Pages

Tuesday, August 22, 2023

RAMAYANAM PART 31

 இராமாயணம் தொடர் 31

இராமனும் விராதனும்

👉 விராதன் என்ற கொடிய அரக்கன் ஒருவன் இராமர், இலட்சுமணர், சீதை முன்பு வந்து நின்றான். அவன் இராம, இலட்சுமணரை கொன்று தின்னும் நோக்கத்தில் அங்கு வந்து நின்றான். சீதையை கண்டவுடன் அவனுக்கு சீதை மீது காதல் வந்தது. இவள் என்ன அழகு! இதுவரை நான் இவ்வளவு அழகை கண்டதில்லை. தங்கச்சிலை போல் உள்ளாள் என கூறி சீதையை கவர்ந்து விண்ணில் பறந்து சென்றான். திடீரென்று வந்த ஓர் அரக்கன் சீதையை தூக்கிச் சென்றதும், இராமனும் இலட்சுமணரும் திகைத்தனர். அவர்களின் கோபம் தலைத்தோங்க தங்கள் வில்லை எடுத்து நாணைப் பூட்டி, விராதனைக் கூவி அழைத்து அடே! அற்பனே! இப்படியொரு வஞ்சகம் செய்துவிட்டு எங்கே போகிறாய்? திரும்பு என்றார்கள்.

👉 விராதன், மனிதர்களே! பிரம்மதேவன் அளித்துள்ள வரத்தினால் எனக்கு மரணம் இல்லை. உலகத்தில் உள்ளோர் அனைவரையும் ஆயுதம் இல்லாமலே அழிக்கும் ஆற்றல் படைத்தவன் நான். இந்த அழகியை எனக்கு அளித்த நன்றிக்கடனுக்காக உங்கள் உயிரை விட்டுவிட்டேன். போனால் போகிறது, உங்களுக்கு உயிர் பிச்சை அளிக்கிறேன். இந்த பெண்ணை என்னிடம் விட்டுவிட்டு உயிர் பிழைத்து ஓடிவிடுங்கள் என்றான். 

👉 இராமர் தன் வில்லின் நாணை இழுத்து ஒரு பேரொலியை எழுப்பினான். அவ்வொலி ஏழு உலகங்களும் அஞ்சும் வண்ணம் ஒலித்தது. சீதை அவ்வரக்கன் பிடியில் கதறிக் கொண்டிருந்தாள். சீதையை கீழே விட்டுவிட்டு, அவ்வரக்கன் மிகுந்த கோபத்துடன் தன் கையிலிருந்த கொடிய சூலத்தை இராமர் மீது வீசினான். அவன் வீசிய அந்த சூலாயுதத்தால் அனைத்துலகங்களும் அஞ்சி நடுங்கியது. அந்த சூலாயுதம் மின்னலை போல் இராமரின் மார்பை நோக்கி வந்து கொண்டு இருந்தது. இராமன் தன் கோதண்டத்தில் இருந்து ஓர் அம்பை பூட்டி அந்த அரக்கன் வீசிய சூலத்தின் மேல் எய்தினார். அந்த சூலம் இரண்டாக உடைந்து பூமியின் எல்லையில் போய் விழுந்தது. இதனால் அரக்கனின் கோபம் மேலும் அதிகமானது. அவ்வரக்கன் மலைகளையெல்லாம் வேரோடு பிடுங்கி இராமர் மீது எறிந்தான். இராமர், ஒன்றன்பின் ஒன்றாக வரும் மலைகளை தன் வாளியால் அடித்து, அவை மீண்டும் அவ்வரக்கன் மீதே விழும்படி செய்தார். 

👉 காயங்களால் புண்பட்ட உடலோடு விராதன் ஒரு பெரிய மரத்தைப் பிடுங்கி இராமன் மீது வீசினான். இராமர் பன்னிரெண்டு அம்புகளை ஏவி, அந்த மரத்தை துண்டு துண்டாக்கி கீழே தள்ளிவிட்டு, பன்னிரெண்டு அம்புகளை அவ்வரக்கனின் உடலின் பாகங்களிலும் உட்புகுமாறு செலுத்தினார். அவன் கோபத்துடன் காட்டு பன்றிபோல் தன் உடலை உதறினான். அவன் உடலில் அம்பு துளைத்த இடங்களில் இரத்தம் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடியது. இவன் சாகா வரம் பெற்றவன் என்பதால் ஆயுதத்திற்கும் இவன் சாகவில்லை. அதனால் இவனின் கரங்களை வெட்டிவிடுவோம் என்று இராமனும் இலட்சுமணரும் முடிவு செய்து, தங்கள் உடைவாளை எடுத்து அவன் தோளை பார்த்து வீசினார்கள். மிகவும் கோபமடைந்த அவ்வரக்கன், அவர்களை அப்படியே அழுத்திப் பிடித்துக் கொண்டு வானத்தில் பறந்து சென்றான். இராம இலட்சுமணரும் வானத்தில் பறப்பதை பார்த்து தரையிலிருந்த சீதையின் மனம் துடிதுடித்தது. 'அரக்கனே! அவர்களை விட்டுவிடு. என்னை வேண்டுமானால் உண்டு கொள்" எனக் கூறி கதறி அழுதாள். இதனைக் கண்ட இலட்சுமணர் இராமரிடம், அன்னை மிகவும் மனம் வருந்துகிறாள், தாங்கள் இவனிடம் இப்படி விளையாடலாமா? என்று கேட்டான்.

👉 இலட்சுமணா! இவனை கொல்வது எனக்கு ஒரு பொருட்டே அல்ல என்று சொல்லிக்கொண்டே தன் காலால் அந்த அரக்கனை எட்டி உதைத்தார். அவ்வரக்கன் உடனே கீழே விழுந்தான். வாளால் அவன் தோள்கள் இரண்டையும் வெட்டி வீழ்த்தினர். அவ்வரக்கன் கோபத்தால் தாக்குவதற்கு ஓடிவர, இராமர், இலட்சுமணா! இவனை பூமிக்கடியில் புதைத்துவிடுவோம் என்று சொல்லி காலால் உந்தி தள்ளினார். அவன் ஓர் ஆற்றங்கரையிலிருந்த பெரும்பள்ளத்தில் வீழ்ந்து புதைந்துபோனான்.

No comments:

Post a Comment