Saturday, May 20, 2023

கன்னியாகுமரி - அழகிய சுற்றுலாத் தளங்கள்

 மூன்று பெரிய நீர்நிலைகளால் சூழப்பட்ட இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள கன்னியாகுமரி, தமிழ்நாட்டின் அழகும் அமைதியும் நிறைந்த நகரங்களில் ஒன்றாகும். வரலாறு, கலாசாரம், இயற்கை அழகு மற்றும் நவீனமயமாதல் ஆகியவற்றின் அற்புதக் கலவையாக உள்ள இந்தக் கடற்கரை நகரத்தில் ஏதோ ஒன்று அனைவரையும் ஈர்க்கிறது.

விவேகானந்தர் பாறை நினைவு மண்டபம்:

ஒரு சிறிய தீவின் மீது அமைக்கப்பட்டுள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் கன்னியாகுமரியில் உள்ள மிகவும் புகழ்பெற்ற சுற்றுலாத் தலம் ஆகும். 1892-ஆம் ஆண்டில் விவேகானந்தர் இங்குள்ள பாறையில் மூன்று நாட்கள் தொடர்ந்து தியானம் செய்த பின்பு ஞானோதயம் அடைந்தார்.

விவேகானந்தர் மண்டபம் மற்றும் ஸ்ரீபாத மண்டபம் ஆகிய இரண்டும் இந்தப் பாறை நினைவு மண்டபத்தின் மிக முக்கிய அம்சங்கள் ஆகும். இந்தியப் பெருங்கடலை பின்னணியாகக் கொண்டு எழுப்பப்பட்ட சுவாமி விவேகானந்தரின் பிரமாண்டமான சிலை பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கும். ஆன்மிக சிந்தனையும் அமைதியான சுற்றுப்புறமும் கொண்ட இந்த விவேகானந்தர் நினைவு மண்டபம் கன்னியாகுமரியின் மிக முக்கியமான சுற்றுலா தலமாக அனைவரையும் ஈர்க்கிறது.



திருவள்ளுவர் சிலை:

உலகப் புகழ் பெற்ற தத்துவ ஞானி மற்றும் புலவராகத் திகழ்ந்த திருவள்ளுவரைப் போற்றும் விதமாக கன்னியாகுமரியின் ஒரு சிறிய தீவில் ஒரு சிலை எழுப்பப்பட்டுள்ளது. தமிழ் இலக்கியத்தின் மிகச் சிறந்த படைப்பான திருக்குறள் நூலை எழுதியவர் திருவள்ளுவர். திருக்குறளை போற்றும் விதமாக 133 அடி உயரத்துடன் 38 அடி உயரம் கொண்ட பீடத்தின் மீது, வெகு தொலைவிற்கு தெரியும் வண்ணம் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரியின் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றான இந்த இடம் நமது பழம்பெரும் கலாசாரத்தை போற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

திற்பரப்பு அருவி:


கன்னியாகுமரியின் திற்பரப்பு அருவி 50 அடி உயரத்திலிருந்து விழும் ஓர் அழகான மிகவும் புகழ்பெற்ற சுற்றுலா தலம் ஆகும். மனிதனால் உருவாக்கப்பட்ட இந்த அருவியின் கீழ் குளம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அருவியில் நீராடிய பிறகு அதன் கீழே அமைக்கப்பட்டுள்ள குளத்தில் நீந்தி புத்துணர்ச்சி அடைந்து அவ்விடத்தை சுற்றியுள்ள இயற்கை காட்சிகளைக் கண்டு களிக்க படகு சவாரியும் இங்கு உள்ளது. அருவியின் நுழைவாயிலில் இறைவனின் அருள் வேண்டி வரும் பக்தர்களுக்கு என ஒரு சிறிய சிவன் கோயிலும் அமைக்கப்பட்டுள்ளது.



ஸ்ரீ தாணுமாலயன் கோயில்:


சுசீந்திரம் என்னும் ஊரில் மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய முப்பெரும் தெய்வங்களை மூலவர்களாக கொண்டு கட்டப்பட்ட இந்த புனிதமான கோயில் ஸ்தாணுமாலயன் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இக்கோயிலில் உள்ள கல்வெட்டுகள் ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை எனக் குறிப்பிடுகிறது. இது 17-ஆம் நூற்றாண்டில் புதுப்பிக்கப்பட்டது.

கட்டிடக் கலையின் தலைசிறந்த படைப்பான இந்தக் கோயில் கட்டிடக் கலை அழகின் முன்னோடியாக திகழ்கிறது. ஒரே கல்லில் செதுக்கப்பட்ட அலங்காரம் மண்டபம் இந்தக் கோயிலின் சிறந்த அம்சமாகத் திகழ்கிறது. கட்டை விரல் கொண்டு அடிக்கும்போது இந்த தூண்களில் இருந்து பல்வேறு விதமான இசைகள் வெளிப்படுவதை உணரலாம். இந்த தாணுமாலயன் பெருமாள் கோயில் இந்துக்களின் சைவம் மற்றும் வைணவம் ஆகிய இரு பிரிவினரும் இணைந்து வழிபடும் தலமாகவும் உள்ளது.

பத்மநாபபுரம் அரண்மனை :


பத்மநாபபுரம் அரண்மனை திருவிதாங்கூரின் முன்னாள் மன்னர்களின் இருப்பிடமாக இருந்தது. இது திருவனந்தபுரத்தில் இருந்து 64 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. திருவனந்தபுரத்தில் இருந்து கன்னியாகுமரி செல்லும் வழியில் உள்ள தக்காலேகோவில் கேரள கட்டடக்கலையின் பாரம்பரியத்தையும் அழகையும் எடுத்துரைப்பதாக உள்ளது. இந்த அரண்மனை பல வருடங்களைக் கடந்த போதிலும் அதனுள் உள்ள சுவர் ஓவியங்கள், அழகான அற்புதமான சிற்பங்கள் மற்றும் கருப்பு கிரானைட் தளம் ஆகியவை இன்றளவிலும் பார்ப்போரை பிரமிக்க வைப்பதாக உள்ளது.

மகோகனி மரத்தால் ஆன இசை வில், வண்ணங்கள் குழைத்து மைக்காவால் செதுக்கப்பட்ட ஜன்னல்கள், கிழக்கு நோக்கி வெகு தூரத்திற்கு செதுக்கப்பட்ட அரச சபை நாற்காலிகள் மற்றும் ராஜமாதா அவர்களின் பல வண்ணங்களில் அமைக்கப்பட்ட கூரைகள் கொண்ட அரண்மனை ‘தைக் கொட்டாரம்’ ஆகியவை பார்ப்போரை, அம்மாளிகையின் மாயாஜாலத் தோற்றத்தை கண்டு வியக்க வைக்கிறது.

பகவதி அம்மன் கோயில்: 


3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பகவதி அம்மன் கோயில் தேவி கன்னியாகுமரி கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. கன்னியாகுமரியின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், இந்து மதத்தின் முக்கியமான கோயில்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. தேவி கன்னியாகுமரி அம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட 51 சக்தி பீடங்களில் இந்த கோயிலும் ஒன்றாகும். சிவபெருமான் சக்தி தேவியை தன் தோள்களில் சுமந்து ருத்ர தாண்டவ நடனம் ஆடியபோது அவரது தோள்களில் இருந்து தேவி உயிரற்ற சடலமாக இந்த இடத்தில் விழுந்ததாகக் கூறப்படுகிறது.

தேவி கன்னியாகுமரி அம்மன் கோயிலினுள் தேவி அழகிய மூக்குத்தி அணிந்து கையில் ருத்ராட்ச மாலையுடன் உள்ள நிலையில் ஒரு படம் வைக்கப்பட்டுள்ளது. நீலக் கடலின் பின்னணியில் அமைந்திருக்கும் மயக்கம் தரும் இக்காட்சி அதன் பழங்கால கட்டிட அமைப்புக்கு மிகவும் புகழ்பெற்றது. மேலும், ஆன்மிகச் சிந்தனை உள்ளவர்களின் இதயத்தில் ஆன்மிக ஒளி ஏற்றும் ஞானப் பெருங்கடலாக இக்கோயில் விளங்குகிறது.

வட்டக்கோட்டை :


ஆங்கிலத்தில் ‘சர்குலர் ஃபோர்ட்’ என அழைக்கப்படும் வட்டக்கோட்டை இந்தியாவின் தென்கோடியான கன்னியாகுமரியின் கடலோரத்தில் அமைந்துள்ளது. கிரானைட் கற்கள் கொண்டு கோட்டையின் பெரும்பாலான பகுதி கட்டமைக்கப்பட்டுள்ளது.  இக்கோட்டையின் சில பகுதிகள் கடல் வரை நீண்டு கட்டப்பட்டுள்ளது. சமீபத்தில் கோட்டையில் பெரிய அளவில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று தற்போது இது இந்திய தொல்லியல் ஆய்வு துறையின் பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.



 

சிதறால் ஜைன மலை கோயில்

சமண யாத்திரிகர்கள் மற்றும் கட்டிடக் கலை நிபுணர்கள் ஆகியோரின்

மத்தியில் இந்த சிதறால் ஜைன நினைவுச் சின்னம்  நெடுங்காலமாக ஒரு

 புகழ்பெற்ற இடமாக திகழ்ந்து வருகிறது. இந்தக் கோயில் வரலாற்று

 முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதோடு அல்லாமல், பலவிதமான மதங்கள்

 நம் நாட்டில் எவ்வாறு ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றன என்பதற்கு

 சிறந்த எடுத்துக்காட்டாகவும் திகழ்கிறது. திகம்பர சமண முனிவர்களின்

இடமாக இந்த சிதறால் ஒரு காலத்தில் இருந்து வந்தது. ஆகவேதான் ஒன்பதாம்

 நூற்றாண்டில் இந்த கோயிலைச் சுற்றியுள்ள பாறைகளில் பல குகை கோயில்

மற்றும் பல விதமான சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. அமைதியான தோற்றம்,

பார்ப்போரை கவர்ந்து இழுக்கும் ஆற்றல் கொண்ட இந்த கம்பீரமான நினைவுச்

 சின்னங்கள் கன்னியாகுமரியில் பார்க்கப்பட வேண்டிய இடங்களில்

முக்கியமான ஒன்றாகும்.

 

காந்தி மண்டபம் :


நமது தேசத் தந்தைக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது 12 அஸ்தி கலசங்களில் ஒன்று, கன்னியாகுமரியில் உள்ள இந்த மிகப் பெரிய மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது. பின்னர் காந்தியின் அஸ்தி திரிவேணி சங்கமத்தில் கரைக்கப்பட்டது. இந்த மண்டபத்தில் உள்ள புகைப்படத் தொகுப்பில் மகாத்மா காந்தியின் பல புகைப்படங்கள் முதன்மையானவையாக தொகுக்கப்பட்டுள்ளன. சுதந்திர இந்தியாவிற்கு முன்பு வெளிவந்த மாத இதழ்கள், புத்தகங்கள் மற்றும் இதர படைப்புகள் கொண்ட நூலகம் ஒன்றும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது.

பாரத மாதா கோயில் :

பாரத மாதா கோயில்,தமிழ்நாட்டின் கன்னியாகுமரி கடற்கரையில் உள்ள விவேகானந்த புரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர வளாகத்தில் நிறுவப்பெற்றது.  மூன்று ஏக்கர நிலப்பரப்பில், ரூபாய் 25 கோடி செலவில் அமைக்கப்பட்ட பாரத மாதா கோயில் மற்றும் இராமாயண தரிசன சித்திரக் கண்காட்சி கூடம் அமைக்கப்பட்டது.

 

விவேகானந்த கேந்திரம் :


விவேகானந்த கேந்திரம்  சுவாமி விவேகானந்தரின் போதனைகளைப் பரப்ப, ஜனவரி 7 1972 ல் ஏக்நாத்ஜி ரானாடேவால் கன்னியாகுமரியில் தோற்றுவிக்கப்பட்டது. இவ்வமைப்பின் மூலம் யோக வகுப்புகளும், பண்பாட்டு வகுப்புகளும், ஆன்மீகச் சொற்பொழிவுகளும், இளைஞர்களுக்கும், குழந்தைகளுக்கும் ஆளுமைதிறன் பயிற்சி முகாம்களும் தொடர்ந்து பல மாநிலங்களில் நடத்தப்படுகின்றன.

கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தபுரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு பல்வேறு பணிகளை மேற்கொள்கிறது. இதன் சார்பாக விவேகானந்த நினைவுக் கண்காட்சி, விவேகானந்தர் நினைவு மண்டபம் போன்றவை பராமரிக்கப்படுகிறது மேலும் பல்வேறு இடங்களில் கல்விக் கூடங்களும் நடத்தப்படுகிறது. இதன் இயற்கை வள அபிவிருத்தித் திட்டம், கிராமப்புற மேம்பாட்டுத் திட்டம் போன்றவை பல்நோக்குப் பார்வை கொண்ட திட்டமாக நடைமுறைப்படுத்தப்படுகிறது.


நாகராஜா கோவில் :


நாகராஜா கோவில் என்பது கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோயிலில் உள்ளது. இக்கோயிலின் பெயரிலேயே ஊர் நாகர்கோவில் என்றழைக்கப்படுகிறது. இது கேரள பாரம்பரியக் கோவில் ஆகும். இங்கு மூலஸ்தானத்தில் ஐந்துதலை நாகராஜர் அருள்பாலிக்கிறார். இந்த கோவிலைச் சுற்றி ஏராளமான பாம்புச் சிலைகள் உள்ளன. பொதுமக்கள் ஆவணிமாதத்தில் இச்சிலைகளுக்குப் பாலூற்றி அபிஷேகம் செய்வதை சிறப்பாகக் கருதுகின்றனர்.

இக்கோவிலின் கருவறையின் மேல் ஓலை வேயப்பட்டு உள்ளது. இது வேறு எந்தக் கோவிலிலும் பார்க்கமுடியாத சிறப்பு அம்சமாகும். அது மட்டுமல்ல இந்தக் கோவிலின் கருவறை மண் ஆறு மாதம் கருப்பாகவும் ஆறு மாதம் வெண்மையாகவும் காணப்படுகிறது. இது பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.


திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவில் :

 கன்னியாகுமரி மாவட்டத்தில் திருவட்டாறு எனும் ஊரில் அமைந்துள்ள ‌ஒரு பழைமையான வைணவக் கோயிலாகும். இது 108 வைணவத் திருத்தலங்களுள் 76 ஆவதாக வைத்து எண்ணப்படுகிறது. மேலும் இது 13 மலைநாட்டுத் திருத்தலங்களுள் ஒன்றாகும்.
இந்த ஊாின் நடுவில் பள்ளி கொண்டிருக்கும் ஆதி கேசவ பெருமானின் திருவடிகளை வட்டமிட்டு பரளியாறு ஓடுவதால் இந்த ஊா் திருவட்டாறு எனும் பெயர் பெற்றது. மாராமலையில் உற்பத்தியாகி மேற்கு நோக்கி ஓடும் பறளியாறு மற்றும் வடகிழக்கு பகுதியாக ஓடும் கோதையாறும் ஒன்று சோ்ந்து மீண்டும் ஒரே ஆறாக உருவெடுக்கும் இடம் "மூவாற்று முகம்" (மூன்று + ஆறு + முகம்) எனப்படும். இவ்வாறு இறுதியில் அரபிக் கடலில் கலக்கிறது.இத்தலம் சேரநாட்டு முறையில் கட்டப்பட்டு உள்ளது. கோவிலுக்குள் நுழையும் ஆடவர் அனைவரும் இறைவனுக்கு மரியாதை தரும் பொருட்டு தங்கள் சட்டைகளைக் கழற்றியே நுழைய வேண்டும். ஆதிசேடனைப் படுக்கையாகக் கொண்டு அறிதுயிலில் ஆழ்ந்துள்ள பெருமாளின் திருமேனி 22 அடி நீளம் உடையது. இது 16,008 சாளக்கிராமக் கற்களைக் கொண்டு செய்யப்பட்ட சடுசக்கரை படிமம் என்று சொல்லப்படுகிறது. கருவறையில் மூன்று நிலைவாயில்கள் உள்ளன. திருமுகம், திருக்கரம், திருப்பாதம் எனும் 3 பகுதிகளை ஒவ்வொரு நுழை வாயிலிலும் காணலாம். திருமுக நிலைவாயிலில் அறிதுயிலில் ஆழந்துள்ள முகத்தையும் நீட்டிய இடக்கையையும் ஆதிசேடனையும் கருடாழ்வாரையும் காணலாம். திருக்கர வாயிலில் சின்முத்திரை காட்டும் வலக்கரத்தையும் சங்கு சக்கரம் உள்ளிட்ட ‌ஐம்படையினையும் காணலாம். தரையில் தாயாருடன் கூடிய பெருமாளின் உலோகத் திருமேனியும் வைக்கப்பட்டுள்ளது. கடைசியாக திருப்பாத வாயிலில் திருப்பாதங்களையும் இருவர் பயந்து ஒளிந்திருக்கும் சிலைகளையும் காணலாம். திருமுகம், திருக்கரம், திருப்பாதம் இவ‌ற்றை இதே வரிசைக்கிரமத்தில் தரிசிப்பது இக்கோவிலின் மரபு ஆகும். இக்கோயிலின் பிரதான வாயில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது.

தொகுப்பு 

வா ஸ்ரீராம்,
ஆசிரியர்,
தஞ்சாவூர்,
9786795104.



No comments:

Post a Comment