Monday, October 23, 2023

RAMAYANAM PART 95

 இராமாயணம் தொடர் 95

விபீஷணன் முடிசூட்டுதல்!...

♕ இராமர், விபீஷணனுக்கு ஏன் அடைக்கலம் தர வேண்டும் என்பதற்கு உங்களுக்கு போதுமான விளக்கம் தந்துவிட்டேன் என்றார். பிறகு இராமர் சுக்ரீவனை அழைத்து, சுக்ரீவா! நீ சென்று வீபிஷணனை என்னிடம் அழைத்து வா என்றார். சுக்ரீவன் விபீஷணன் இருக்கும் இடத்திற்கு சென்றான். சுக்ரீவன் விபீஷணனை கட்டித் தழுவிக் கொண்டான். பிறகு சுக்ரீவன் மகிழ்ச்சியோடு இராமர் உன்னை அழைத்து வர என்னை பணித்துள்ளார் எனக் கூறினான். இதைக் கேட்ட விபீஷணன், இராமர் இருக்கும் இடத்தைப் பார்த்து தொழுதான். பிறகு விபீஷணன், சீதையை கவர்ந்து சென்ற இராவணனின் தம்பி என தெரிந்தும் எனக்கு அடைக்கலம் கொடுக்க சம்மதித்தாரா? சிவபெருமான் நஞ்சை உண்டு நீலகண்டனாக மாறி பெருமை அடைந்தார். அதேபோல் இன்று இராமர் என் மீது காட்டிய கருணையால் பெருமை அடைந்தேன் என்றான்.

♕ பிறகு சுக்ரீவன் விபீஷணனை அழைத்துக் கொண்டு இராமர் இருக்கும் இருப்பிடத்திற்கு சென்றான். அங்கு விபீஷணன் இராமரை பார்த்து பரவசமடைந்து இராமரின் காலில் விழுந்து வணங்கினான். இராமர் விபீஷணனை இருக்கையில் அமரக் கூறினார். விபீஷணன், இராவணன் என்னை வெறுத்து ஒதுக்கியதும் நன்மை தான். அதனால் தேவர்கள் எவருக்கும் கிடைக்காத தங்களின் திருவடி எனக்கு கிடைத்தது என்றான். பிறகு இராமர் விபீஷணனிடம், விபீஷணா! இன்று முதல் நீ எனக்கு தம்பி ஆவாய். தசரத சக்ரவர்த்திக்கு நான்கு புதல்வர்கள். குகனுடன் ஐந்து புதல்வரானார்கள். சுக்ரீவனுடன் ஆறு புதல்வரானார்கள். இன்று உன்னுடன் ஏழு புதல்வர்கள். இன்று முதல் எனக்கு ஏழு சசோதரர்கள். எனது பெயர் இவ்வுலகில் வாழும் நீ கடல் சூழ்ந்த இலங்கை நகரை ஆட்சி புரிவாயாக எனக் கூறி அருளினார்.

♕ இராமர் கூறியதைக் கேட்ட விபீஷணன், இராமரை போற்றி வணங்கினான். பிறகு இராமர் தன் தம்பி இலட்சுமணரை அழைத்து, இலங்கையின் அரசனாக விபீஷணனுக்கு முடிசூட்ட பணித்தார். விபீஷணன் இராமரிடம், இராவணனின் தம்பியாகிய என் பாவங்கள் நீங்க, தங்களின் பாதுகைகளால் எனக்கு முடிசூட்டுவாயாக எனக் கேட்டான். விபீஷணன் கேட்டுக் கொண்டபடி, இராமனின் பாதுகைகளால் விபீஷணனுக்கு முடிசூட்டப்பட்டது. பிறகு விபீஷணன் பாதுகைகளை தலையில் வைத்துக் கொண்டு இராமரை மகிழ்ச்சியோடு வலம் வந்தான். இதைப் பார்த்த அனைவரும் மகிழ்ச்சி கடலில் திளைத்தனர். பிறகு இலட்சுமணன் விபீஷணனை அழைத்துக் கொண்டு தன் படைகள் தங்கியிருக்கும் இடங்களை காண்பிக்கச் சென்றான்.

♕ அன்றிரவு வந்தது. இராமர் சீதையை நினைத்து மிகவும் வருந்திக் கொண்டு இருந்தார். இதைப் பார்த்த சுக்ரீவன் இராமரிடம், நாம் செய்ய வேண்டிய செயல்கள் நிறைய இருக்க தாங்கள் ஏன் வருந்திக் கொண்டிருக்கிறீர்கள் என்றான். பிறகு இராமர் விபீஷணனை அழைத்து வரச் சொன்னார். இராமர் விபீஷணனை அமர வைத்து, இலங்கை நகரின் அரக்கர்கள், அதன் காவல்கள் பற்றி சொல்லுமாறு கேட்டார். விபீஷணன், ஆதிஷேஷனுடன் நடந்த பல பரீட்சையின் போது மேருகிரி மலையில் இருந்து சிதறடித்த மலை நகரமே இலங்கை நகரமாகும். இலங்கை நகரின் நான்கு வாயில்களிலும் கோடிக்கணக்கான அரக்கர்கள் காவல் புரிகின்றனர். மதிலின் உட்புறத்திலும், வெளிப்புறத்திலும் ஆயிரம் கோடி பேர் உறக்கமின்றி காவல் புரிந்து வருகின்றனர். இலங்கை அரண்மனையின் வாயிலை கண் இமைக்காமல் அரக்கர்கள் அறுபத்திநான்கு கோடி பேர் காவல் புரிகின்றனர் என்றான்.

தொடரும்...

No comments:

Post a Comment