Pages

Thursday, August 10, 2023

RAMAYANAM PART 11

 இராமாயணம் பகுதி 11

சீதையின் திருமணம்

👰 சில மாதங்கள் கழித்து ஜனகருடைய மனைவி சுநைனா கருவுற்று ஒரு பெண் குழந்தையைப் பெற்றாள். அப்பெண்ணுக்கு ஊர்மிளை என்று பெயர் சூட்டினார்கள். ஜனகருடைய தம்பிக்கு இரண்டு பெண்கள் பிறந்தார்கள். அவர்களுக்கு மாண்டவி, சுருதகீர்த்தி என்று பெயர் சூட்டினார்கள்.

👰 ஒருநாள் நான்கு பெண் குழந்தைகளும் அரண்மனையில் பந்து விளையாடிக் கொண்டு இருந்தார்கள். சீதை வீசிய பந்து, ஜனகர் பூஜை செய்யும் சிவன் வில்லின் அடியில் மாட்டிக் கொண்டது. ஊர்மிளை! பந்தை எடுத்துப் போடு என்றாள், சீதை. அக்கா! பந்து சிவ தனுசின் கீழ் அகப்பட்டுக் கொண்டது. இதை அறுபதினாயிரம் பேர் எடுக்கக் கூடியது என்றாள், ஊர்மிளை. என்னம்மா ஊர்மிளை! ஒர் பந்தை எடுக்க அறுபதினாயிரம் பேர் வேண்டுமா என்ன? என்று கூறி கொண்டு அன்னம்போல் நடந்து சென்று தன் இடது கையால் வில்லை எடுத்து மூலையில் வைத்துவிட்டுப் பந்தை எடுத்தாள். ஆனால் வில்லை பழையபடியே எடுத்து மேடையில் வைக்க மறந்துவிட்டாள், சீதை.

👰 மறுநாள் ஜனகர் காலையில் பூஜை செய்ய வந்தபோது வில், மேடையில் இல்லாமல் மூலையில் வைத்து இருப்பதைக் கண்டு ஆச்சரியம் அடைந்தார். உடனே சேவகனை அழைத்து வில்லை யார் எடுத்தது என்று கேட்டார். சேவகன் இங்கு ஒருவரும் வரவில்லை என்றும் சீதை தன் தங்கையுடன் பந்து விளையாடிக் கொண்டு இருந்தார்கள் என்று கூறினான். ஜனகர் சீதையை அழைத்து வில்லை யார் எடுத்தது என்று கேட்டார். சீதை, அப்பா! நான் தான் வில்லை எடுத்து வைத்தேன் என்றாள்.

👰 என்னை மன்னித்துவிடுங்கள் அப்பா என்று கூறிவிட்டு, வில்லை இடது கையால் எடுத்து இருந்த இடத்தில் வைத்துவிட்டாள். இந்த நிகழ்வு ஜனகருக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்தது. அறுபதினாயிரம் பேர் எடுக்க வேண்டிய இந்த வில்லை ஐந்து வயது சிறுமியான சீதை எவ்வித இடர்பாடுகள் இன்றி தன் இடது கையால் எடுத்து வைத்து விட்டாளே! இந்தப் பெண்ணை நான் யாருக்கு திருமணம் செய்து கொடுப்பது என்ற யோசனையில் ஆழ்ந்தார். வில்லை வளைத்தவனுக்கே பெண்ணை திருமணம் செய்து தருவதாகப் பிரகடன் செய்தார். பலர் வந்து முயன்றும் வில்லை வளைக்க முடியமால் தோல்வியுற்றார்கள். அப்போது சீதைக்கு 12 வயது. சீதையின் திருமணம் மங்களகரமாக நடைபெறும் பொருட்டு ஒரு சத்ரயாகம் தொடங்கினார், ஜனகர். அந்த யாகத்துக்கு மன்னர்களும், மறையவர்களும் கூடினார்கள். அந்த யாகத்துக்கு சித்தா ஆசிரமத்தில் இருந்த விசுவாமித்திரருக்கு அழைப்பு வந்தது. விசுவாமித்திரர் இராமரை நோக்கி, இராமா! உன்னால் ஒரு பெரிய செயல் நடைபெற இருக்கிறது. அதற்கிடையில் நாம் ஜனகருடைய யாகத்துக்குப் போக வேண்டும் என்று கூறி இராம இலட்சுமணருடன் விசுவாமித்திரர் மிதிலையை நோக்கி புறப்பட்டார். 

👰 மூவரும் போகும் வழியில் சோனை நதியைக் கண்டார்கள். கங்கா நதியை தரிசனம் செய்தார்கள். சரவணப் பொய்கையைக் கண்டு முருகனை நினைத்து வணங்கி மகிழ்ந்தார்கள். மூவரும் மிதிலைக்கு அருகில் சேர்ந்தார்கள். அங்கு ஒரு பெரிய நதி ஒன்று இருந்தது. அந்த நதியை கடக்க பாலம் இல்லை. அந்நதியைக் கடக்க வழி ஏதேனும் உள்ளதா என்று சிந்தித்து கொண்டிருந்தபொழுது கரிய நிறத்துடன் ஒருவன் வந்து அவர்கள் முன் வணங்கி நின்றான். நீ யார்? உன் பெயர் என்ன? என்று கேட்டனர். அவன் நான் வீரப்பன் என்றான்.

👰 வீரப்பனின் சாமர்த்தியத்தை தெரிந்து கொள்ள நாளை வரை காத்திருக்கவும்....!!!

No comments:

Post a Comment