Sunday, December 3, 2023

RAMAYAN PART 130

 இராமாயணம் தொடர்...130

இந்திரஜித் போருக்கு செல்லுதல் !!!

❖ இலங்கை நகரம் பெரும் சோகமயமாக காட்சி அளித்தது. இலங்கையில் எப்போதும் ஆடலும், பாடலும், நாத ஓசைகளும் ஒலித்துக் கொண்டிருக்கும். ஆனால் இன்று நகர் முழுவதும் அழுகுரல் மட்டுமே ஒலித்துக் கொண்டு இருந்தது. இலங்கையில் தங்கள் கணவர்களை இழந்த அரக்கர்கள் தலையை விரித்து ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து அழுது கொண்டிருந்தனர். தங்கள் மார்பிலும், தலையிலும் அடித்துக் கொண்டனர். இந்த அழுகொலியைக் கேட்டு இந்திரஜித் திடுக்கிட்டான். ஏன் இந்த அழுகுரல்? என்ன நிகழ்ந்தது? இராவணன், இராமனிடம் தோற்றுவிட்டானா? இல்லை அந்த அனுமன் இலங்கை நகரை பெயர்த்து எடுத்துவிட்டானா? இந்த அழுகுரலுக்கான காரணம் என்ன? என்று தன் பக்கத்தில் இருந்தவர்களிடம் கேட்டான். அவர்கள் இந்திரஜித்திடம் சொல்ல அஞ்சி நடுங்கினார்கள். பிறகு அவர்கள் பயந்துக் கொண்டு, அசுர குலத்தின் வேந்தனே! உம் தம்பிகளான அதிகாயன், நிகும்பன், கும்பன் முதலியவர்களை இலட்சுமணன் அழித்து விட்டான் என்றனர்.

❖ இதைக் கேட்ட இந்திரஜித் பெரும்கோபம் கொண்டான், இருப்பினும் தம்பிகளை இழந்துவிட்ட அவன் மிகவும் வருந்தினான். உடனே அவன் இராவணனின் மாளிகைக்கு விரைந்து வந்தான். அங்கு துயரத்தில் இருக்கும் இராவணனை பார்த்து வணங்கினான். பிறகு அவன் தந்தையே! ஏன் இலங்கை நகரம் முழுவதும் அழுகுரலாக கேட்கின்றது? இங்கு என்ன நேர்ந்தது எனக் கேட்டான். இராவணன், மகனே! இந்திரஜித், உன் தம்பிகளான அதிகாயன், நிகும்பன், கும்பன் போரில் மாண்டு விட்டனர் எனக் கூறினான். இதைக்கேட்டு இந்திரஜித் மிகவும் கோபங்கொண்டான். தந்தையே! தாங்கள் அறிவை இழந்து விட்டீர்களா? போருக்கு ஒவ்வொருவராக அனுப்பி தாங்கள் அனைவரையும் இழந்துவிட்டீர்கள். தாங்கள் இவர்களை அனுப்பியதற்கு பதில் என்னை அனுப்பி இருந்தால் நான் போரில் வெற்றி பெற்றிருப்பேன். அன்று தூதனாக வந்த அந்த அனுமனையும் கொல்லாமல் விட்டுவிட்டாய்.

❖ அந்த இராமன் இருக்கும் இடம் தெரிந்தும் அவனை கொல்லாமல் இருக்கின்றாய். இனியும் தாங்கள் அறிவற்றவனாக முடிவு செய்யாமல், இலங்கை நகரை காப்பாற்றுங்கள். என் தம்பிகளை கொன்ற அந்த இலட்சுமணனை நான் கொல்வேன். இல்லையென்றால் நான் இலங்கை நகருக்குள் நுழைய மாட்டான். இப்பொழுதே நான் போருக்குச் செல்கிறேன் என்றான். இராவணன், மகனே! நீ சொன்ன இந்த வார்த்தைகள் எனக்கு ஆறுதலாக இருக்கிறது என்றான். பிறகு இந்திரஜித் இராவணனை வணங்கிவிட்டு, போருக்கு செல்ல ஆயத்தமானான். தன் படைகளை திரட்டிக் கொண்டு, வில்லை கையில் ஏந்திக் கொண்டு போருக்குச் செல்ல தந்தையிடம் விடைபெற்றான். இராவணனை இந்திரஜித்தை மார்புடன் தழுவிக் கொண்டு, வெற்றியுடன் திரும்புவாயாக எனக் கூறி வழியனுப்பினான். இந்திரஜித்துடன் சென்ற படைகள் எண்ணில் அடங்காதவை.

போரில் வெற்றி பெற இந்திரஜித் செய்த யாகம் பற்றி நாளை காண்போம்!... 

தொடரும்...

No comments:

Post a Comment