Pages

Wednesday, August 16, 2023

RAMAYANAM PART 19

 இராமாயணம் தொடர் 19

பட்டாபிஷேக ஏற்பாடுகள்

💫 அயோத்தியை ஆளும் பொறுப்பை தம் மைந்தனிடம் ஒப்படைத்துவிட்டு தான் கானகம் சென்று முக்தி பெற பெரிதும் விரும்பினார், தசரதர். இதனால் இராமனின் முடிசூட்டும் விழாவை ஆடம்பரமாக கொண்டாட தசரதர் விரும்பவில்லை. இராமனுடைய பட்டாபிஷேக விழாவுக்கு சீதையின் தந்தை ஜனகர் வர வேண்டும், கேகய நாட்டுக்கு சென்றிருக்கும் பரதன், சத்ருக்கன் வர வேண்டும் என்ற எண்ணம் அவர் மனதில் தோன்றவில்லை. சீக்கிரம் இராமனுக்கு பட்டாபிஷேகம் செய்ய வேண்டும் என்ற எண்ணமே அவர் மனதில் இருந்தது. உடனே வசிஷ்ட முனிவரை அழைத்து இராமனின் பட்டாபிஷேகத்துக்காக ஆலோசனை செய்தார். பிறகு சபையோர் அனைவரிடமும், எனக்கு வயது முதிர்ந்து விட்டதால் நான் நாட்டை ஆளும் பொறுப்பில் இருந்து விலகி இராமனுக்கு முடிசூட்ட இருப்பதாக, தம் கருத்தை கூறினார். வசிஷ்டர் தசதர மன்னரிடம், இராமனோ தங்களினும் மேல் சிறந்தவன். இராமனுக்கு முடி சூட்டுவதால் நாடும், நாட்டு மக்களும் நலம் பெறுவார்கள் என்று கூறினார். சபையில் உள்ள அனைவரும் தசரத சக்ரவர்த்தியின் கருத்தை ஏற்றுக் கொண்டனர்.

💫 தசரதரின் கட்டளைப்படி சுமந்திரர் இராமனின் மாளிக்கைக்குச் சென்று இராமனை அரசவைக்கு அழைத்துக் கொண்டு வந்தார். இராமர் வசிஷ்ட முனிவரையும், தன் தந்தையையும் வணங்கினார். வணங்கிய தன் மகன் இராமனை தசரதர் கட்டி தழுவி மகிழ்ந்தார். தசரதர், என் தவச் செல்வமே! அயோத்தியை ஆளும் பொறுப்பை நீ ஏற்றுக் கொள்ள வேண்டும். மரபின் படி மூத்த மகன் தான் முடிசூட்டிக் கொள்ள வேண்டும். ஆதலால் நாளை உனக்கு முடிசூட்டு விழா. அதன் பிறகு நான் கானகம் செல்ல இருக்கிறேன் என்று கூறினார். ஆதலால் இன்று நீ அரச தரும நெறிகளை உன் குருவாகிய வசிஷ்டரிடன் கற்றுக் கொள் என்றார். தசதரர் சுமிந்தரிடன், நாளை பட்டாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகள் எந்த குறையும் இன்றி செய்ய வேண்டும் என்றார். மன்ன பெருமான்களே! நீங்கள் அனைவரும் இருந்து இராமனுக்கு முடிசூட்டி விழாவை நடத்தி வைக்க வேண்டும் என்றார் தசரதர். அத்துடன் அரசவை கலைந்தது. 

💫 தசரதர் கௌசலையின் மாளிகைக்குச் சென்று கௌசலையிடன், நாளை இராமனுடைய பட்டாபிஷேகம் இனிதே நடைபெற உள்ளது என்று கூறினார். இதை கேட்ட கௌசலையும் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தாள். ஆனால் கௌசலையோ நாளை முடிசூட்டு விழா பின் மன்னர் கானகம் செல்வதை எண்ணி வருந்தினாள். இருந்தாலும் அவள் நம் கையில் என்ன உள்ளது. எல்லாமே கடவுளின் கையில் தான் உள்ளது என்று நினைத்து கொண்டு பட்டாபிஷேகம் இனிதே நடைபெற கடவுளிடம் பிரார்த்தனை செய்ய சென்றாள். தசரதரின் கட்டளைப்படி, இராமனின் முடிசூட்டி விழா நாட்டு மக்களுக்கு முரசறைந்து அறிவிக்கப்பட்டது. இதை அறிந்த மக்கள் அனைவரும் இன்பக்கடலில் மூழ்கினர். அயோத்தி மாநகரமே விழாக்கோலம் போல் விளங்கியது. 

💫 இராமர் அரசு அறநெறிகளை கற்க வசிஷ்டரிடம் சென்று வணங்கினார். வசிஷ்டர் இராமருக்கு ஆசி கூறி, இராமா நாளை உனக்கு முடிசூட்டும் விழா. ஆதலால் நான் கூறும் அறிவுரைகளை கேட்டுக்கொள். மிக்க சிந்தனையுடைய அந்தணர்கள் மிகவும் சிறந்தவர்கள். அவர்களிடன் நீ ஆசியை பெற்றுக்கொள்ள வேண்டும். அதேபோல் அமைச்சர்களின் அறிவுரையை மதித்து நடக்க வேண்டும். எல்லோரிடமும் அன்பாகவும், இனிமையாகவும் பழக வேண்டும். சிந்தித்து செயல்பட வேண்டும். ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்ய வேண்டும். மக்களின் துயரங்களை நீக்க வேண்டும். மக்களை நிழல் போல் காத்து ஆட்சி புரிய வேண்டும். நீதி நெறி தவறாமல் ஆட்சி புரிய வேண்டும் என்று உபதேசித்தார். தசரத சக்ரவர்த்தி தன் மைந்தனின் முடிசூட்டு விழாவிற்கு சகல ஏற்பாடுகளும் செய்தார்.



No comments:

Post a Comment