Thursday, December 21, 2023

RAMAYANAM PART 142

 இராமாயணம் தொடர்...142

சீதைக்கு திரிசடை கூறும் ஆறுதல்!

✦ சீதை, பெருமானே! தங்களுக்கு என்னால் தான் இந்த துன்பம் நேர்ந்ததே. கண் இமைக்காமல் என்னை காத்த இலட்சுமணா! அண்ணன் இறக்கும் முன் நான் என் உயிரை விடுவேன் என உன் அன்னை சுமித்திரையிடம் கூறினாயே. அதுபோல் இன்று செய்து விட்டாயே. கடலை கடந்து வந்து என்னைக் கண்டு சென்ற அனுமனே! உனக்கு இந்நிலைமை நேர்ந்துவிட்டதே எனக் கூறி கதறி அழுதாள். பெருமானே! நான் தீராப் பழிக்கு ஆளாகிவிட்டேன். இனி என்னை காக்க யார் இருக்கிறார்கள் எனக் கூறிக் கொண்டு கீழே விழ முயன்றாள். அப்பொழுது திரிசடை சீதையை தடுத்தாள். பிறகு சீதையை அன்போடு தழுவிக் கொண்டாள். அம்மா சீதை! இதெல்லாம் மாயை. மாய மானை அனுப்பியதும், உன் தந்தை போல் மாய ஜனகரை உன் முன் கொண்டு வந்து நிறுத்தியதும் அரக்கர்கள் செய்த மாய வேலை என்பதை நினைவில் கொள்வாயாக.

✦ அங்கு வீழ்ந்து இருக்கும் உன் கணவனை பார்! இராமனின் உடலில் அம்பு பட்ட இடமும் தெரியவில்லை. இரத்த காயங்களும் தெரியவில்லை. அதுமட்டுமில்லாமல் இங்கு ஒரு அரக்கர்கள் கூட தென்படவில்லை. இது எல்லாம் அரக்கர்களின் மாய செயல் என்பதை உணர்வாயாக. நான் கண்ட கனவு பொய்யாகாது. உனக்கு நேர்ந்த நல்ல நிமித்தங்களையும் நினைத்துப் பார். நிச்சயம் தர்மம் தலைத்தோங்கும். பாவச்செயல்கள் செய்யும் அரக்கர்களின் நிலைமை நிச்சயம் ஒரு முடிவுக்கு வரும். நீ அழாதே என ஆறுதல் கூறினாள். பிறகு திரிசடை, சீதா! முன்பு நாகப்பாசத்தால் கட்டுண்டவர்கள் விடுபட்டு ஆரவாரம் செய்த ஒலி உனக்கு கேட்டது அல்லவா? நிச்சயம் இவர்கள் திரும்பி வருவார்கள். இராமர் இறந்திருந்தால் இந்த ஏழு உலகங்களும் அழித்திருக்கும். 

✦ நீ சிரஞ்சீவியாக இருக்க வேண்டும் என அனுமனுக்கு கொடுத்த வரம் பொய்யாகாது. உன் கற்பின் திறனுக்கும் அழிவு வராது. பிரம்மாஸ்திரத்தால் வீழ்ந்து கிடப்பவர்கள் நிச்சயம் உயிர் பெறுவார்கள். நீ உன் மனதை தெளிவுப்படுத்திக்கொள் என ஆறுதல் கூறினாள். சீதை, திரிசடை தாயே! இதுவரை தாங்கள் சொன்ன எதுவும் பொய்யாகவில்லை. தக்க சமயத்தில் தாங்கள் எனக்கு அறிவுரை கூறியுள்ளீர்கள். தாங்கள் கூறிய வார்த்தைகளை தெய்வமாக நினைத்து, நான் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்றாள். நிச்சயம் எம்பெருமான் என்னை வந்து காப்பார் எனக் கூறினாள். பிறகு அரக்கியர்கள் புஷ்பக விமானத்தை மீண்டும் அசோக வனத்திற்கே கொண்டு சென்று சீதையைக் காவலில் வைத்தனர். 

✦ இராமரின் கட்டளைப்படி உணவு சேகரிக்க சென்ற விபீஷணன் போர்க்களத்திற்கு வந்தான். போர்க்களத்தில் பிரம்மாஸ்திரத்தால் வீழ்ந்து கிடக்கும் வானர வீரங்களை கண்டு அதிர்ச்சி அடைந்தான். அங்கதன், சுக்ரீவன் முதலான வானர வீரர்கள் வீழ்ந்துக் கிடப்பதைக் கண்டு மிகவும் கவலை அடைந்தான். பிறகு விபீஷணன், இராமன் மயங்கி கிடப்பதைக் கண்டு அவனது கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. என்ன செய்வதென்று தெரியாமல் சிறிது நேரம் குழம்பி இருந்தான். விபீஷணன், இராமரை உற்றுப் பார்த்தபோது இராமரின் உடலில் எந்த அம்பும் துளைக்கவில்லை என்பதைக் கண்டுகொண்டான்.

தொடரும்...

No comments:

Post a Comment