடைநிலை ஆசிரியர்கள் ஆண்டு ஊதிய உயர்வு பெற இயலாத நிலை உள்ளதை சுட்டிக்காட்டி நிதித்துறை ஆசிரியர்களின் பணிப்பதிவேடு நகலை கோருவது தீர்வு ஆகாது எனவும் விரைவில் உரிய அரசாணை வெளியிட ஆவன செய்ய வேண்டும் எனவும் கோரினோம். நடவடிக்கை எடுப்பதாக கூறினார். நன்றி கூறி விடை பெற்றோம் 

இந்நிகழ்வில் மாநிலத் தலைவர் திரிலோக சந்திரன், பொதுச் செயலாளர் கந்தசாமி துணைத் தலைவர்கள், விஜய், முருகன், இணைச் செயலாளர்கள் நீலமேகன், ராகவன் தலைமையிடச் செயலாளர் ராமச்சந்திரகுமார் மற்றும் திருவள்ளூர் மாவட்ட தலைவர் பரமசிவன் ஆகியோர் கலந்து கொண்டனர் 


மு.கந்தசாமி,

பொதுச் செயலாளர், தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு 

7373803777
















No comments:

Post a Comment