Pages

Thursday, September 7, 2023

RAMAYANAM PART 54

 இராமாயணம் தொடர் 54

வாலி-சுக்ரீவன் சண்டை!...

❅ மன்னா! சுக்ரீவனுக்கு துணையாக இராமன் என்பவர் வந்துள்ளதாக நம் அன்புக்கு உரியவர்கள் கூறினார்கள். அவரை வெல்ல எவராலும் முடியாது. ஆகையால் தாங்கள் செல்ல வேண்டாம் என்றாள் தாரை. நீ என்ன சொல்கிறாய். இராமர் சுக்ரீவன் உடன் உறவு கொண்டு உள்ளாரா? இராமர் அறவழியில் நடப்பவர். ஒருவேளை இராமர் சுக்ரீவன் உடன் இருந்தால் இராமருக்கு கிடைக்கபோகும் பலன் தான் என்ன? தன் தாயின் கட்டளையால் நாட்டை தம்பி பரதனுக்கு தந்துவிட்டு, இராமர் வனம் வந்துள்ளார். உலகையே எதிர்த்து நின்றாலும் வெற்றி பெறுபவர், இராமர். அவர் கையில் பெரிதும் துணையாக கோதண்டம் உள்ளது. அவருக்கு உறுதுணையாக அவரின் தம்பி இலட்சுமணர் உள்ளார். இதற்கு மேல் அவருக்கு வேறென்ன துணை வேண்டும்.

❅ அவர் சூரிய குலத்தவர், நாம் வானரங்கள். அதுவும் சுக்ரீவனிடம் ஏன் அவர் நட்பு கொள்ள வேண்டும். தம் தம்பிகள் மீது மிகவும் அன்புக் கொண்ட, அத்தகைய இராமர் எங்களின் சண்டைக்கு இடையில் வருவாரா? நிச்சயம் வரமாட்டார். இவ்வளவு சிறப்பு வாய்ந்த இராமரை தவறாக எண்ணி விடாதே. நான் சீக்கிரம் சென்று சுக்ரீவனின் உயிரை எடுத்துவிட்டு வருகிறேன் என்று மனைவி தாரையிடம் சொல்லிவிட்டு புறப்பட்டார். தாரை, இதற்குமேல் இவரிடம் பேசி ஒரு பயனும் இல்லை என நினைத்து அமைதியாக இருந்தாள். வாலி தன் தம்பி சுக்ரீவனை தேடிக் கொண்டு சோலைக்கு அருகில் உள்ள மலைக்கு வந்தான்.

❅ அங்கு சுக்ரீவன் வாலிக்காக காத்து கொண்டு இருந்தான். பிறகு இருவரும் சண்டையிட தொடங்கினர். ஓர் இடத்தில் சண்டையிடாமல் சுழன்று சுழன்று சண்டையிட்டார்கள். இராமர் இலட்சுமணனிடம், தம்பி! பார்த்தாயா இருவரும் இரு சிங்கங்கள் போல கர்ஜித்து கொண்டு சண்டை போடுகிறார்கள் என்றார். ஆனால் இலட்சுமணர், அண்ணனை காத்து துணைபுரிவதே தம்பியின் கடமையாகும். ஆனால் இங்கு அண்ணன் தம்பி இருவரும் சண்டை போட்டு கொண்டு இருக்கிறார்கள் எனக் கூறி மனம் வருந்தினார். அதற்கு இராமர், தம்பி இலட்சுமணா! தம்பி பரதனை போல் உயர்ந்த பண்புடையவர் எவரெனும் உள்ளார்களா? ஆனால் இவர்கள் புரிதல், பொறுமை இன்றி சண்டை போட்டு கொண்டு இருக்கிறார்கள் என்றார்.

❅ அவர்களின் சண்டை வெகுநேரம் நடந்தது. வாலியால் சுக்ரீவன் மிகுந்த அடிப்பட்டான். பிறகு சுக்ரீவன் இராமரிடம் வந்து, பெருமானே! நான் என்ன தவறு செய்தேன். அண்ணன் வாலி என்னை அடித்துக் கொண்டே இருக்கிறார். ஆனால் தாங்கள் ஒன்றும் செய்யாமல் அமைதியாகவே உள்ளீர்கள் என வலி தாங்க முடியாமல் கேட்டான். இதற்கு இராமர், தம்பி! சுக்ரீவா, எனக்கு உங்கள் இருவர்களில் யார் வாலி யார் சுக்ரீவன் என வேற்றுமை தெரியவில்லை. அதனால் தான் நான் பாணத்தை தொடுக்காமல் அமைதியாக இருந்தேன் என்றார். இந்த பூமாலையை நீ அணிந்து கொண்டு சண்டையிடு. இந்த பூமாலை உனக்கு வெற்றி மாலையாக அமையும். நான் எளிதாக வேற்றுமை அறிந்து வாலியை வதம் செய்வேன் என்றார்.

❅ சுக்ரீவன் பூமாலையை வாங்கி கழுத்தில் போட்டுக் கொண்டு மறுபடியும் வாலியுடன் சண்டையிட சென்றான். மறுபடியும் தன்னிடம் சுக்ரீவன் சண்டையிட வருவதை கண்ட வாலி மிகவும் கோபம் அடைந்தான். அதனால் சுக்ரீவனை பலமாக அடித்தான். வாலியின் பலமான அடியால் சுக்ரீவன் உயிர்போகும் நிலைக்கு வந்தான். அப்போது இராமர் ஒரு மரத்தின் மறைவில் நின்றுக் கொண்டு வாலியை நோக்கி பாணத்தை பூட்டிக் கொண்டு இருந்தார். சுக்ரீவன் என்ன செய்வதென்று திகைத்து நின்றான். அப்போது வாலி சுக்ரீவனை பார்த்து இப்போதே உன்னை கொன்று விடுகிறேன் என்று சொல்லி சுக்ரீவனை தன் தலைக்கு மேலே தூக்கினான். அப்போது இராமர் வாலியை நோக்கி பாணத்தை எய்தினார். இராமனின் பாணம் வாலியின் மார்பில் பாய்ந்தது.

தொடரும்......



No comments:

Post a Comment