Pages

Monday, July 17, 2023

அழகும் அற்புதமும் நிறைந்த புன்னைநல்லூர் ராமர் !!!















தஞ்சாவூரில் இருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ளது புன்னைநல்லூர். சுமார் 500 வருடப் பழைமை வாய்ந்த ஆலயம், கோதண்டராமர் திருக்கோயில். இந்தக் கோயிலில் உள்ள மூலவர் ஸ்ரீகோதண்டராமர், சாளக்ராமம் எனும் கல்லால் ஆனவர். இது வேறெங்கும் காண்பதற்கு அரிதான ஒன்று சொல்லி சிலாகித்துப் பூரிக்கின்றனர் பக்தர்கள்!

வைஷ்ண சம்பிரதாயத்தில், மாப்பிள்ளை வீட்டாருக்கு துளசி மாடத்தையும் சாளக்ராமத்தையும் பெண் வீட்டார் அந்தக் காலத்தில் வழங்கி வந்தனர். இது ஒரு வழக்க மாகவே இருந்து வந்தது. சாளக்ராமம் எனும் கல், ஸ்ரீமகாவிஷ்ணுவின் அம்சம் என்று போற்றப்படுகிறது.

நேபாளத்தில் உள்ள கண்டிகை நதியில்தான் சாளக்ராமம் தோன்று வதாகச் சொல்வார்கள். நேபாள மன்னனும் தஞ்சாவூரை ஆட்சி செய்த மராட்டிய மன்னனும் ஒருகட்டத்தில் சம்பந்தியானார்கள்; நேபாள மன்னர், மாப்பிள்ளை வீட்டாரான தஞ்சை மன்னருக்கு ஏராளமான சீர்வரிசை கள் வழங்கினார்.தங்கமும் வெள்ளி யும் வழங்கினார். பட்டாடைகள் வழங்கினார். எல்லாவற்றையும் விட முக்கியமாக, சாளக்ராமத்தை வழங்கினார். சிலகாலங்கள் கழிந்தன. மகாராஷ்டிர மன்னர் பிரதாபசிங்கின் ஆளுகையின் கீழ், தஞ்சாவூர் தேசம் வந்தது. அப்போது, இந்த சாளக்ராமத்தைக் கண்டு சிலிர்த்தார் மன்னர் பிரதாபசிங்.

பொதுவாக, சாளக்ராமம் என்பது உள்ளங்கை அளவோ அல்லது அதை விட சற்று பெரிதாகவோ இருக்கும். ஆனால், தஞ்சாவூர் மன்னருக்குச் சீர்வரிசையாக மிகப் பெரிய சாளக் ராமம் வழங்கப்பட்டது. இந்த சாளக் ராமத்தைக் கொண்டு, அழகிய ஸ்ரீராமரின் விக்கிரகத்தை அமைத்தார் மன்னர். அதுமட்டுமா? அழகிய கோயிலும் எழுப்பி, அந்தக் கோயிலுக்கு நிலங்களும் பசுக்களும் தானமாக அளித்தார்.

கருவறையில் குடிகொண்டிருக்கும் இறைவன், சாளக்ராமமாக காட்சி தருவது இந்திய அளவில் அரிது என்று போற்றுகின்றனர் ஆச்சார்யப் பெருமக்கள். ராமர் குடிகொண்டிருக்கும் கருவறையின் விமானம் செளந்தர்ய விமானம் என்று சொல்லப் படுகிறது. அதாவது சௌந்தர்ய விமானத்தில், சௌந்தர்யமாக, அழகு ததும்ப காட்சி தருகிறார் ஸ்ரீகோதண்டராமர்.

ஐந்தடி உயரம்... சாளக்ராம மூர்த்தம். மூலவராக நின்ற திருக்கோலம்! ஸ்ரீலட்சுமணர், ஸ்ரீசீதாதேவி ஆகியோருடன் ஸ்ரீசுக்ரீவனும் உடனிருக்க சாந்நித்தியத்துடன் கனிவுடனும் கருணையுடனும் சேவை சாதிக்கிறார் ஸ்ரீகோதண்டராமர்.

முக்தி தரும் தலம் எனப் போற்றுகின்றனர். ஸ்ரீகோதண்டராமரை தரிசித்தால், பிறவிப் பயனை அடைய லாம். காரியங்கள் யாவும் தடையின்றி நிகழும். பாவங்கள் தொலைந்து புண்ணியங்கள் பெருகும் என்பது ஐதீகம்.

ராம நவமி நன்னாளில் கோதண்ட ராமரை, புன்னைநல்லூர் கோதண்ட ராமரை வணங்குங்கள்.மாதந்தோறும் நவமியிலும் புனர்பூச நட்சத்திர நாளிலும் இங்கு வந்து வேண்டிக் கொள்ளுங்கள். வேண்டியதை யெல் லாம் நிறைவேற்றித் தந்தருள்வார் புன்னைநல்லூர் கோதண்டராமர்.

No comments:

Post a Comment