தொடர் போராட்டம்
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தமிழக அரசைக் கண்டித்து…
தேசிய ஆசிரியர் சங்க மாநில உயர்மட்டக் குழுக்கூட்டத்தில் முடிவு.
தேர்தல் வாக்குறுதியில் ஆசிரியர்கள் நலன் சார்ந்து குறிப்பிட்ட அனைத்து வாக்குறுதிகளையும் உடனடியாக நிறைவேற்ற மாநில அரசை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என தேசிய ஆசிரியர் சங்கம் முடிவு செய்துள்ளது.
தேசிய ஆசிரியர் சங்கம் - தமிழ்நாடு சார்பில், மாநில உயர்மட்டக்குழுக் கூட்டம், திருப்பூர், பல்லடம் சாலையிலுள்ள தனியார் அரங்கில் இன்று (31.03.2025, திங்கட்கிழமை) நடைபெற்றது. மாநிலத் தலைவர் திரிலோகச்சந்திரன் தலைமை வகித்தார். மாநிலப் பொதுச்செயலாளர் கந்தசாமி, பொருளாளர் திருஞானகுகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஓய்வுபெற்றோர் பிரிவின் மாநில துணைத்தலைவர் பழனிச்சாமி வரவேற்புரையாற்றினார். பல மாவட்டங்களைச் சேர்ந்த மாநில அளவிலான சங்க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். இதில் அரசு ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் சார்ந்த பல்வேறு பிரச்சனைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அதன்படி...
தேர்தல் வாக்குறுதியில் திமுக அறிவித்த ஆசிரியர்கள் நலன் சார்ந்த அறிவிப்புகளை உடனடியாக மாநில அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். அதனை எதிர்வரும் ஏப்ரல் 24ம் தேதி சட்டமன்றத்தில் நடைபெறும் பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கையில் அறிவிக்க வேண்டும். அவ்வாறு அரசு அறிவிக்காத பட்சத்தில் அரசுக்கு எதிராக *ஃபோட்டா-ஜியோ (FOTA-GEO)* சார்பில் அரசுக்கு எதிராக கடுமையான, மாநிலம் தழுவிய தொடர் போராட்டங்களை நடத்தவுள்ளோம். புதிய ஓய்வூதிய திட்டத்தை முழுமையாக இரத்து செய்துவிட்டு 01.04.2003க்கு முன்பாக நடைமுறையில் இருந்த பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி மையங்களில் சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் அலுவலர்கள், மதிப்பூதியம் பெற்றுவரும் அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள், ஊர்ப்புற நூலகர்களையும், தொகுப்பூதிய, மதிப்பூதிய அலுவலர்கள் அனைவரையும் நிரந்தர அரசுப் பணியாளர்களாக அறிவித்து காலமுறை ஊதியமும், பணிப்பாதுகாப்பும், சட்டப்பூர்வ ஓய்வூதிய பலன்களையும் வழங்க வேண்டும். மருத்துவம், தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களின் இடஒதுக்கீடை 10% உயர்த்திட வேண்டும். கடந்த இரு ஆண்டுகளில் 10 லட்சம் மாணவர்கள் அரசுப்பள்ளிகளில் கூடுதலாக சேர்ந்துள்ளனர். இவர்களுக்கு போதிய வகுப்பறைகள் உடனடியாக கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணாக்கர் எண்ணிக்கைக்கு தக்கவாறு கூடுதல் ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டு நிரப்பப்பட வேண்டும். தமிழ்நாட்டில் "பி.எம் ஸ்ரீ" பள்ளிகள் துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் சுமார் 400 முதல் 500 பள்ளிகளுக்கான உள்கட்டமைப்பு செலவு மற்றும் 15,000 ஆசிரியர்களுக்கான ஊதியச் செலவு சேமிப்பாக கிடைக்கும். கிராமப்புற மாணவர்களுக்கு இது அதிக பயனுள்ளதாக இருக்கும். உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு முன்பு போலவே வழங்க ஆவன செய்ய வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் கோரும் 2009க்கு பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு விரைந்து களையப்பட வேண்டும். ஆசிரியர்களுக்கு கற்பித்தல் பணி மட்டுமே ஒதுக்கப்பட வேண்டும். அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் பணியிடத்தை உறுதி செய்தல் வேண்டும்.
நிறைவாக தேசிய ஆசிரியர் சங்கத்தின் மாநில இணைச் செயலாளர் தண்டபாணி நன்றி கூறினார்.
No comments:
Post a Comment